Free Online FOOD for MIND & HUNGER - DO GOOD 😊 PURIFY MIND.To live like free birds 🐦 🦢 🦅 grow fruits 🍍 🍊 🥑 🥭 🍇 🍌 🍎 🍉 🍒 🍑 🥝 vegetables 🥦 🥕 🥗 🥬 🥔 🍆 🥜 🎃 🫑 🍅🍜 🧅 🍄 🍝 🥗 🥒 🌽 🍏 🫑 🌳 🍓 🍊 🥥 🌵 🍈 🌰 🇧🇧 🫐 🍅 🍐 🫒Plants 🌱in pots 🪴 along with Meditative Mindful Swimming 🏊‍♂️ to Attain NIBBĀNA the Eternal Bliss.
Kushinara NIBBĀNA Bhumi Pagoda White Home, Puniya Bhumi Bengaluru, Prabuddha Bharat International.
Categories:

Archives:
Meta:
March 2024
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
06/14/17
7. பௌத்த திருப்பதிகள் - 3. பௌத்தமதத் தெய்வங்கள்- 4. ஆசிவக மதம்- 5. மணிமேகலை நூலின் காலம்
Filed under: General
Posted by: site admin @ 10:25 pm

https://sites.google.com/site/budhhasangham/Home/mylaiseeni/mylaiap1


https://sites.google.com/site/budhhasangham/Home/mylaiseeni/mylaich8



https://www.youtube.com/watch?v=obq1D8sWS1E

Dr. K. JAMANADAS PROVES TIRUPATI TEMPLE AS A BUDDHIST SHRINE Dr. K. JAMANADAS PROVES TIRUPATI TEMPLE AS A BUDDHIST SHRINE

7. பௌத்த திருப்பதிகள்

    தமிழ்நாட்டிலே
பண்டைக்காலத்திலே பௌத்த மதம் சிறப்பும் செல்வாக்கும் பெற்றிருந்தது என்பதை
அறிந்தோம். பொதுவாகத் தமிழ்நாட்டிலே சிறப்புப் பெற்றிருந்ததென்றாலும்,
சிறப்பாக எந்தெந்த நகரங்களிலும் ஊர்களிலும் செல்வாக்குற்றிருந்தது என்பதை
ஈண்டு ஆராய்வோம். முதலில் சோழநாட்டில் இருந்த பௌத்த திருப்பதிகளைக்
கூறுவோம்.

    காவிரிப்பூம்பட்டினம்:
சோழநாட்டில் பேர்பெற்ற துறைமுகப்பட்டினமும் சோழர்களின் தலைநகரங்களில்
ஒன்றுமான காவிரிப்பூம்பட்டினம் பண்டைக் கால முதல் பௌத்தர்களின்
செல்வாக்குப் பெற்றிருந்தது. காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தில்
அவ்வாற்றின் வடகரையில் அமைந்திருந்த இந்தத் துறைமுகப்பட்டினம் புகார்
என்றும் பெயர் பெற்றிருந்தது. பாலிமொழியில் உள்ள பௌத்த நூல்களில்
இப்பட்டினம் ‘கவீரபட்டினம்’ என்று கூறப்பட்டுள்ளது. மிகப் பழமையானதென்று
கருதப்படுகின்ற புத்த ஜாதகக் கதைகள் ஒன்றில் இந்த நகரம் டமிள (தமிழ)
தேசத்தில் உள்ளதென்றும், அகத்தி அல்லது அகித்தி என்னும் முனிவர் தமது
பெருஞ் செல்வத்தைத் தானஞ் செய்துவிட்டுத் துறவு பூண்டு
காவிரிப்பூம்பட்டினத்தின் அருகில் இருந்த ஒரு வனத்தில் தங்கித் தவம்
செய்தாரென்றும், அப்பெரியாரைக் கண்டு வணங்கப் பெருந்திரளான மக்கள் அங்குச்
சென்று வந்ததால் அவரது தவத்துக்கு இடையூறாயிருந்தது பற்றி அவர்
அவ்விடத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கருகில் உள்ள காரைத் தீவிற்குச் சென்று
தவம் புரிந்தாரென்றும் கூறப்பட்டிருக்கின்றது. இந்த அகத்தி, அல்லது
அகித்தி என்பவர் பௌத்த முனிவர்களில் ஒருவர்.

    கி.மு
மூன்றாம் நூற்றாண்டில், அசோக சக்கரவர்த்தியின் உறவினரான மகிந்தர்,
(மகேந்திரர்) என்பவர் இலங்கைக்குச் சென்று அங்கு பௌத்தமதத்தைப்
பரப்புவதற்கு முன், சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கி அங்கு ஏழு
விகாரைகளைக் கட்டினாரென்றும், மணிமேகலை சிலப்பதிகார நூல்களில்
கூறப்படுகின்ற இந்திரவிகாரை என்பவை இவர் கட்டியவைகளேயென்றும், மகேந்திரர்
கட்டிய அந்த விகாரைகளை இந்திரன் கட்டியதாக அந்த நூல்களில்
கூறபட்டுள்ளதென்றும் சரித்திர ஆராய்ச்சியிற் சிறந்த அறிஞர்கள்
கருதுகின்றனர். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இந்த விகாரைகளின் தலைவராக அறவண
அடிகள் என்னும் தேரர் இருந்தார் எனத் தெரிகின்றது. இந்த ஏழு இந்திர
விகாரைகளையன்றி, ‘உவவனம்’ என்றும் பூஞ்சோலையின் நடுவில், பளிங்கினால்
அமைக்கப்பட்ட சிறு கோயில் ஒன்றில் புத்தரது பாதபீடிகை இருந்தது. இந்தப் பாத
பீடிகையை அப்பட்டினத்தில் இருந்த பௌத்தர்கள் வணங்கி வந்தார்கள்.

    அன்றியும்,
இப்பட்டினத்தின் முதுகாட்டினை அடுத்துச் ‘சுடுகாட்டுக் கோட்டம்’ என்று
ஏனைய மதத்தோரால் கூறப்பட்டதும், ‘சக்கரவாளக் கோட்டம்’ என்று பௌத்தரால்
போற்றப்பட்டதுமான ஒரு கோட்டம் இருந்தது. இக் கோட்டத்தினுள் ‘சம்பாபதி’
என்னும் பௌத்த தெய்வம் கோயில் கொண்டிருந்ததென்பதையும், அக்கோயிலின்
தூணொன்றில் கந்திற்பாவை என்னும் தெய்வ உருவம் அமைந்திருந்ததென்பதையும்,
‘சக்கரவாளம்’ என்னும் பௌத்தரது அண்டகோளத்தின் உருவம் இக்கோட்டத்தின்
வாயிலில் அமைக்கப்பட்டிருந்த தென்பதையும் மணிமேகலை என்னும் நூலினால்
அறிகின்றோம். சம்பாபதி கோயிலுக்குக் ‘குச்சரக் குடிகை’ என்றும், ‘முதியாள்
கோட்டம்’ என்றும் வேறு பெயர்கள் வழங்கப்பட்டன.

    கி.பி.
இரண்டாம் நூற்றாண்டில் சோழ நாட்டினை அரசாண்ட மாவண் கிள்ளி என்னும் அரசன்,
பௌத்த மதத்தைச் சேர்ந்து துறவு பூண்ட மணிமேகலையின் வேண்டுகோளின்படி,
சிறைச்சாலையை அறச்சாலையாக்கிக் கொள்ளும்படி அதனைப் பௌத்தர்களுக்குக்
கொடுத்தான் என்றும், அச்சிறைச்சாலைக் கட்டடத்தைப் பௌத்தர்கள்
அறச்சாலையாகவும் பௌத்தப் பள்ளியாகவும் அமைத்துக் கொண்டனர் என்றும்
மணிமேகலை நூலினால் அறிகின்றோம், அறவண அடிகள், மணிமேகலை முதலிய பௌத்தர்கள்
இவ்வூரில் இருந்தனர்.

    ‘இரசவாகினி’ என்னும்
பாலிமொழியில் உள்ள பௌத்த நூலில் சோழ அரசன் ஒருவன் காவிரிப்பூம்பட்டினத்தில்
சிவபெருமானுக்குக் கோயில் ஒன்று நிறுவினான் என்றும், அக்கோயிற்பணி
நடைபெறும்போது சில பௌத்த துறவிகள் வந்து சில அதிசயங்களைச் செய்து
அரசனுக்குக் காட்டி, அச்சிவன் கோயிலைப் பௌத்தக் கோயிலாக்கினார்கள் என்றும்
கூறப்பட்டிருக்கின்றது.

    கி.பி. நாலாம்
நூற்றாண்டில் அச்சுத விக்கந்தன் என்னும் களபர அரசனால் ஆதரிக்கப்பட்டவரும்,
தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்களில் பேர் பெற்றவருமான புத்ததத்த தேரர்
என்னும் பௌத்த ஆசிரியர், சோழநாட்டையும் காவிரிப்பூம் பட்டினத்தையும்
சிறப்பித்துக் கூறியிருக்கிறார். காவிரிப்பூம்பட்டினம் செல்வத் தொகுதியும்
மக்கட்கூட்டமும் நெருங்கிய இடம் என்றும், அப்பட்டினத்தில் இவர் தங்கி
இருந்த பௌத்தப் பள்ளி கணதாஸர் என்பவரால் காணப்பட்டதென்றும், அப் பள்ளி
நெடுஞ்சுவர்களால் சூழப்பெற்றுப் பெரிய வாயில்களையுடைய தென்றும், பள்ளிக்
கட்டடங்கள் பெரியனவாய் வெண்சுதை பூசப்பெற்றுக் கயிலாயம்போல வெண்ணிறமாக
விளங்கும் என்றும் தாம் எழுதிய அபிதம்மாவதாரம் என்னும் பாலி நூலில் இவர்
எழுதியிருக்கிறார். இவ்வாறு இவர் சிறப்பித்துக் கூறுகிற செய்யுட்பகுதி
சொற்சுவையும் பொருளழகும் ஓசையின்பமும் சிறந்துள்ளது என்று பாலி மொழியறிந்த
பண்டிதர்கள் புகழ்ந்து பேசுகிறார்கள். அப்பகுதி வருமாறு:

“நரநாரீ கணாகிண்ணே அஸங்கிண்ணே குலாகுலே
பீதே ஸப்பங்க ஸம்பன்னே பஸன்னே ஸரிதோதகே
நானாரதன ஸம்பன்னே விவிதாபன ஸங்கதே
காவேரிபட்டணே ரம்மே நானாராமோ பஸோபிதே
கேலாஸ ஸிகராகார பாஸாத பதிமண்டிதே
காரிதே கணதாஸேன தஸ்ஸனீய மனோரமே
விஹாரே விவிதாகார சாருபாகார கோபுரே
தத்தா பாசீன பஸ்ஸே மயா நிவஸதாஸதா
ரம்மஸல்லேக ஸாகல்ய ஸீலாதிகுண ஸோபினா
அயம் ஸுமதீனா ஸாது யாசிதேன கதோகதோ.”
    அன்றியும்,
புத்தவம்சம் என்னும் நூலுக்கு இவர் எழுதிய மதுரத்தவிலாஸினீ என்னும்
உரையின் இறுதியிலும் காவிரிப்பூம்பட்டினத்தில் கணதாசர் கட்டிய பௌத்த
விகாரையைக் கீழ்வருமாறு கூறியிருக்கிறார்:

“காவீர ஜல ஸம்பாத பரிபூத மஹீதலே
காவேரி பட்டணே ரம்மே நானா நாரீ நராகுலே
காரிதே கணதாஸேன ஸணவாசேன ஸாதுனா
விஹாரே விவிதாகார சாரு பாகார கோபுரே”
    பூதமங்கலம்:
இதுவும் சோழ நாட்டில் இருந்த பௌத்த ஊர்களில் ஒன்று; இவ்வூரில் வேணுதாசர்
என்பவர் கட்டிய பௌத்தவிகாரையில் ஆசாரிய புத்ததத்ததேரர் தங்கியிருந்தபோது
விநயவிநிச்சயம் என்னும் நூலைப் பாலிமொழியில் இயற்றினார். இந்த ஆசாரிய
புத்ததத்ததேரர் சோழ நாட்டுத் தமிழர். தம் நூல்களில் சோழ நாட்டினையும்
காவிரிப்பூம்பட்டினத்தையும் சிறப்பித்துக் கூறியது போன்று, இந்தப்
பூதமங்கலம் என்னும் ஊரையும் சிறப்பாகக் கூறியுள்ளார்.

    சோழநாட்டிற்குக்
கொப்பூழ் (நாபி) போன்றிருந்த பூதமங்கலம் வாழை, தென்னை, பனைமரங்கள் அடர்ந்த
சோலைகளாலும், அல்லி, ஆம்பல் முதலிய நீர்ப்பூக்களால் நிரம்பப்பெற்ற
குளங்களாலும் சூழப்பெற்றதென்றும், செழிப்பும் செல்வமும் பெருகிய இடம்
என்றும், காவிரியாற்றின் நீர் பாயப்பெற்ற சோலைகளையுடையதென்றும் அங்கு,
அகழியால் சூழப்பெற்ற நெடுஞ்சுவர்களையுடைய வேணுதாசர் என்பவரால் அமைக்கப்பட்ட
விகாரையில் தங்கியிருந்தபோது தாம் விநயவிநிச்சயம் என்னும் நூலை
எழுதியதாகவும் அழகுபடக் கூறுகிறார்:

“ஸெட்டஸ்ஸ சோளரட்டஸ்ஸ நாபிபூதே நிராகுலே
ஸப்பஸ்ஸ பன லோகஸ்ஸ காமே ஸம்பிண்டிதே விய
கதலீ ஸாலா தாலுச்சு நாளிசேர வனாகுலே
கமலுப்பல ஸஞ்சன்ன ஸலிலாஸய ஸோபிதே
காவேரி ஜலஸம்பாத பரிபூத மஹீதலே
இத்தே ஸப்பங்க ஸம்பன்னே மங்கலே பூதமங்கலே
பவராகார பாகார பரிஃகா பரிவாரிதே
விஹாரே வேணுதாஸஸ்ஸ தஸ்ஸனீய மனோரமே”
என்று அவர் கூறியிருப்பது காண்க.

    ஆசாரிய
புத்ததத்தர் கூறுகிற பூதமங்கலம் என்பது எந்த ஊர்? தஞ்சாவூர்
ஜில்லாவில்லுள்ள பூதலூர் என்று சிலர் கருதுவர். இது தவறு. நித்தவினோத
வளநாட்டு வெண்ணிக் கூற்றத்து நகரம் வெண்ணி. இந்த வெண்ணி நகரத்துக்கு
அடுத்துப் பூதமங்கலம் என்னும் ஊர் ஒன்று சோழநாட்டில் இருந்த செய்தி
சாசனங்களால் தெரியவருகிறது.  ( S.I.I No. 5 Inscriptions of the Tanjore
Temple Vol II. Part 1)

    தஞ்சை ஜில்லா மன்னார்குடி
தாலுகா திருவிராமேச்சரம் என்னும் பாடல்பெற்ற கோயிலில் உள்ள ஒரு சாசனம்,
தென்மலிநாட்டு மேற் பூதமங்கலம் என்னும் நாட்டையும் அங்கிருந்த
ஊர்க்காட்டுப் பகவதேவர் கோயிலையும் குறிப்பிடுகின்றது. இதிலிருந்து
பூதமங்கலம், மேற் பூதமங்கலம் கீழ்ப்பூதமங்கலம் என்று இருகூறாகப்
பிரிக்கப்பட்டிருந்த செய்தி தெரிகிறது. அன்றியும் பகவதேவர் கோயில் என்பது
புத்தர் கோயிலாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது. புத்தருக்குப் பகவன்
என்னும் பெயரும் உண்டு. மேற்கூரிய இரண்டு சாசனங்களிலும் காணப்படுகிற
ஊர்தான் புத்ததத்தர் இருந்த பூதமங்கலம் ஆகும்.

    திரு
மீனாட்சியம்மையாரும், இந்த ஊரைத்தான் புத்த தத்தர் குறிப்பிடுகிற
பூதமங்கலம் என்று கூறுகிறார்.

    இவர் தாம் நேரில் அவ்வூருக்குச் சென்று தாம்
கண்ட செய்திகளைக் கூறுகிறார். இவர் கூறுவதாவது: ஆசாரிய புத்ததத்தர் இருந்த
பூதமங்கலம் வெண்ணிக் கூற்றத்து வெண்ணி நகரைச் சேர்ந்த பூதமங்கலம் ஆகும்.
தஞ்சாவூருக்குக் கிழக்கே 20 மைலுக்கப்பால் உள்ளதும், இப்போது கோயில் வெண்ணி
என்று வழங்கப்படுகிறதும் ஆன இடம் தான் அது. இது மன்னார்குடி தாலுகாவில்
இருக்கிறது. இப்போது, பூதமங்கலம் சிறு கிராமமாக இருக்கிறது. இதற்கடுத்துள்ள
கிராமம் பள்ளிவிருத்தி என்று வழங்கப்படுகிறது. பள்ளிவிருத்தி என்பது
பௌத்தப்பள்ளிக்காக விடப்பட்ட மானியம் என்று பொருள்படும். இப்போதுள்ள
பூதமங்கலம், பள்ளிவிருத்தி என்னும் கிராமங்கள் பண்டைக்காலத்தில் பெரிய
பட்டணமாக இருந்திருக்க வேண்டும். பூதமங்கலத்தில் செங்கற்களால் கட்டப்பட்டு
அழிந்துபட்டுள்ள இரண்டு மேடுகளும், பள்ளிவிருத்தி கிராமத்தில் அவ்வாறே
அழிந்து காணப்படுகிற மூன்று மேடுகளும் காணப்படுகின்றன. இந்த மேடுகளைத்
தோண்டிப் பார்த்தால், இவற்றில் பௌத்த சின்னங்கள் ஏதேனும் கிடைக்கக்கூடும்.
இங்கு ஒரு புத்த உருவச்சிலையிருந்த தென்றும், அதைத் தஞ்சாவூருக்குக்
கொண்டுபோய் விட்டதாகவும் கூறுகிறார்கள். இவ்வூருக்கு அருகில் உள்ள
மன்னார்குடியில் இருக்கிற ஜைனக்கோயிலில் புத்தர் உருவச்சிலையொன்று
காணப்படுகிறது.

    இந்தச்
சான்றுகளினாலே, ஆசாரிய புத்தத்தத்தர் வசித்திருந்ததும் வேணுதாசர் கட்டிய
விகாரை இருந்ததுமான பூதமங்கலம் இந்த இடமாகத்தான் இருக்கக்கூடும் என்று
கருதப்படுகிறது.

    புத்தமங்கலம்: கேய
மாணிக்க வளநாட்டுத் திருவாரூர் கூற்றத்துப் புத்தமங்கலம் என்னும் ஊர்,
பேராவூர் ஆதித்தியேசுவரர் கோயில் சாசனத்தில் கூறப்படுகிறது.

    இது பௌத்தர் இருந்த ஊர் என்பது இப் பெயரே விளக்குகிறது.

    சங்கமங்கலம்:
ஜயசிம்ம குலகால வளநாட்டுத் தானவநாட்டுச் சோழசிகாமணி புரத்துக் கண்டியூரின்
மேற்குப் பகுதியில் சங்கமங்கலம் என்னும் ஊர் இருந்ததாக ஒரு சாசனம்
கூறுகிறது. இப்பெயரே இது பௌத்தர்கள் ஊரென்று தெரிவிக்கிறது (சங்கம் -
பௌத்த பிக்குகள் சங்கம்). பௌத்தராக இருந்து சைவராகிச் சிவபெருமானைக்
கல்லால் எறிந்து முத்தி பெற்ற சாக்கிய நாயனார் பிறந்த ஊர் திருச்சங்கமங்கை
என்று பெரியபுராணம் கூறுகிறது, இந்தச் சங்கமங்கலமும் சங்கமங்கையும் ஒரே
ஊராக இருக்குமோ என்று ஐயம் உண்டாகிறது.

    போதிமங்கலம்: திருவிடைக்கழி
என்னும் ஊரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் சாசனம் ஒன்று இவ்வூரைக்
குறிப்பிடுகிறது. பெரியபுராணத்தில், “சாக்கியர்தம் போதிமங்கை” என்று
கூறப்படுவது இவ்வூராக இருக்கலாம். இப்பெயரே, இது பௌத்தர்களுடைய ஊர்
என்பதைத் தெரிவிக்கிறது. இவ்வூரில் திருஞானசம்பந்தரும் பௌத்தர்களும்
சமயவாதம் செய்தனர் என்று பெரியபுராணம் கூறுகிறது. திரிபுவன சக்கரவர்த்தி
ராஜேந்திர சோழனுடைய 13ஆவது ஆண்டில், குன்றத்து நாராயணன் என்பவர், இவ்வூரில்
ஐந்து வேலி நிலம் வாங்கி, திருவிடைக்கழி சுப்பிரமணியர் கோவிலுக்குத் தானம்
செய்தார்.”

    திருவிளந்துறைக் கோயில்:
இவ்வூர் கும்பகோணம் தாலுகாவில் உள்ளது. இவ்வூரில், கி.பி. 1580 இல்,
தீத்தமாயிருந்த நாயகர் கோயில் என்னும் புத்தக் கோயில் இருந்ததாகச் சேவப்ப
நாயகர் காலத்தில் எழுதப்பட்ட சாசனம் ஒன்று கூறுகிறது.

    கும்பகோணம்:
நாகேசுவர சுவாமி திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு விநாயகர் ஆலயத்தில் பகவரிஷி
என்னும் பெயருள்ள ஒரு புத்தர் உருவம் இருக்கிறது. பகவன் என்பது புத்தர்
பெயர்களில் ஒன்று. புத்தருக்கு விநாயகன் என்னும் பெயர் உண்டென்று நிகண்டு
நூல்கள் கூறுகின்றன. புத்தர் கோயில்கள் பல, பிற்காலத்தில் விநாயகர்
(பிள்ளையார்) கோயில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோயிலும் அதில் உள்ள
புத்தர் உருவமமும் இதற்குச் சான்றாகும்.

    திருவலஞ்சுழி: தஞ்சை ஜில்லாவில் உள்ள இவ்வூர்ச் சிவன் கோயிலுக்கு வெளியே பெரியதோர் புத்தர் உருவம் அமைந்த கற்சிலை இருக்கிறது.

    பட்டீச்சரம்: தஞ்சை ஜில்லாவில் உள்ள இவ்வூர்க் கிராமதேவதை ஆலயத்தில் புத்தர் உருவச்சிலை யொன்று இருக்கிறது.

    எலயனூர்:
தஞ்சை ஜில்லாவில் நன்னிலம் தாலுகாவில் உள்ள இவ்வூரில் ஒரு புத்தர்
உருவச்சிலை இருந்தது. அவ்வுருவம், இப்போது சென்னைப் பொருட்காட்சிச்
சாலையில் கொண்டுவந்து வைக்கப்பட்டிருக்கிறது.

    பொன்பற்றி:
வீரசோழியம் என்னும் இல்க்கண நூலை எழுதிய புத்திமித்திரர் என்னும் பௌத்தர்
வாழ்ந்திருந்த ஊர் இது. சோழநாட்டு மிழலைக் கூற்றத்தைச் சேர்ந்திருந்த ஊர்
என்று கூறப்படுகிறது. இப்போது இது பொன்பேத்தி என்று வழங்கப்படுகிறது. தஞ்சை
ஜில்லா அறந்தாங்கி தாலுகாவில் உள்ளது. இப்போது புதுக்கோட்டை மாவட்டம்.

    புத்தகுடி:
சோழநாட்டில் நாகைப்பட்டினத்துக்கு அருகில் இருந்த ஊர். செயங்கோண்ட
சோழவளநாட்டுக் குறும்பூர் நாட்டில் இவ்வூர் இருந்ததாகக் குலோத்துங்கச்
சோழனது செப்புப் பட்டயம் கூறுகின்றது. ( Leiden grant)
    இவ்வூரின் பெயரே, இது பௌத்தர்கள் குடியிருந்த ஊர் என்பதைத் தெரிவிக்கின்றது.

    உறையூர்:
பாலிமொழியிலும் வடமொழியிலும் இவ்வூர் உரகபுரம் என்று கூறப்படுகிறது.
இவ்வூரில் இருந்தபோது ஆசாரிய புத்ததத்த தேரர் அபிதம்மாவதாரம் என்னும் நூலை
இயற்றினார் என அறிகிறோம். “உரகபுர நிவாஸிகேன ஆசாரியேன பத்தந்த புத்தத்தேன
கதோ அபிதம்மாவதாரோ நாமாயன,” என்று அந்நூல் இறுதியில் எழுதியிருப்பதனால்
இதையறிகிறோம். பண்டைக் காலத்தில் இங்குப் பௌத்தர்கள் இருந்தார்களெனத்
தெரிகிறது.

    பெருஞ்சேரி: மாயவரம் -
திருவாரூர் இரயில்வேயில் உள்ள மங்கநல்லூர் நிலையத்திற்கு வடகிழக்கே ஒரு
மைல் தூரத்தில் உள்ளது இவ்வூர். இங்கு 5′3′’ உயரமுள்ள, உட்கார்ந்திருப்பது
போன்ற புத்தர் உருவச்சிலை ஒன்று இருக்கிறது. இச்சிலையின் பீடத்தில் தமிழ்
எழுத்துச் சாசனம் அழிந்துபோய்க் காணப்படுகிறது. இப்போது இது இருக்கும்
இடத்திற்கு ஒரு பர்லாங்கு தூரத்தில் உள்ள ஒரு தோப்பில் இவ்வுருவம் முன்பு
இருந்தது.

    கோட்டப்பாடி: நன்னிலம்
தாலுகாவில் அம்பகரத்தூர் இரயில் நிலையத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில்
உள்ளது இவ்வூர். இங்கும் புத்தர் உருவச்சிலை ஒன்று இருக்கிறது.

    மயூரபட்டணம்:
சூத்திரபிடகத்தின் ஒரு பகுதியாகிய மஜ்ஜிம நிகாய என்னும் பகுதிக்கு ஆசாரிய
புத்த தத்த தேரர் (கி.பி 5ஆம் நூற்றாண்டின் தொடக்கம்) தாம் எழுதிய
பபஞ்சசூடானீ என்னும் உரையின் இறுதியில், மயூரபட்டணத்தில் இருந்த
புத்தமித்தர் என்னும் தேரரின் வேண்டுகோளின்படி இந் நூலை எழுதியதாகக்
கூறுகிறார். மயூரபட்டணம் சில பிரதிகளில் மயூரரூபப் பட்டணம் என்றும்
எழுதப்பட்டுள்ளது. இது மாயவரம் ஆக இருக்கலாம். மாயவரத்தை வடமொழியில்
மயூரபுரி என்று கூறப்படுவது காண்க. இவ்வூரில் கி.பி 5ஆம் நூற்றாண்டில்
பௌத்தவிகாரையும் பௌத்தர்களும் இருந்தனர் என்று அறிகிறோம்.

    நாகைப்பட்டினம்: இது சோழநாட்டைச் சேர்ந்த துறைமுகப்பட்டினம். இது தொன்றுதொட்டு பௌத்தர்களின் புண்ணிய நகரமாக இருந்துவந்தது.

“உற்றவர்க் குறுப்பறுத் தெரியின்க ணுய்த்தலை யன்ன

தீமை செய்வோர்க்கு மொத்த மனத்ததாய்,
நற்றவர்க் கிடமாகின்றது நாகையே”

என்று பௌத்தர்கள் இந்நகரைப் புகழ்ந்து கூறுவர்.

    இங்கு
அசோக சக்கரவர்த்தியார் கட்டிய பதரதிட்ட விகாரையென்று ஒரு விகாரை
இருந்தது. இந்த விகாரையில் கி.பி 5ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசாரிய
தர்மபாலர் தங்குயிருந்து நெட்டிபகரணட்டகதா என்னும் உரைநூலைப் பாலிமொழியில்
எழுதினார். நாகைப்பட்டினம் நாகைநகரம் என்றும் கூறப்படுகிறது. இங்கிருந்த
நாகாநன விகாரையில் மகா காசபதேரர் தங்கியிருந்தார்.

    கி.பி
720 ஆம் ஆண்டில் நரசிம்ம போத்த வர்மன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில்,
இந்தப் பட்டினத்தில் ஒரு பௌத்தக் கோயில் கட்டப்பட்டது. வர்த்தகத்தின்
பொருட்டுச் சீன நாட்டிலிருந்து நாகைக்கு வரும் பௌத்தர்களுக்காகச் சீன அரசன்
விருப்பப்படி அது கட்டப்பட்டது. பிற்காலத்தில் அக்கோயிலைச் ‘சீனா கோயில்’
என்று வழங்கியதாகத் தெரிகின்றது. வெனிஸ் தேசத்திலிருந்து சீனாவுக்கு
யாத்திரை சென்ற மாக்கோ போலோ என்பவர் நாகைப்பட்டினத்தில் ‘சீனா கோயில்’
என்னும் பெயருள்ள ஒரு கோயில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார்.

    
கி.பி எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த திருமங்கை யாழ்வார்
நாகைப்பட்டினத்துப் பௌத்த விகாரையொன்றில் முழுதும் பொன்னால்
அமைக்கப்பட்டிருந்த புத்த உருவச்சிலையைக் கவர்ந்துகொண்டு போய், அப்
பொன்னைக் கொண்டு திருவரங்கத் திருப்பதியில் திருமதில் எடுப்பித்தல் முதலான
திருத்தொண்டுகளைச் செய்தார் என்பது குருபரம்பரப் பிரபாவம் முதலிய வைணவ
நூல்களினால் தெரியவருகின்றது.

    கி.பி 985 முதல்
1014 வரையில் சோழ நாட்டை அரசாண்ட புகழ்பெற்ற இராசஇராச சோழன் காலத்தில்
நாகையில் ‘ஸ்ரீ சைலேந்திர சூடாமணி விகாரை’ என்னும் பௌத்தப் பள்ளி
கட்டப்பட்டது. சுமாத்திரா தீவில் ஸ்ரீ விஜய என்னும் இராச்சியத்தையும்,
பர்மா தேசத்தில் கடாரம் என்னும் இராச்சியத்தையும் அரசாண்ட ஸ்ரீமால் விஜய
கோத்துங்கவர்மன் என்னும் அரசன் வேண்டுகோளின் படி, இந்த விகாரையை
நாகைப்பட்டினத்தில் கட்டுவதற்கு இராச இராச சோழன் உத்தரவு கொடுத்தான். இந்த
விகாரை ஸ்ரீமாற விஜயகோத்துங்கனின் தந்தையான சூடாமணிவர்மன் என்பவன் பெயரால்
கட்டப்பட்டதாதலின், இதற்குச் ‘சூடாமணி விகாரை’ என்று பெயராயிற்று.

    இந்தச்
சூடாமணி விகாரைக்கு ராஜராஜப் பெரும்பள்ளி என்றும் பெயர் உண்டு.
கடாரத்தரசன் இவ்விடத்திலேயே கட்டிய மற்றொரு விகாரைக்கு ராஜேந்திர சோழன்
பெரும் பள்ளி என்று பெயர். யானைமங்கலம் முதலான ஊர்களை இவ்விகாரைக்குப்
பள்ளிச்சந்தமாக இராச இராசன் அளித்தான். ஆயினும், சாசனம் எழுதுவதற்கு
முன்னமே அவன் இறந்துவிட, அவனுக்குப் பின் அரசாண்ட இராசேந்திர சோழன்,
செப்புப் பட்டயத்தில் சாசனம் எழுதித் தந்தான். அவன் எழுதிக்கொடுத்த
சாசனங்கள் லீடன் நகரத்துப் பொருட்காட்சிச் சாலையில் இப்போது இருக்கின்றன.
இப்பொழுது இச் சாசனங்களுக்கு ‘லீடன் சாசனம்’ (Leiden Grant) என்று பெயர்
வழங்கப்படுகின்றது. Epigraphica India, Vol XXIII என்னும் நூலில் இந்தச்
சாசனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    கி.பி 14ஆம்
நூற்றாண்டில், இவ்வூரில் சீனர்கள் வியாபாரத்தின் பொருட்டு
வந்திருந்தார்கள். இவ்வூர் புத்தப்பள்ளியில் சீனர்கள் ஒரு கல்வெட்டு
எழுதிவைத்தார்கள். “14ஆம் நூற்றண்டின் இடைப் பகுதியில், எழுதப்பட்ட ‘தாவோ -
யி -சிலியோ’ என்ற சீனநூல், சீன மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று
நாகைப்பட்டினத்துப் பௌத்தப் பள்ளியில் இருந்ததாகக் கூறுகிறது” என்பர் திரு
S.K. கோவிந்தசாமி பிள்ளையவர்கள். (தென் இந்திய வணிகம், கரந்தைக் கட்டுரை.)

    பர்மா
தேசத்தில் ஹம்சவதி நாட்டைப் (Pegu) பதினைந்தாம் பௌத்த பிக்ஷுக்களும்,
சித்திர தூதன் என்னும் தூதனும் இலங்கை சென்று தங்கள் வேலையை
முடித்துக்கொண்டு மீண்டும் கப்பலேறிச் செல்லும் வழியில், கப்பல் புயலில்
அகப்பட்டு உடைந்துபோக நற்காலமாக உயிர் பிழைத்துக் கரையேறினார்கள் என்றும்,
நாகைப்பட்டினத்தை அடைந்து அங்கிருந்த ‘பதரிகாராமம் என்னும்
பௌத்தப்பள்ளியில் தங்கியிருந்தார்கள் என்றும், அப் பள்ளிக்கருகில் சீன
தேசத்து அரசனால் குகை வடிவமாகக் கட்டப்பட்டிருந்த பௌத்தப்பள்ளியில் புத்த
தேவரை வணங்கினார்கள் என்றும் பர்மா தேசத்துக் கலியாணி நகரத்துக்
கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது. இது நிகழ்ந்தது கி.பி. 1477 ஆம் ஆண்டில்.

    கி.பி.
1725 ஆம் ஆண்டில், ‘சீனாக்கோயில்’ என்னும் பெயருள்ள ஒரு கோயில்
நாகைப்பட்டினத்தில் இருந்ததென்று வாலெண்டின் (Valentyn) என்பவர்
எழுதியிருக்கிறார்.

    நாகைப்பட்டினத்துக்கு வடக்கே,
ஒன்று அல்லது இரண்டு கல் தொலைவில், ‘புது வெளிக்கோபுரம்’ என்றும்,
‘சீனாக்கோயில்’ என்றும், ‘கறுப்புக்கோயில்’ என்றும், பெயருள்ள ஒரு கோபுரம்
இருந்ததென்றும், இக்கோபுரம் நாகைப்பட்டினத்துக்கு வருகிற கப்பல்களுக்கு
ஒரு அடையாளமாகக் கடலில் தோன்றியதென்றும், இந்தக் கோபுரம், தாம் நேரில் 1849
ஆம் ஆண்டில் கண்டதென்றும் சர் வால்டர் எலியட் (Sir Walter Elliot)
எழுதியிருக்கின்றார். (படம் 1 காண்க).

    இந்தக்
கோபுரம் இருந்த இடத்தில், ஏசுவின் சபை பாதிரிமார் இப்போது கட்டடம்
கட்டியிருக்கிறார்கள். 1867 இல் இந்தக் கோபுரத்தை இடித்துவிட்டுக் கட்டடம்
கட்டிக்கொள்ள ஆங்கில அரசாங்க உத்தரவுபெற்று இதை இடித்துப் போட்டார்கள். (க
224 Indian Antiquary Vol Vii)

    இவ்விடத்தில்
இருந்த மிகப்பழைய இலுப்பை மரம் ஒன்றை ஏசுவின் சபைப் பாதிரிமார் 1856 இல்
வெட்டிய போது, அம்மரத்தின் அடியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சிரிய
பௌத்த உருவங்களைக் கண்டெடுத்தனர். இவற்றில் நான்கு உலோகத்தினால் ஆனவை.
ஒன்று பீங்கானால் செய்யப்பட்டது. இவற்றில் ஒன்று புத்தர் நின்று கொண்டு
உபதேசம் செய்வதுபோல் அமைக்கப்பட்டது. கவர்னராயிருந்த நேப்பியர் பிரபு (Lord
Napier) நாகைக்குச் சென்றபோது பாதிரிமர் இதை அவருக்குக் கொடுத்தார்கள்.
இந்த உருவத்தின் பீடத்தில், பதினொன்றாம், அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டில்
வழங்கிய தமிழ் எழுத்தில், ‘ஸ்வஸ்திஸ்ரீ ஆகமபண்டிதர் உய்யக் கொண்ட நாயகர்’
என்று எழுதப்பட்டிருக்கிறது; இன்னொரு உருவம், புத்தர் போதியின் கீழ்
அமர்ந்து தியானத்தில் இருக்கும் பாவனையாக அமைந்துள்ளது. (படம் 2 காண்க).
இன்னொன்று, புத்தர் இரு கைகளையும் உயர்த்தி அபயம் அளிப்பதுபோல்
அமைக்கப்பட்ட உருவம். இன்னொன்று சீன முறைப்படி செய்யப்பட்ட புத்தர் உருவம்.

    நாகைப்பட்டினத்தில் இப்பொழுதும் ‘புத்தன்
கோட்டம்’ என்னும் பெயருள்ள அக்கிரகாரம் இருக்கிறதென்றும், பண்டைக்
காலத்தில் இந்த இடத்தில் பௌத்தக்கோயில் இருந்திருக்க வேண்டுமென்றும்,
பௌத்தக்கோயில் அழிந்த பிறகு அந்த இடத்தில் இந்த அக்கிரகாரம் ஏற்பட்டிருக்க
வேண்டுமென்றும் கூறுவர் டாக்டர் கு கிருஷ்னசாமி அய்யங்கார் அவர்கள்.

    நாகைப்பட்டினத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட வேறு பௌத்த உருவச் சிலைகள் சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் உள்ளன.

    வெள்ளனூர்: இவ்வூர் புதுக்கோட்டையில் உள்ளது. இவ்வூர் கச்சேரியின் தென்புறத்தில் புத்தர் உருவச்சிலையொன்று இருக்கிறது.

    செட்டிபட்டி: புதுக்கோட்டை குளத்தூர் தாலுகாவில் உள்ள இவ்வூரில், 3 அடி 9 அங்குலம் உயரம் உள்ள புத்தர் உருவச்சிலை ஒன்று இருக்கிறது.

    ஆலங்குடிபட்டி: இதுவும் குளத்தூர் தாலுகாவில் உள்ள ஊர். இங்கும் 3 அடி 6 அங்குலம் உயரம் உள்ள புத்தர் உருவச்சிலை இருக்கிறது.

இனி, தொண்டை நாட்டில் சிறப்புற்றிருந்த பௌத்த ஊர்களைப்பற்றி ஆராய்வோம்.

    காஞ்சிபுரம்:
இந்த ஊர் தொன்றுதொட்டுச் சைவ, வைணவ, ஜைன, பௌத்த மதத்தவர்களுக்கு
நிலைக்களமாக இருந்துவந்தது. பௌத்தர்கள் பண்டைகாலத்தில் இங்கு அதிகமாக
இருந்தனர். இந்த ஊரில், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோக
சக்கரவர்த்தியினால் கட்டப்பட்ட ஒரு பௌத்த தூபி இருந்ததாகக் கி.பி ஏழாம்
நூற்றாண்டில் இந்த நகரத்திற்கு வந்த யுவாங் சுவாங் என்னும் சீன யாத்திகர்
எழுதியிருக்கின்றார். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட
கிள்ளிவளவன் என்னும் சோழன் தம்பி இளங்கிள்ளி என்பவன் காஞ்சிபுரத்தைத்
தலைநகராகக்கொண்டு தொண்டை நாட்டை அரசாண்ட காலத்தில், ‘பைம்பூம் போதிப்
பகவற்கு’ ஒரு தேசியம் அமைத்தான் என்று மணிமேகலையினால் அறிகின்றோம்.
இளங்கிள்ளி அரசாண்ட கி.பி இரண்டாம் நூற்றாண்டிலே, காஞ்சிபுரத்துக்குத்
தென்மேற்குத் திசையில், ‘தருமத வனம்’ என்னும் ஒரு பூந்தோட்டம்
இருந்ததென்றும், அதில் இளங்கிள்ளி ஒரு புத்த பீடிகையை அமைத்து விழாவும்
சிறப்பும் செய்தானென்றும் மணிமேகலையினால் அறிகின்றோம்.

    காவிரிப்பூம்
பட்டினத்தில் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்த அறவண அடிகள்,
பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் வந்து தங்கிப் பௌத்த மதத்தைப் போதித்து
வந்தார் என்பதும் மணிமேகலையினால் பெறப்படுகின்றது. இன்றைக்கும்,
காஞ்சிபுரத்தில் அறப்பணஞ்சேரி என்னும் ஒரு தெரு உண்டு. அது ‘அறவணஞ்சேரி’
என்பதன் மரூஉ. அறவண அடிகள் தங்கியிருந்த சேரி (சேரி = தெரு) ஆதலின், அத்
தெரு இப்பெயர் பெற்றது. இப்போது அப்பெயர் அறப்பெருஞ்செல்வி தெரு
எனமாற்றப்பட்டிருக்கிறது. அன்றியும், ‘புத்தேரித் தெரு’ என்னும் பெயருடன்
ஒரு தெரு காஞ்சிபுரத்தில் இருக்கிறது. அது ‘புத்தர் தெரு’ என்பதன் மரூஉ.
மாதவி மகள் மணிமேகலை பௌத்த தருமங் கேட்டுத் துறவு பூண்டபின்
காஞ்சிபுரத்திலே கடைநாள் வரையில் இருந்ததாக மணிமேகலை கூறுகின்றது.

    கி.பி.
5ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த புத்தகோஷ ஆசாரியர்,
பிடகநூல்களுக்கு உரைகளை எழுதியவர். இவர், தமது நண்பர்களான சுமதி, ஜோதிபாலர்
என்னும் பௌத்த பிக்ஷுக்களுடன் காஞ்சிபுரத்தில் வசித்திருந்ததாகவும்,
அவர்கள் வேண்டுகோளின்படி, இலங்கைக்குச் சென்றதாகவும் தமது மனோரதபூரணீ
என்னும் உரையில் குறிப்பிடுகிறார். புத்தகோஷர் காஞ்சியில் இருந்த போது
அவருக்கு அண்டாத்தகதா என்னும் நூல் கிடைத்ததாகவும், அந்நூல் தாம்
திரிபிடகங்களுக்கு உரை எழுதுவதற்குத் துணையாக இருந்தது என்றும்
சாமந்தபாசாதிகா என்னும் உரையில் இவர் கூறுகிறார்.

    நாளந்தா
பல்கலைக் கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இருந்த ஆசாரிய தர்மபாலரும்,
அபிதம்மாத்த சங்கிரகம் முதலிய நூல்களை இயற்றிய அநுருத்தரும் காஞ்சியில்
பிறந்தவர்கள். அநுருத்தர் காஞ்சியில் இருந்த மூல சோம விகாரையில்
இருந்தவர்.

    கி.பி 640 இல் காஞ்சிபுரத்திற்கு வந்த
யுவாங் சுவாங் என்னும் சீன யாத்திகர், காஞ்சிபுரத்தில் நூறு
பௌத்தப்பள்ளிகளும் ஆயிரம் பிக்ஷுக்களும் இருந்ததாகக் கூறுகிறார். ஆசாரிய
திக்நாகர், காஞ்சிக்கு அருகில் சிம்மவக்த்ரம் என்னும் இடத்தில் பிறந்தவர்
என்று இந்த யாத்திரிகர் கூறுகிறார். இவர் கூறுகிற சிம்மவக்த்ரம் என்னும்
ஊர் காஞ்சிக்கு அருகில் உள்ள சீயமங்கலமாக இருக்க வேண்டும்.

    காஞ்சிபுரத்தை
அரசாண்ட மகேந்திர விக்கிரமன் என்னும் பல்லவ அரசன் (அப்பர் சுவாமிகள்
காலத்தவன்), தான் எழுதிய மத்தவிலாசப் பிரகசனம் என்னும் நூலில், காஞ்சியில்
பல பௌத்தவிகாரைகள் இருந்தன என்றும், அவ்விகாரைகளுக்கெல்லாம் தலைமையாக
இருந்த பெரிய விகாரைக்கு இராஜ விகாரை என்று பெயர் இருந்ததென்றும்
கூறுகிறார்.

    காஞ்சிபுரத்தைத் தலைநகராகக்கொண்டு
அரசாண்ட பல்லவ அரசர்களுள் புத்தவர்மன் என்பவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவன்
என்று கூறப்படுகிறான். இவன் பௌத்தர்களுக்காகப் பள்ளிகளைக்கட்டி அவர்களை
ஆதரித்திருக்கக்கூடும். கி.பி எட்டாம் நூற்றாண்டில், ஹிமசீதளன் என்னும்
அரசன் பௌத்தர்களை ஆதரித்தான் என்றும், அகளங்கர் என்னும் ஜைனர்
காஞ்சிபுரத்தில் இவ்வரசன் முன்னிலையில் பௌத்தர்களுடன் சமயவாதம் செய்து
வென்று, இவ்வரசனை ஜைன மதத்தில் சேர்த்ததோடு, தோல்வியுற்ற பௌத்தர்களை
இலங்கைக்கு அனுப்பிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

    “இன்னும்
காஞ்சிபுரத்தில் கச்சீஸ்வரர் கோயில் என்று வழங்கும் ஆலயம் பூர்வத்தில்
புத்தர் கோயிலெனத் தெரிகிறது. இக்கோயிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல்
கட்டடத்தில் சில புத்த உருவங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்னும் சில,
முன்பு இருந்த உருவம் தெரியாமலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக்கின்றன. கோயில்
உள்மண்டபத்திலும் சில கல்தூண்களில் புத்த உருவங்கள் இப்போதுமிருக்கின்றன.
இது புத்தர் கோயில் என்பதற்கு மற்றோர் ஆதாரமிருக்கிறது. அதாவது இக்கோயில்
மேல்புறம் வீதிக் கடைசியிலிருந்து வரும் ஏரிக்கு ‘புத்தேரி’ என்றும்,
வீதிக்கு ‘புத்தேரித்தெரு’ என்றும் பெயர்கள் ஏற்பட்டு இப்போதும்
வழங்கிவருகின்றன.” (பக்கம் 126. திருக்குறள் ஆராய்ச்சியும், ஜைனசமய
சித்தாந்தமும், தி.அ.அநந்தநாத நயினார் எழுதியது. 1932)

    கச்சீஸ்வரர்
கோயிலுக்கு நான் சென்று பார்த்தபோது, தூண்களில் மட்டும் புத்த உருவங்களைக்
கண்டேன். கோபுர அஸ்திவாரத்தில் இருந்த புத்த உருவங்கள் காணப்படவில்லை.
புத்தேரித்தெரு என்று இப்போது வழங்கப்படுகிற தெரு முற்காலத்தில் புத்தர்
தெரு என்று வழங்கப்பட்டு அவ்வாறே விக்கிரபத்திரங்களிலும் எழுதப்பட்டு
வந்தன. புத்தேரித்தெருவின் மேற்குக் கோடியில் உள்ள கயிலாசநாதர் கோயில்
என்னும் இராஜ சிம்மேச்சரம் ஆதியில் புத்தர் கோயிலாக இருக்க வேண்டும்
என்பதற்கு அக் கோயிலின் புராண ஆதாரங்களால் யூகிக்கப்படுகிறது.

    காஞ்சி
ஏகாம்பரேஸ்வரர் கோவில் வெளிமதில் சுவரில் சில புத்த உருவங்கள் சிறப்பாக
அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜயநகர அரசனான
கிருஷ்ணதேவராயரால் 1509 இல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோயில்களை இடித்து
அக்கற்களைக்கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால்தான்
இப்புத்த உருவங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன. காஞ்சி ஏகாம்பர ஈசுவரர்
கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் ஒரு புத்த
உருவம் இருக்கிறது.

    இது பூமியைத் தோண்டியபோது
கிடைத்தது. புத்தர் நிர்வாணம் அடையும் நிலையில் கற்சிலையொன்று ஏகாம்பர
ஈசுவரர் கோயில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. படம்
காண்க.

    காஞ்சிபுரத்தில், கச்சிக்கு நாயகர் கோயில்
என்னும் புத்தர்கோயில் இருந்தது. அதற்கு மானியமாகச் செங்கற்பட்டு
ஜில்லாவில் உள்ள நாவலூர் கிராமம் விடப்பட்டிருந்தது. (S.I.Epi. Rep. 1934 –
35 P. 76) இந்தக் கோயில் இப்போது காணப்படவில்லை. காஞ்சி, கருக்கினில்
அமர்ந்தாள் கோயிலில் இரண்டு புத்தச்சிலைகள் உள்ளன. அவை, முன்பு
காஞ்சிமேட்டுத் தெருவில் இருந்தனவாம். காமாட்சியம்மன் கோயில் ஆதியில்
பௌத்தரின் தாராதேவி ஆலயம். இவ்வாலயத்தில் பல புத்த உருவங்கள் இருந்தன.
அவைகளில், 6 அடி உயரம் உள்ள நின்றவண்ணமாக அமைக்கப்பட்ட “சாஸ்தா” (இது
புத்தர் உருவம்) என்னும் உருவம் இப்போது சென்னைப் பொருட்காட்சிச்சாலையில்
இருக்கிறது. காமாட்சி அம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்பொது
காணப்படவில்லை. இக்கோயிலில் இருந்த வேறு புத்த உருவங்கள் (கருங்கல்
சிலைகள்) சில ஆண்டுகளுக்குமுன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால், அவை
பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன். இப்போது அவை
இருந்தவிடமே தெரியவில்லை. காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு
தோட்டத்தில் புத்த உருவம் ஒன்று இப்போதும் நன்னிலையில் இருக்கிறது.
இத்தோட்டத்தில் இப்போது உள்ள மண்டபத்தைக் கட்டியபோது, அதன் அடியில் சில
புத்த உருவங்களைப் புதைத்துவிட்டார்களாம்.

    கி.பி.
14ஆம் நூற்றாண்டில், இருந்த ஜாவா தேசத்துக் கவிவாணர் ஒருவர்,
காஞ்சிபுரத்தில் 14 பௌத்தப் பள்ளிகள் இருந்தன என்று கூறியுள்ளார். அந்
நூற்றாண்டில், காஞ்சியில், பௌத்தமதத்தையும் வைணவ மதத்தையும் பிரித்தறிய
முடியாதபடி இரண்டறக் கலந்திருந்தன என்று தெரிகிறது. (P. 36 Chengleput Dt.
Manual. 1879)

    அறவண அடிகள், மணிமேகலை, ஆசாரிய
புத்த கோஷர், சுமதி, ஜோதிபாலர், திக்நாத ஆசாரியார், போதி தரும ஆசாரியார்,
ஆசாரிய தருமபாலர், ஆநந்ததேரர், அநுருத்தர், புத்தாதிக்யர் முதலிய பேர்
பெற்ற தேரர்கள் இவ்வூரில் வசித்தவர்கள்.

    இவர்கள்
அன்றியும்,காஞ்சிபுரத்தில், கி.பி 9முதல் 11ஆவது நூற்றாண்டு வரையில் இருந்த
சில பௌத்தப் பெரியார்களின் பெயர்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.
இப்பெயர்கள், பாடலிபுரத்தில் உள்ள பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ள
பௌத்த உருவங்களின் பீடத்தில் நாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்தப்
பௌத்த உருவங்கள், கயா ஜில்லாவில் உள்ள குர்கிஹார் என்னும் இடத்தில் இருந்து
கிடைத்தன. குர்கிஹார், பண்டைக் காலத்தில் குக்குட பாதகிரி என்னும் பௌத்த
இடமாக இருந்தது. இங்கிருந்து கிடைத்த, உலோகங்களால் செய்யப்பட்ட பௌத்த
உருவங்களில் 17 உருவங்கள் காஞ்சிபுரத்திலிருந்த பௌத்தப் பெரியவர்களால்
அளிக்கப்பட்டவை. (Ninety Three Inscriptions on the Kurkihar bronzes.
Patna Museum. by A. Banerji Sastri. The journal of the Bihar andOrissa
Research Society Vol. xxvi. 1940 ). அவர்கள் பெயர் வருமாறு:

    அம்ருதவர்மன்,
புத்தவர்மன், தர்மவர்மன், தூதசிம்மன், பிரபாகரசிம்மன், மஞ்சுஸ்ரீ,
வீரியவர்மன், புத்தவர்மன், (இவர் காஞ்சியில் இருந்த கந்தகுடியில்
இருந்தவர். புத்தர் கோயிலுக்குக் கந்தகுடி என்பது பெயர்.) புத்த ஞானர்,
சுகசுகர், விரோசன சிம்ம ஸ்தவிரர் (இவர் காஞ்சிக்கு அருகில் உள்ள நரசிம்ம
சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரில் பிராமண குடும்பத்தில், பிறந்து, வேத
வேதாந்தங்களைக் கற்றுணர்ந்து, பின்னர் பிரஞ்ஞசிம்மர் அன்னும் பௌத்தகுருவின்
சீடராகி விரோசன சிம்ம ஸ்தவிரர் என்னும் துறவுபெயர் கொண்டவர்.) ரகுலவர்மர்,
சந்திரவர்மர், நாகேந்திரவர்மர், வீரவர்மர், அவலோகித சிம்மர் (இவர் கேரள
தேசத்திலிருந்து வந்து காஞ்சியில் தங்கியவர்.) இவர்கள் எல்லோரும் பௌத்த
பிக்ஷுக்கள் என்று தெரிகின்றனர். இவர்களில் வர்மர் என்னும் பெயருடையவர்கள்
பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். இவர்கள் கி.பி 9
முதல் 11ஆம் நூற்றண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்தவர்கள்.

    திருப்பாதிரிப்புலியூர்:
இப்பொழுது கூடலூருக்கு அருகில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில்
முற்காலத்தில் பௌத்தர் இருந்தனரென்றும், அங்குப் பௌத்தப் பல்கலைக்கழகம்
ஒன்றிருந்ததென்றும் கூறுவர். ஆயினும், அவற்றைப் பற்றிய வரலாறுகள் ஒன்றும்
தெரியவில்லை.

    சங்கமங்கை: இதுவும் தொண்டை
நாட்டிலிருந்ததாகத் தெரிகிறது. பௌத்தராயிருந்து, பின்னர் காஞ்சிபுரஞ்
சென்று பௌத்த தருமத்தை நன்கு கற்று, பின்னர் சைவசமயத்தைச் சேர்ந்த சாக்கிய
நாயனார் இவ்வூரில் பிறந்தவர். இந்த ஊரின் பெயரே, இது பௌத்தரது ஊர் என்பதை
தெரிவிக்கும். சங்கம் என்பது புத்த, தர்ம, சங்கம் என்னும் மும்மணிகளில்
ஒன்று. அதாவது, பௌத்த பிக்ஷுக்களுக்குச் சங்கம் என்பது பெயர். எனவே,
சங்கமங்கை என்கிற பெயர் பௌத்தச் சார்பான தென்பதைத் தெரிவிக்கின்றது.

    ஆவுர்:
வட ஆர்க்காடு ஜில்லா திருவண்ணாமலை தாலுகாவில் உள்ளது இவ்வூர். இவ்வூரில்
இடிந்து போன சிவன்கோயில் சாசனம், கோப்பெருஞ்சிங்க தேவர் II உடைய 30 ஆவது
ஆண்டில் எழுதப்பட்டது. இச்சாசனத்தில், இவ்வூர் “பெண்ணை வடகரை சேதிமண்டலத்து
ஆவுர்” என்றும், இக்கோயில் திருவகத்தீஸ்வரம் உடைய நாயனார் என்றும்
கூறப்படுகிறது. இச்சாசனத்தில் ஸ்ரீமற்சேன மஹாபோதி என்னும் பெயரும்,
“சா(க்)கியர்” என்னும் பெயரும் காணப்படுகின்றன. ஆகவே இவ்வூரில் கி.பி 1272
இல் பௌத்த வணிகர் இருந்த செய்தி அறியப்படுகிறது. திரு அகத்தீஸ்வரம் உடைய
நாயனார் என்பது அகத்தி அல்லது அகஸ்தி என்னும் பௌத்த முனிவரைக் குறிக்கிறது
போலும்.

    கூவம்: செங்கற்பட்டு ஜில்லாவில்
உள்ளது. இவ்வூருக்க்குத் திருவிற்கோலம் என்னும் பெயர் உண்டு. இவ்வூரில்
பண்டைக் காலத்தில் பௌத்தர்கள் இருந்தார்கள். இவ்வூரில் இருந்த பெரிய
புத்தச்சிலை, இப்போது சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் கொண்டு வந்து
வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வூரில் இன்றும் சில பௌத்த உருவச்சிலைகள் உள்ளன.
அவற்றில் ஒன்று தர்மச்சக்கரம். அதைப் படத்தில் காண்க.

    ஞாயர்:
செங்கற்பட்டு ஜில்லா, புழற்கோட்டத்து ஞாயர் நாட்டு ஞாயர் என்று
சாசனங்களில் இவ்வூர் கூறப்படும். இவ்வூரில் புத்தேரில் உடையார் கோயில்
என்னும் பௌத்தக் கோயில் ஒன்று இருந்தது.

    நாவலூர்:
செங்கற்பட்டு ஜில்லா, பொன்னேரி தல்லுக்காவில் உள்ள ஊர். (இப்போது
திருவள்ளூர் மாவட்டம்) பௌத்தக் காஞ்சியில் (காஞ்சிபுரத்தில்) இருந்த
கச்சிக்குநாயகர் கோயில் என்னும் புத்த கோயிலின் பள்ளிச்சந்தம் (மானியம்) ஆக
இருந்தது இவ்வூர் என்று இங்குள்ள ஒரு சாசனம் கூறுகிறது. இச்சாசனத்தின்
பின்புறத்தில் தர்ம சக்கரம் (பௌத்த சின்னம்) பொறிக்கப்பட்டுள்ளது. (S.I.
Ep. Rep. 1934 – 35 Page 76, 13 of 1934 – 35)

    திருச்சோபுரம்:
தென் ஆர்க்காடு ஜில்லா, கூடலூர் தாலுகாவில் உள்ள இவ்வூர் மங்களபுரீசுவரர்
கோயில் முன்மண்டபத்து மேல்தளத்தில் உள்ள ஒரு கல் சாசனம்
சிதையுண்டிருக்கிறது. இச்சாசனத்தில் சாரிபுத்திர பண்டிதர் என்பவர் தானம்
செய்த செய்தி கூறப்படுகிறதோடு சங்கத்தார் குறிப்பிடுகின்றனர். சங்கம்
பௌத்த பிக்குச் சங்கத்தைக் குறிக்கிறது. சாரிபுத்திர பண்டிதர் என்னும்
பெயர் பௌத்தப் பெயர் ஆகும். ஆனால், இந்தச் சாரிபுத்திரரும்,
திருஞானசம்பந்தருடன் வாதம் செய்த சாரிபுத்தரும் வெவ்வேறு ஆட்கள். இந்தச்
சாசனம், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் I காலத்தில் கி.பி 1264-65 இல்
எழுதப்பட்டது. (113 of1914 Ep 1904. P. 44)

    பல்லாவரம்:
பல்லவபுரம் என்பதன் திரிபு இப்பெயர். காஞ்சிபுரத்துக்குத் தென்மேற்கே 3
மைலுக்கப்பால் இருக்கிறது. இவ்வூரில், காஞ்சிபுரத்தை அரசாண்ட பல்லவ
அரசகுடும்பத்தார் வாழ்ந்திருந்தார்கள் ஆகையால், இவ்வூர் இப்பெயர் பெற்றது.
இப்போது இது சிறு கிராமமாக இருக்கிறது. பல்லவர் காலத்தில் இவ்வூர்
சிறப்புற்றிருக்க வேண்டும். இவ்வூரில், முதலாவது மகேந்திரவர்மன்
கற்பாறையைக் குடைந்து அமைத்த குகைக்கோயில் ஒன்று இருக்கிறது. 15-7-46 இல்
இவ்வூருக்குச் சென்றிருந்தபோது இவ்வூருக்கு அண்மையில் உள்ள கணிகிலுப்பை
என்னும் ஊரில் புத்தர் உருவச்சிலையொன்றை ஏரிக்கரையில் கண்டேன். இவ்வுருவம்,
ஏரிக்கரைக்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, அவ்வூர் விநாயகர்
கோயிலுக்குப் பக்கத்தில் இருந்தது. விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில்,
இந்தப் புத்தர் உருவம் இருந்த கருங்கல் பீடம் அழியாமல் இருக்கிறது.
அவ்வூர்த்தெருவின் எதிர்க்கோடியில் பௌத்தர்களுடைய தர்மச்சக்கரம்
பொறிக்கப்பட்ட கருங்கல் நாட்டப்பட்டிருக்கிறது. புத்தர் கோயிலை இடித்து
அந்த இடத்தில் விநாயகர் ஆலயம் கட்டியிருக்கிறார்கள். பிறகு, புத்த உருவத்தை
ஏரிக்கரையில் கொண்டுப்போய்ப் போட்டுவிட்டார்கள். பண்டைக் காலத்தில்
புத்தர் கோயிலாக இருந்தவை, பிற்காலத்தில் விநாயகர் கோயிலாக மாற்றப்பட்டன
என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பல்லவ அரச குடும்பம் இருந்த இவ்வூரில்
புத்தர் ஆலயம் இருந்தது வியப்பன்று. ஏனென்றால், பல்லவ குடும்பத்தில் ஒரு
பிரிவினர் பௌத்தர்களாக இருந்தனர். புத்தவர்மன் என்னும் பெயரைச் சூடிய
பல்லவ அரசர்கள் சாசனங்களில் குறிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள புத்த
விக்கிரகமும், வர்மச்சக்கரக் கல்லும் இவ்வூரில் புத்த கோயில் இருந்ததை
வலியுறுத்துகின்றன.

    மாங்காடு:
செங்கல்பட்டு ஜில்லா, சைதாப்பேட்டை தாலுகா பூந்தமல்லிக்கு அருகில்
இருக்கிறது இக்கிராமம். இவ்வூர் வெள்ளீசுவரர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டுச்
சாசனம் ஒன்று, திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் சுந்தரபாண்டிய
தேவர் I (1251-64) காலத்தில், அவரது 5 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில்,
இங்கிருந்த பள்ளிக்கு (புத்தர் கோயில்) மாங்காடு கிராமம், பள்ளிச்
சந்தமாகக் கொடுக்கப்பட்டதென்று எழுதப்பட்டுள்ளது. (788, 358 0f 1908 Top.
List Vol. 1.)

    இவ்வூரில் மூன்று மகாயான பௌத்த
உருவங்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று தலையுடைந்து கிடக்கிறது.
அன்றியும், மாங்காட்டுக்கு அருகில் உள்ள பட்டு என்னும் கிராமத்தில் ஒரு
விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில், புத்தர் உருவச்சிலையொன்று இருக்கிறது.
இதற்கு அருகில் தர்மராஜா கோயிலும் இருக்கிறது. இங்கு ஆதியில், புத்தர்
கோயிலை அழித்து விநாயகர் கோயிலையும் தர்மராஜா கோயிலையும் கட்டியிருக்க
வேண்டும். புத்தர்கோயிலை, விநாயகர் கோயிலாகவும், தர்மராஜர் கோயிலாகவும்
அமைப்பது பிற்காலத்து வழக்கம். பட்டுக்கிராமத்தில் இருந்த புத்தர்
உருவச்சிலை இப்போது சென்னைப் பொருட்காட்சிச் சாலையில்
வைக்கப்பட்டிருக்கிறது.

    இரண்டாங்காடு:
செங்கற்பட்டு ஜில்லா ஸ்ரீபெரும்புதூர் தாலுகா குன்றத்தூருக்கு அருகில்
உள்ளது இரண்டாங்காடு. இங்கு புத்தர் உருவச்சிலையொன்று இருக்கிறது.
இவ்வூருக்குப் புத்தவேடு என்று பெயர் கூறப்படுகிறது.

இனி, பாண்டி நாட்டில் பௌத்தர் இருந்த ஊர்களைப் பற்றி ஆராய்வோம்:

    மதுரை: இந்த நகரத்தில் பௌத்தப் பள்ளிகள் இருந்தன வென்பதை மதுரைக் காஞ்சி என்னும் நூலினால் அறிகிறோம்.

“திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை
யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்
தாமு மவரு மோராங்கு விளங்கக்
காமா கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் கையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளி”
    இதன்
உரை: திண்ணிய ஒளியினையுடைய பேரணி கலசங்களையுடையவராய் விருப்பம் அழகு பெற்ற
பெரிய இளமையினையுடைய பெண்டிர், தாம் முயங்குதலைச் செய்து கூடிப்
பாதுகாக்குங் கணவரையுங் கூட்டிக்கொண்டு, தாது சேர்ந்த செவ்வித்தாமரைப்
பூவைப் பிடித்தாற்போல ஒள்ளிய சிறு பிள்ளைகளையும் எடுத்துக் கொண்டு, தாமும்
கணவரும் பிள்ளைகளும் சேரச் சீலத்தாலே விளங்கும்படியாகப் பூசைக்கு வேண்டும்
பூவினையுடையவராய்த் தூபங்களையுடையராய் வணங்கினராய் மிகுத்துத் துதித்துப்
பாதுகாத்தலை நடத்தும் பௌத்த பள்ளி. இவ்வுரை நச்சினார்க்கினியர் எழுதியது
ஆகும்.

    அசோக சக்கரவர்த்தி மதுரைக்குக்
கீழ்த்திசையில் கட்டிய ஒரு பௌத்த விகாரை இடிந்து பழுதுபட்ட நிலையில்
இருந்ததென்றும், அதற்குச் சற்றுச் சேய்மையில் மகேந்திரர் கட்டிய பௌத்த
பள்ளியொன்றும் அழிந்து போகும் நிலையில் இருந்ததென்றும் கி.பி ஏழாம்
நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டில் பிரயாணம் செய்த யுவாங் - சுவாங்
என்னும் சீனர் எழுதியிருக்கின்றார். மதுரையில், கி.பி இரண்டாம்
நூற்றாண்டில் ‘சிந்தா தேவி’ என்னும் அம்மன் கோயில் ஒன்று இருந்ததாக
மணிமேகலையினால் தெரியவருகின்றது. இந்தக் கோயிலைப் பௌத்தர்களின் தாராதேவி
கோயில் என்று ஆராய்ச்சியாளரிற் சிலர் கருதுகின்றார்கள்.

    அரிட்டாபட்டி: மதுரை
ஜில்லாவில் இப்போது குக்கிராமமாயுள்ள ஓர் ஊர். கி. மு மூன்றாம்
நாற்றாண்டில் இலங்கையை அரசாண்ட தேவனாம்பிரிய திஸ்ஸன் என்னும் ஆரசனுடைய
அம்மானாராகிய அரிட்டர் என்னும் பௌத்த பிக்ஷு, மகேந்திரருடன் சேர்ந்து
பாண்டி நாட்டில் பௌத்த மதத்தைப் பரவச் செய்தாரென்றும் அந்த அரிட்டர்
என்பவர் இந்த ஊருக்கு அருகில் உள்ள மலைக்குகையில் வாழ்ந்து வந்தார்
என்றும், ஆகவே இவ்வூருக்கு அவர் பெயர் வழங்கலாயிற்று என்றும்
ஆராய்ச்சிவல்ல அறிஞர் கருதுகின்றனர். இந்த அரிட்டாபட்டிக் கருகில் உள்ள
பௌத்தக் குகைகளில் அசோக மன்னர் காலத்தில் வழங்கிய பிராமி எழுத்துக்கள்
பொறிக்கப்பட்டுள்ளன. இது பண்டைக் காலத்தில் பௌத்தக் கிராமமாயிருந்தது.
பிற்காலத்தில் அழிந்து இப்போது குக்கிராமமாக இருக்கிறது.

    பொதிகை:
பொதிகை மலையும் பௌத்தர்களின் புண்ணிய மலைகளில் ஒன்றாகப் பிற்காலத்தில்
கருதப்பட்டு வந்தது. அந்த மலையில் அவலோகிதீஸ்வரர் என்னும் போதிசத்தர்
வீற்றிருக்கிறார் என்பதும், அவரிடம் அகத்தியர் தமிழ் கற்றார் என்பதும்
பௌத்தர்களின் கொள்கை. இந்த மலையை அடுத்து ‘மலைய நாடு’ என்னும் பெயருடைய
நாடு இருந்தது. அந்நாட்டில் தந்திரயான பௌத்த மதத்தவராகிய வச்சிரபோதி (கி.பி
661-730) என்பவர் பிறந்தார். சீன தேசத்திலும், ஜப்பான் தேசத்திலும் சென்
பௌத்த (Zen Buddism) மதத்தைப் பரப்பியவர் இவரே.

    தஞ்சை:
பாண்டிநாட்டில் இருந்த தஞ்சாவூர். இந்த ஊரில் வாணன் என்னும் சிற்றரசன்
ஒருவன்மீது இயற்றப்பட்ட தஞ்சைவாணன் கோவை என்னும் ஒரு நூல் தமிழில் உண்டு.
பாலி மொழியில் பதினான்கு நூல்களை இயற்றிய பேர்பெற்ற பௌத்த பிக்ஷுவாகிய
ஆசாரிய தர்மபாலர் இந்த ஊரில் பிறந்தார். இந்த ஊரிலும் பௌத்தர்கள்
இருந்தனர்.

    திருமாலிருஞ்சோலை: ‘அழகர்மலை’
என்று வேறு பெயருள்ள இந்த இடம் இப்போது வைணவத் திருப்பதிகளில் ஒன்று.
இங்குள்ள மலைக்குகைகளில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு
உள்ள பெரியாழ்வார் நந்தவனத்துக்கு எதிரில் உள்ள குளம் ஆராமத்துக் குளம்
என்று பெயர் வழங்கப்படுகிறது. ஆராமம் என்பது சங்கராமாமம். அதாவது பௌத்த
பிக்ஷுக்கள் வசிக்கும் இடம். அன்றியும், இக்கோயிலின் பழைய ஸ்தல விருக்ஷம்
போதி (அரச) மரம் என்று கூறப்படுகிறது. இக்குறிப்புகள் யாவும் இது
பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயிலாக இருந்ததென்பதைக் காட்டுகின்றன.

    தென்கரை: திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள ஊர். இங்கு புத்தர் உருவச்சிலை யொன்று இருக்கிறது. (P.I.M.A.R. 1916 – 17.)

ஆசாரிய
தம்மபாலர், வச்சிரபோதி, தம்மகீர்த்தி முதலிய பௌத்தப் பெரியார்கள் பாண்டிய
தேசத்தில் இருந்தவர் ஆவர். பாண்டியதேசம், பாலி மொழியில் தம்பராட்டா
(தாம்பிரபரணி தேசம்) என்று கூறப்படுகிறது. பாண்டியநாட்டில், பாண்டவ
மலைகளும் அவற்றில் பிராமி எழுத்துக்களும் அதிகமாகக்காணப்படுகின்றன.
ஜைனமதத்திற்கு முன்பு, பௌத்தமதம் பாண்டியநாட்டில் சிறப்புற்றிருந்தது
என்பதற்குப் போதிய ஆதாரங்கள் உள.

இனி, சேரநாட்டில் இருந்த பௌத்த ஊர்களை ஆராய்வோம்:

    வஞ்சிமாநகர்: இப்போது
மலையாள தேசமாக மாறிவிட்ட கேரள தேசம் பண்டைக்காலத்தில் தமிழ் நாடாக
இருந்தது. அப்போது அதற்குச் சேரநாடு என்று பெயர். அதன் தலைநகராக இருந்தது
வஞ்சிமாநகர். கி. பி இரண்டாம் நாற்றாண்டில் வாழ்ந்திருந்த சிலப்பதிகாரக்
கதைத் தலைவனாகிய கோவலன் என்பவனுடைய மூதாதை, கோவலன் என்னும் பெயருடையவன்,
இந்த நகரத்தில் சிறந்ததொரு புத்தசேதியம் கட்டினான் என்று மணிமேகலையினால்
தெரிகின்றது. சிலப்பதிகாரக் தலைவனாகிய கோவலனது ஒன்பது தலைமுறைக்கு முற்பட்ட
பாட்டனான இந்தக் கோவலன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு உற்ற நண்பன்
என்பதும், பாதபங்கய மலையிலிருந்து வந்த ஒரு பௌத்த பிக்ஷுவின் உபதேசங்களைக்
கேட்டு இவன் துறவு பூண்டு சேதியம் அமைத்ததோடு, தன் பொருள் முழுதும் தானம்
செய்தான் என்பதும் தெரிகின்றன. இவன் கி. மு முதல் நூற்றாண்டின்
முற்பகுதியில் இருந்தவனாகலின், இந்தச் சேதியம் கட்டப்பட்டதும்
அக்காலமாகும். கி. பி இரண்டாம் நாற்றாண்டில், இந்தச் சேதியமும் இன்னும் பல
பௌத்தப் பள்ளிகளும் இருந்ததாகவும், கோவலன் தந்தை மாசாத்துவானும்
மணிமேகலையும், அறவண அடிகளும் இந்த நகரத்திற்சென்று இங்கிருந்த பௌத்த
விகாரைகளைத் தொழுதனரென்பதாகவும் மணிமெகலை கூறுகிறது.

    பாண்டவமலைகளும் கழுகுமலைகளும்:
தமிழ்நாட்டில் இருந்த பௌத்த திருப்பதிகள் சிலவற்றை மேலே கூறினோம்.
பண்டைக்காலத்திலே தமிழ்நாடு முழுவதும் பௌத்த, ஜைன சமயங்கள் பரவியிருந்தன
என்பதைச் சாசனங்களும் நூல்களும் சான்று பகர்கின்றன. கி.பி 7ஆம்
நூற்றாண்டிலே, சைவசமயம் குன்றி பௌத்த மதமும், சமண சமயமும்
பரவியிருந்ததென்றும், இதனைக் கண்டசிவபாத இருதயர் மனம் வருந்திச்
சிவபெருமானிடம் முறையிட்டார் என்றும், பௌத்த சமண மதங்களை அழித்துச்
சைவசமயத்தைப் பரவச் செய்வதற்காகத் திருஞான சம்பந்தர் பிறந்தார் என்றும்
பெரியபுராணம் கூறுகிறது.

மேதினிமேல் சமண்கையர் சாக்கியர்தம் பொய்மிகுந்தே
ஆதிஅரு மறைவழக்கம் அருகிஅரன் அடியார்பால்
பூதிசா தளவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண்
டேதமில்சீர் சிவபாத விருதயர்தாம் இடருழந்தார்.”
            (பெரிய புராணம் திருஞான சம்பந்தர் - 18)
    இவ்வாறு
அக்காலத்திலே, தமிழ்நாடு முழுவதும், பௌத்தமும் சமணமும் பரவிப்
பெருகியிருந்ததாகச் சேக்கிழார் கூறுவது வெற்றுரையன்று: உண்மையே. மூவர்
தேவாரத்தையும் தேவாரம் பெற்ற திருப்பதிகளின் வரலாற்றையும் ஆழ்ந்து
ஆராய்ந்து பார்த்தால், பௌத்தமும் சமணமும் ஒவ்வொரு ஊரிலும் பரவியிருந்த
செய்தியை யறியலாம். இந்த முறையில், நான் ஆராய்ந்து பார்த்த வரையில்,
தேவாரம் பெற்ற திருப்பதிகளிலெல்லாம் மூவர் காலத்திலும், அதற்குப்
பிற்பட்டகாலத்திலும் பௌத்த சமயமும் சமன சமயமும் சிறப்புற்றிருந்த
செய்தியைக் கண்டேன். ஆராய்ச்சி மனப்பான்மையுடையோர், தேவாரம் பெற்ற
திருப்பதிகளின் சமய வரலாற்றை இக்கண்கொண்டு ஆராய்ந்து உண்மை காண்பாராக.

    இனி,
தமிழ்நாட்டிலே ஆங்காங்குக் காணப்படுகிற பஞ்ச பாண்டவ மலை அல்லது பாண்டவக்
குன்று என்பனவற்றில் பெரும்பாலானவை, பண்டைக்காலத்திலே பௌத்த பிக்குகள்
வசித்துவந்த மலைகள் என்பதை விளக்குவாம். தமிழ்நாட்டில் மட்டுமன்று,
ஆந்திரநாட்டிலும் இத்தகைய பாண்டவர் குன்றுகள் உள்ளன. ஆதியில், பௌத்த
பிக்குகள் வசித்துவந்த இக் குகைகள், பௌத்தமதம் செல்வாக்கிழந்த பிறகு
ஜைனர்களால் கைப்பற்றப்பட்டு, இவைகளில் சமணத்துறவிகள் வசித்து வந்தார்கள்.
பிற்காலத்திலே, சமணசமயமும் வீழ்ச்சியடைந்த பிறகு இக்குகைகள் ‘இந்து’
சமயத்தவரால் கைப்பற்றப்பட்டு இந்துக்கோயில்களாக மாற்றப்பட்டன. இந்துக்கள்
இக் குகைகளைக் கைப்பற்றிய பிறகு, இக்குகைகளில் பாரதக் கதையில் கூறப்படுகிற
பஞ்சபாண்டவர் வனவாசம் செய்த காலத்தில் தங்கி வசித்தாகக் கதைகள்
கற்பிக்கப்பட்டு, இன்றளவும் பாமரர்களால் நம்பப்பட்டு வருகின்றன. பண்டவமலை
அல்லது பண்டவ குன்று என்பது பழைய பெயர். பிற்காலத்தில், இப் பெயருடன்
பஞ்சம் என்னும் அடைமொழி சேர்த்துப் பஞ்சபாண்டவமலை என்று வழங்கப்படுகின்றன.
உண்மையில் பஞ்ச பாண்டவர் களுக்கும் இக்குகைகளுக்கும் யாதொரு தொடர்பும்
இல்லை. பௌத்த பிக்குகள் வசித்துத் தவம் செய்த குகைகளாகும் இவை. பௌத்தர்கள்
ஏன் இக் குகைகளுக்குப் பண்டவமலை என்று பெயரிட்டார்கள் என்பதன் காரணத்தைக்
கூறுவாம்.

    பிற்காலத்திலே, புத்தர் பெருமானாகத்
திகழ்ந்த சித்தார்த்த குமரன், அரசையும், அரசபோகத்தையும் துறந்து துறவுபூண்ட
உடனே, மகதநாட்டின் தலைநகரமான ராஜகிருகம் என்னும் நகரத்திற்கு வந்து,
நகரத்தில் பிச்சை ஏற்றார். அக்காலத்தில் அந்நாட்டையாண்ட அரசன் பிம்பிசாரன்
என்பவன். அவ்வரசனிடம் ஒற்றர்கள் சென்று, கண்ணைக் கவரும் உருவமைந்த ஒரு
பிக்கு நகரத்தில் பிச்சை ஏற்பதை அறிவித்தார்கள். அரசன் அவர்களை அனுப்பி
அவர் எங்கே செல்கிறார்; என்ன செய்கிறார் என்பதைக் கண்டறியும்படி ஏவினான்.
பிச்சை ஏற்ற சித்தார்த்தர், அந்நகரத்தைச் சுற்றிலுமிருந்த ஐந்து மலைகளில்
ஒன்றாகிய பண்டவமலை அல்லது பண்டவப் பதம் என்னும் குன்றின் அடிவாரத்தில்
சென்று தாம் பிச்சை ஏற்ற உணவை உட்கொள்ளத் தொடங்கினார். அரண்மனையிலே இனிய
உணவுகளை உண்டு பழகிய அவருக்கு, பிச்சையால் கிடைத்த உணவை உண்பதற்கு மனம்
இடந்தரவில்லை. வாய் குமட்டியது. ஆனாலும், தாம் துறவு பூண்டபடியால் இத்தகைய
உணவைத்தான் உண்ணவேண்டும் என்று உறுதிகொண்டு, மனம் பொறுத்துக்கொண்டு அதனை
உண்டார். இவற்றையெல்லாம் ஒற்றரால் அறிந்த பிம்பிசார அரசன் அவர் இன்னார்
என்பதையறிந்து அவரை யழைத்துத் தமது அரசாட்சியில் ஒரு பகுதியை அவருக்குக்
கொடுப்பதாகவும், துறவறத்தை விட்டு விடும்படியும் கூறினான். அதற்குச்
சித்தார்த்தர் இணங்காமல் காட்டிற்குச் சென்றுவிட்டார்.

    இந்தச்
சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டவை தான் நமது நாட்டில் உள்ள பண்டவமலைகள்.
சித்தார்த்தராகிய புத்தர் பெருமான், தமது துறவற வாழ்க்கையில் முதல் முதல்
தங்கிய மலை பண்டவமலை (பண்டு - வெண்மை). ஆகவே, அவரைப் பின்பற்றி வந்த பௌத்த
பிக்குகள் தாம் வசித்த மலைகளுக்கும் மலைக்குன்றுகளுக்கும் பண்டவமலை அல்லது
பண்டவகுன்று என்று பெயர் சூட்டியதில் வியப்பொன்றுமில்லை. என்னை? அந்தந்தச்
சமயத்தவர் தத்தம் சமயச் சார்பான பெயர்களைத் தத்தம் இடங்களுக்குச் சூட்டுவது
வழக்கமாதலால் என்க. பௌத்த பிக்குகள், புத்தர் பெருமானுடைய மரபைப்
பினபற்றிவருவது இன்றும் காணலாம். உதாரணமாக, பௌத்தர் துறவு பூண்பதற்கு
முன்னாள், தம்தம் அரசகுமாரனைப் போன்று போக போக்கியமான உடைகளை
அணிந்துகொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதன் காரணம் யாதெனின்,
சித்தார்த்த குமாரன் துறவுபூண்பதற்கு முன்நாள், இந்திரன் ஏவலால்
விசுவகர்மன் வந்து அவருக்கு ஆடை அணிகளை அழகாக உடுத்தி அலங்காரம் செய்து
சென்றான் என்பது புத்தர் வரலாறு. அம்முறைப்படி இக்காலத்துப் பௌத்தர்களும்,
துறவு பூண்பதற்கு முன்நாள் தம்மை அரச குமாரனைப் போன்று அலங்காரம் செய்து
கொள்கிறார்கள். எனவே, பண்டவமலை என்பது சித்தார்த்தர் துறவுபூண்டு முதல்
முதல் தங்கி வசித்த மலை என்பதும், அதனை நினைவுகூர்தற்பொருட்டுப் பௌத்த
பிக்குகள் தாம் வசித்த குன்றுகளுக்குப் பண்டவமலை என்று பெயரிட்டனர்
என்பதும் கருதத்தக்கது. பிறகாலத்திலெ, பௌத்த மதம் மறைந்தபின்னர் பண்டவமலை
என்பது பாண்டவமலை என்றாகி, பிறகு பஞ்சபாண்டவ மலையாகிவிட்டது. நமது நாட்டில்
உள்ள பாண்டவ மலைகளில் சிலவற்றைக் கூறுவாம்.

    அழகர் மலை:
மதுரை ஜில்லா மேலூர் தாலுகாவில் உள்ளது. அதாவது மதுரைக்கு வடமேற்கே 12
மைலில் உள்ள அழகர் மலைத்தொடர். இங்கு, கிடாரிபட்டி அழகர்மலை என்னும்
இடங்களுக்கு இடையிலே, லோகல் போர்டு ரோடுக்கு வடக்கே 2 பர்லாங்கு தூரத்தில்,
பஞ்ச பாண்டவ படுக்கை என்னும் குகையுண்டு. இது 50 கெஜம் அகலமும் 150 கெஜம்
நீளமும் உடையது. தெற்குப் பார்த்த இக்குகை, கிழக்கு மேற்காக
நீண்டிருக்கிறது. இக்குகையிலே, கற்பாறையில் கற்படுக்கைகள்
செதுக்கப்பட்டுள்ளன. அசோக சக்கரவர்த்தி காலத்துப் பிராமி எழுத்துக்கள்
இங்கு பாறையில் செதுக்கப்பட்டுள்ளன இவ்வெழுத்துக்கள் கி.மு 3 ஆம்
நூற்றாண்டில் எழுதப்பட்டவை. அழகர்கோயிலில் ஆராமத்துக்கரை, ஆராமத்துக்குளம்
என்னும் பெயர்கள், ஆதியில் அங்குப் பௌத்தர்கள் இருந்தனர் என்பதைக்
குறிக்கின்றன.

    கொங்கர் புளியங்குளம்:
மதுரை ஜில்லா, திருமங்கலம் தாலுகாவில் உள்ள இவ்வூர்க் குன்றில் ஒரு
குகையுள்ளது. அதாவது மதுரைக்குத் தென்மேற்கு 9 மைலில் உள்ளது. இதற்குப்
பஞ்சபாண்டவர் குகை என்று பெயர் வழங்குகிறது. இக்குகைகளில் பிக்ஷுக்கள்
படுத்துறங்குவதற்குக் கற்பாறையில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கி.மு 2
அல்லது 3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக்களும் இதில்
காணப்படுகின்றன.

    கீழைவளவு: மதுரை ஜில்லா
மேலூர் தாலுகா மேலூரில் இருந்து 6 மைலுக்குப்பால் உள்ளது. இங்குள்ள
பஞ்சபாண்டவக் குன்றில் அசோக அரசர் காலத்துப் பிராமி எழுத்துக்கள்
எழுதப்பட்டுள்ளன. (55 – 57 of 1910 Ep. Rep 1910. Page 76 Top Vol. II
P.1038)

    முத்துப்பட்டி: மதுரை ஜில்லா
மதுரை தாலுகா வடபழங்கியைச் சேர்ந்த கிராமம். இங்குள்ள மலையில் பஞ்சபாண்டவர்
படுக்கைகள் சுமர் 30 உள்ளன. பிராமி எழுத்துக்களும் சிதைந்து
காணப்படுகின்றன. (Ep. Rep 1910. Page 76-135 of 1903-4. Ep.Rep. 1910)

    நாகமலை:
மதுரை ஜில்லாவில் விக்கிரமமங்கலம் என்னும் ஊரில் உள்ளது. இங்கும்
கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. (Ep. 1926-27. 4.
Ep.Rp. 1908 P.52 and 59, 45 of 1908)

    திருப்பரங்குன்றம்:
மதுரை ஜில்லா திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்திற்கும் காலடி என்னும்
கிராமத்துக்கும் இடையில் உள்ள பேர்போன சுப்பிரமணியர் மலை. இக்குன்றின்
மேற்குப் பக்கத்தில், செங்குத்தான பாறையில் குகையும் அதற்குள் ஆறு
கற்படுக்கைகளும் உள்ளன. இக்குகைக்கு ஏறிச்செல்வது கடினம். இக்குகையில் பல
ஆட்கள் தங்க இடம் உண்டு. கி.மு 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிராமி
எழுத்துச் சாசனம் உண்டு. (383 of 1908)

    இம்மைலையுச்சியில்
உள்ள சிக்கந்தர் தர்க்காவுக்கு மேற்கே நூறு கெஜத்துக்கப்பால் இன்னொரு சிறு
குகையுண்டு. இக்குகையிலும் கிழக்கு மேற்காகக் குறுகிய 5 படுக்கைகள்
செதுக்கப்பட்டுள்ளன. (Ep.Rep.1909 P.68,69)

    இங்குள்ள குகையொன்றில், 999 பேருடன் நக்கீரரை ஒரு பூதம் சிறைபிடித்து வைத்திருந்ததாகக் கதை வழங்குகிறது.

    சித்தர்மலை:
மதுரை ஜில்லா மேட்டுப்பட்டியில் உள்ளது. வைகையாற்றுக்கு அருகில் உள்ள
அழகான இடம். மலைமேல் இப்போது ஒரு சிவன் கோயில் உண்டு. இக்கோயிலிலிருந்து
தெற்குப் பக்கமாகக் கீழே இறங்கும் பாதை வழியாகச் சென்றால் மலையின்
மத்தியில் ஒரு குகை காணப்படுகிறது. இக்குகையின் முன்புறம் இப்போது சுவர்
வைத்து அடைக்கப்பட்டிருக்கிறது. சிறு வழியே உள்புகுந்து சென்றால்,
குகைக்குள் 5 கற்படுக்கைகளைக் காணலாம். பிராமி எழுத்துச் சாசனங்களும்
உள்ளன. (Ep.Rp.1908 P52 and 59, 45 of 1908)

    விருச்சியூர்:
மதுரை ஜில்லா விளக்கத்தூருக்குக் கிழக்கே ஒரு மைல் தூரத்தில் உள்ளது.
இவ்வூர்க் குன்றுகள் ஒன்றில் இரண்டு குகைகள் உள்ளன. மற்றொரு நீண்டபாறையில்
இயற்கையாயமைந்த குகையொன்றுண்டு. இங்குக் கற்படுக்கைகள் பல அமைக்கப்
பட்டுள்ளன. பாறையில் 30 அடி உயரத்தில் பிராமி எழுத்துக்களும்
காணப்படுகின்றன. (38 of 1907. Ep. Rep. 1908 p. 58)

    குன்னக்குடி:
மதுரை ஜில்லா திருப்பத்தூர் தாலுகா. இங்குள்ள குன்றின்மேல் சுப்பிரமணியர்
கோயிலும், மேற்குப் பக்கத்தில் பஞ்சபாண்டவர் குகையும் உள்ளன. குகையில்
கற்படுக்கைகளும் பிராமி எழுத்துகளும் உள்ளன. (44 of 1909 P.70.Ep.Rep.1910
P.80)

    ஆனைமலை: மதுரை ஜில்லா. இம்மலைமேல்
பஞ்சபாண்டவர் குகையும் கற்படுக்கைகளும் உள்ளன. பிராமி எழுத்துகளும்
எழுதப்பட்டுள்ளன. (Ep. Rep.1907. P.60 and 61)

    கி.பி 7 ஆம் நூற்றாண்டிலே திருஞானசம்பந்தர் காலத்தில் இம்மலையில் சமணர் இருந்தார்கள் என்று தேவாரத்தினால் அறிகிறோம்.

    வீரசிகாமணி:
திருநெல்வேலி ஜில்லா சங்கரநயினார் கோயிலுக்கு 8 மைலுக்கப்பால் உள்ளது.
இவ்வூர்ப் பாறையில் பஞ்சபாண்டவர் குகையுண்டு. கற்படுக்கைகள் உள்ளன. (Ep.
Rep. 1908 P. 91)

    மருகால்தலை:
திருநெல்வேலி ஜில்லா பாளையங்கோட்டைக்கு 10 மைல் தூரத்தில் உள்ளது.
இவ்வூரில் உள்ள பூவில் உடையார் மலையில் உள்ள குகையில் கற்படுக்கைகளும்
அசோகர் காலத்துப் பிராமி எழுத்துக்களும் செதுக்கப்பட்டுள்ளன. (Ep. Rep.
1909 P. 60)

    ஆறுநாட்டார் மலை: திருச்சி
ஜில்லா கரூர் தாலுகா கரூருக்குச் சில மைல் தூரத்தில் உள்ள பூகழூரில்
இருக்கிறது. அம்மலைமேல் சுப்பிரமணியர் கோயில் இருக்கிறது. இங்கு
இயற்கையாமைந்த குகையில் கற்படுக்கைகளும் கி.மு 3 ஆம் நூற்றாண்டில்
எழுதப்பட்ட பிராமி எழுத்துக்களும் உள்ளன. (Ep. Rep. 1927 P. 50)

    திருச்சிராப்பள்ளி:
இம்மலைமேல் பேர்பெற்ற தாயுமானவர் கோயிலும் உச்சிப்பிள்ளையார் கோயிலும் சில
குகைகளும் உள்ளன. இக்குகைகளுள் ஒன்றில் கற்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இன்னும் பல பாண்டவ மலைகளைக் கூறலாம். விரிவஞ்சி
விடுகின்றோம். தமிழ்நாட்டில் மட்டுமன்று; ஆந்திரநாட்டிலும் பாண்டவ மலைகள்
சில உள்ளன. அவற்றில் ஒன்று ராஜமந்திரிக்கு 25 மைல் வடக்கில் உள்ள ரம்ப
எர்ரபாலம் என்னும் கிராமத்தில் உள்ள குன்றுகளில் பாண்டவுல மெத்த என்னும்
பெயரோடு ஒரு குன்று உள்ளது. இதற்கடுத்து குன்றுகளிற் பௌத்த விகாரைகளும்,
பள்ளிகளும் இடிந்து அழிந்து காணப்படுகின்றன. எனவே, இப்போது பஞ்சபாண்டவ மலை
என்று வழங்கும் மலைகளில் பண்டைக் காலத்தில் பௌத்த பிக்குகள் வசித்து
வந்தனர் என்பதும் ,அவற்றின் பழைய பெயர் பண்டவமலை என்பதும், பாரதக் கதையின்
பஞ்சபாண்டவருக்கும் இம்மலைகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதும்
விளங்குகிறது.

    இதுபோலவே, கழுகுமலை அல்லது
கழுகுகுன்றம் என்னும் பெயருள்ள மலைகளும் ஆதியில் பௌத்த பிக்குக்கள்
தங்கியிருந்த இடங்களாகும். புத்தபகவான் தங்கியிருந்த ஒரு மலையின் பெயர்
கிஜ்ஜகூடம் என்பது. இதுவும் மகதநாட்டின் தலைநகரமான ராஜகிருத நகரத்தைச்
சூழ்ந்திருந்த ஐந்து மலைகளில் ஒன்று. இந்த கிஜ்ஜகூடமலையில் கழுகுகள்
வசித்துவந்தன. ஆகவே, கிஜ்ஜகூடம் அதாவது கழுகுமலை என்று இம்மலைக்குப் பெயர்
வந்தது. பண்டவமலையில் புத்தர் தங்கியது போலவே கிஜ்ஜகூட மலையிலும் அவர்
அடிக்கடி சென்று தங்கியிருந்தார். இம்மலைக்குகையில் தங்கியிருந்தபோது
புத்தரை மாரன் என்னும் தேவன் அச்சுருத்தினான்; புத்தர் அஞ்சாமல்
வீற்றிருந்தார். மாரன் வெட்கி ஓடினான். புத்தர் இந்த மலையடி வாரத்தில்
உலாவிக் கொண்டிருந்தபோது, அவரைக் கொல்லுவதற்காகத் தேவதத்தன் என்பவன்
இம்மலையுச்சியிலிருந்து பெரும்பாறையை யுருட்டி வீழ்த்தினான். அப்பாறை
இவர்மேல் படவில்லை. ஆனால், சிறு கல் சிதறி வந்து இவரைக் காயப்படுத்தியது.
அன்றியும், இந்தக் கிஜ்ஜகூட மலையில் இருந்தபோது தான், ஜீவகன் என்னும்
மருத்துவன் புத்தருக்குப் பேதி மருந்து கொடுத்து அவரது உடல் நலத்தைக்
காத்தான். புத்தர் இந்த மலையில் இருந்தபோதுதான் சம்பாதி என்னும் பிரமனும்,
சக்கன் எனப்படும் இந்திரனும், அவன் பாணனாகிய பஞ்சசிகாவும், இந்தன் என்னும்
இயக்கனும், சாதூர்மகா ராஜிகர்களும் புத்தரிடம் வந்து அவரை வணங்கிச்
சென்றார்கள்.

    இந்த கிஜ்ஜகூட மலையில் புத்தர்
இருந்தபோது தான் மாகன் என்பவன் பொருட்டு மாக சூத்திரத்தையும், அபய
இராஜகுமாரன் பொருட்டு அபய சூத்திரம் எனப்படும் கிஜ்ஜகூட சூத்திரத்தையும்,
தம்மிகன் பொருட்டுத் தம்மிக சூத்திரத்தையும் அருளிச்செய்தார். புத்தருடைய
முக்கிய சீடர்களாகிய சாரிபுத்தர், ஆநந்தர், மகாகஸ்ஸபர், அநுருத்தர், புன்ன,
உபாலி, சந்த, சன்ன, மொக்கல்லானர் முதல்லானவர்களும் இந்தக் கிஜ்ஜிகூடம்
என்னும் கழுகுமலையில் சிலகாலம் வசித்து வந்தார்கள். ஆகவே, இவ்வளவு
சிறப்புடையதான கழுகுமலையின் பெயரைப் பௌத்தப் பிக்குகள் தாம் வசித்த
மலைகளுக்குச் சூட்டி வழங்கியது வியப்பு அன்று.

    செங்கற்பட்டு
ஜில்லாவில் உள்ள திருக்கழுக்குன்றம் என்னும் மலை ஆதிகாலத்தில் பௌத்தப்
பிக்குகள் வசித்த இடம் என்று தோன்றுகிறது. மதுரை ஜில்லா மதுரை தாலுகாவில்
மாங்குளம் என்னும் கிராமத்தில் கழுகுமலை என்னும் குன்றுகள் உள்ளன.
இக்குன்றுகளில் நான்கு குகைகள் உள்ளன. குகைகளில் கற்படுக்கைகளும் பிராமி
எழுத்துக்களும் காணப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கழுகுமலை
உண்டு.

    கிஜ்ஜகூடம் என்னும் கழுகுமலைகள்
ஆந்திரநாட்டிலும் உள்ளன. அவை முற்காலத்தில் பௌத்தர்களின் இடமாக இருந்தன
என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் இன்னும் பல இடங்களில்
பௌத்தச் சார்பான சான்றுகள் காணப்படுகின்றன. ஆராய்ச்சி மனப்பான்மை யுடையோர்
அவைகளை ஆராய்ந்து காண்பார்களாக.

    தமிழ்நாட்டில்
இருந்த பௌத்த திருப்பதிகள் இவைமட்டும் என்று கருத வேண்டா. இன்னும் பல பௌத்த
ஊர்கள் உள்ளன. அவற்றை ஆராய்ந்தெழுத நேரம் இன்மையால் அவற்றை இங்கு
கூறவில்லை. இதில் ஆசையுள்ளவர் ஆராய்ந்து காண்பாராக.

    இப்போது
மலையாள நாட்டில் ஆங்காங்கே ‘சாத்தன் காவு’ என்றும், ‘ஐயப்பன் கோயில்’
என்றும் சொல்லப்படும் கோயில்கள் பல உண்டு. இவை முற்காலத்தில் பௌத்தக்
கோயில்களாயிருந்தன என்று சிலர் கருதுகின்றார்கள். ‘சாத்தன்’ என்பதும்
‘சாஸ்தா’ என்பதன் திரிபு. சாஸ்தா என்பதும் புத்தருக்குப் பெயர். காவு
அல்லது கா என்பது தோட்டம். எனவே, ‘சாத்தன் காவு’ என்றால், புத்தரது
தோட்டம் என்பது பொருள். பண்டைகாலத்தில் பூந்தோட்டங்களுக்கிடையே புத்தக்
கோயில்கள் அமைப்பது வழக்கம். பௌத்தப் பள்ளியுள்ள பூந்தோட்டத்தைப் பௌத்தர்
‘ஆராமம்’ என்பர். ‘ஆராமம்’ என்றால், தோட்டம் அல்லது கா என்பதே (தொடர்புரை 2
காண்க).

    இவையன்றியும், தமிழ்நாட்டிலே மானாவூர்,
துடிதபுரம் என்னும் ஊர்களில் பௌத்தப் பள்ளிகள் இருந்தனவாகத் தெரிகின்றன.
இந்த ஊர்கள் எங்கிருந்தன என்பது விளங்கவில்லை. தக்கயாகப்பரணி உரையில்
பௌத்தபுரம் என்னும் ஊர் கூறப்படுகின்றது. இதுவும் எந்த இடத்தில்
இருந்ததென்று தெரியவில்லை.

    திருச்சாணத்துமலை:
திருவாங்கூர் நாட்டில் உள்ளது. இங்கு இப்போதுள்ள பகவதிகோயில்,
முற்காலத்தில் ஜைனக் கோயிலாகவும், அதற்கு முன்பு பௌத்தக் கோயிலாகவும்
இருந்தது.

    ஸ்ரீமூலவாசம்: திருவாங்கூர்
நாட்டில் அம்பலப்புழ தாலுக்காவில் திருக்கண்ணபுழ சாஸ்தா கோவிலுக்கு
தென்மேற்கில் கடற்கரையோரத்தில் இருந்தது. இது அக்காலத்தில் பேர்பெற்ற பௌத்த
திருப்பதி. இங்கு மூல சோமவிகாரை என்னும் பேர்பெற்ற பௌத்தப் பள்ளி
இருந்ததாக மூக்ஷிகவம்சம் என்னும் நூலும் கல்வெட்டுச் சாசனமும் கூறுகின்றன.
ஸ்ரீமூலவாசம், பிற்காலத்தில் கடலினால் அழிந்துபோயிற்று.

    ஆய்வேள்
குலத்தில் பிறந்த விக்கிரமாதித்திய வரகுணன் என்னும் அரசன் கி.பி 868 இல்
இந்தக் கோயிலுக்குத் தானம் வழங்கிய செய்தி அவனுடைய சாசனத்தினால் தெரிகிறது.
“மற்றும் கோயிற்குரியதெல்லாம் அகப்பட திருமூலவாசத்து படாரர்க்கு
அட்டிக்குடுத்தது” என்று அந்தச் சாசனம் கூறுகிறது.

    மூல
சோமவிகாரையில் இருந்து காந்தார தேசத்துக்குக் கொண்டு போகப்பட்ட லோகநாதர்
(அவலோகிதர்) உருவச் சிலையின் பீடத்தில் “தக்ஷிணாபதே மூலவாச லோகநாத” என்று
எழுதப்பட்டிருக்கிறது. மூலசோம விகாரையிலிருந்த வச்சிரநந்தி என்னும்
பௌத்தபிக்கு தன்னுடைய சீடர்களுடன் சீன நாட்டுக்குச் சென்று பௌத்த மதத்தைப்
பிரசாரம் செய்தார் என்று சொல்லுகிறார்கள்.

    திருவாங்கூரின்
மத்தியபாகத்தில் சில புத்த உருவங்கள் இப்போதும் உள்ளன. குன்னத்தூர்
தாலுக்காவில் உள்ள பள்ளிக்கல் என்னும் ஊரில் ஒரு புத்த உருவச்சிலை
இருந்தது. அது தலையுடைந்து கிடக்கிறது. இப்போது இது திருவாங்கூர் காட்சிச்
சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது.

    அம்பலப்புழ
தாலுக்காவில் கருமாடித்தோடு என்னும் ஆற்றங்கரைமேல் ஒரு புத்தர் சிலை உண்டு.
இதன் இடக்கை இப்போது ஒடிந்துவிட்டது. இந்தப் புத்தர் சிலையை அவ்வூரார்
கருமாட்டிக்குட்டன் என்று கூறுகிறார்கள். இதனைப் பூசை செய்தால்
குழந்தைகளுக்கும் கன்றுகாலிகளுக்கும் உண்டாகிற நோய் நீங்கும் என்று
கூறுகிறார்கள்.

    மாவேலிக்கர என்னும் இடத்திலும் ஓர் அழகிய புத்த உருவம் யோகாசனத்தில் அமர்ந்த நிலையில் இருக்கிறது.

    பரணிக்காவு
என்னும் இடத்திலும் ஒரு புத்த விக்கிரம் உண்டு. மருதூர் குளக்கரையில்
இருந்த புத்தர் உருவச்சிலை இப்போது கருநாகப்பள்ளி தாலுக்கா அலுவலகத்துக்கு
முன்புள்ள சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது.



பின்னிணைப்பு

1.புத்தர் தோத்திரப் பாக்கள்

வீரசோழிய
உரை, நீலகேசி உரை முதலியவற்றில் புத்தரைப்பற்றிய பாடல்கள் பல
காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றைத் தொகுத்துக் கீழே தருகிறோம். அவற்றின்
சொல்லழகு பொருளழகுகளைச் சுவைத்து இன்புறுக:-

1. போதி, ஆதி பாதம், ஓது!

2. போதிநிழற் புனிதன் பொலங்கழல்
   ஆதி உலகிற் காண்!

3. மாதவா போதி வரதா வருளமலா
    பாதமே யோது சுரரைநீ — தீதகல
    மாயா நெறியளிப்பாய் வாரன் பகலாய்ச்சீர்த்
    தாயா யலகிலரு டான்!

4. உடைய தானவர்
   உடைய வென்றவர்
   உடைய தாள்நம
   சரணம் ஆகுமே!

5. பொருந்து போதியில்
   இருந்த மாதவர்
   திருந்து சேவடி
   மருந்து ஆகுமே!

6. போதி நீழற்
    சோதி பாதம்
   காத லால்நின்
    றோதல் நன்றே!

7. அணிதங்கு போதி வாமன்
    பணிதங்கு பாதம் அல்லால்,
    துணிபொன் றிலாத தேவர்
    மணிதங்கு பாதம் மேவார்!

8. விண்ணவர் நாயகன் வேண்டக்
    கண்ணினி தளித்த காதற்
    புண்ணியன் இருந்த  போதி
    நண்ணிட நோய்நலி யாவே!

9. மருள்அறுத்த பெரும்போதி மாதவரைக்
        கண்டிலனால்! - என்செய்கோ யான்!
   அருள் இருந்த திருமொழியால் அறவழக்கங்
         கேட்டிலனால்! - என்செய்கோ யான்!
   பொருள்அறியும் அருந்தவத்துப் புரவலரைக்
        கண்டிலனால்! - என்செய்கோ யான்!

10. தோடார் இலங்கு மலர்கோதி வண்டு
        வரிபாட நீடு துணர்சேர்
    வாடாத போதி நெறிநீழல் மேய
        வரதன் பயந்த அறநூல்
    கோடாத சீல விதமேவி வாய்மை
        குணனாக நாளும் முயல்வார்
    வீடாத இன்ப நெறிசேர்வர்! துன்ப
        வினைசேர்தல் நாளும் இலரே!

11. தொழும்அடியர் இதயமலர் ஒருபொழுதும் பிரிவரிய
            துணைவர் எனலாம்
    எழும்இரவி கிரணநிகர் இலகுதுகில் புனைசெய்தருள்
         இறைவர் இடமாம்
    குழுவுமறை யவருமுனி வரருமரி பிரமருர
        கவனும் எவரும்
    தொழுதகைய இமையவரும் அறம்மருவு
        துதிசெய்தெழு துடித புரமே!

12 மணியிலகு செறிதளிரொ டலர் ஒளிய
        நிழல் அரசின் மருவி அறவோர்
    பிணிவிரவு துயரமொடு பிறவிகெட
        உரை அருளும் பெரிய அருளோன்
    துணியிலகு சுடருடைய அரசரொடு
        பிரமர்தொழு தலைமை யவர்மா
    அணியிலகு கமலமலர் அனையஎழில்
        அறிவனிணை அடிகள் தொழுவாம்!

13. எண்டிசையும் ஆகி இருள் அகலநூறி
        எழுதளிர்கள் சோதி முழுதுலகம் நாறி
    வண்டிசைகள் பாடி மதுமலர்கள் வேய்ந்து
        மழைமருவு போதி உழைநிழல்கொள் வாமன்
    வெண்டிரையின் மீது விரிகதிர்கள் காண
        வெறிதழல்கொள் மேனி அறிவனெழில் மேவு
    புண்டரிக பாதம் நமசரனம் ஆகும்
        எனமுனிவர் தீமை புணர்பிறவி காணார்!

14. கூர் ஆர் வளைஉகிர் வாள் எயிற்றுச் செங்கட்
        கொலை உழுவை காய்பசியால் கூர்ந்த வெந்நோய் நீங்க
    ஓர் ஆயிரங்கதிர்போல் வாள்விரிந்த மேனி
        உளம்விரும்பிச் சென்றாங் கியைந்தனை நீ என்றால்
    கார் ஆர் திரைமுளைத்த செம்பவளம் மேவும்
        கடிமுகிழ்த் தண்சினைய காமருபூம் போதி
    ஏர்ஆர் முனிவரர்கள் வானவர்தங் கோவே!
        எந்தாய்! அகோ! நின்னை ஏத்தாதார் யாரே!

15. மிக்கதனங் களைமாரி மூன்றும் செய்யும்
        வெங்களிற்றை மிகுசிந்தா மணியை மேனி
    ஒக்கஅரிந் தொருகூற்றை இரண்டு கண்ணை
        ஒளிதிகழும் திருமுடியை உடம்பில் ஊனை
    எக்கிவிழுங் குருதிதனை அரசு தன்னை
        இன்னுயிர்போல் தேவியைஈன் றெடுத்த செல்வ
    மக்களைவந் திரந்தவர்க்கு மகிழ்ந்தே ஈயும்
        வானவர்தாம் உறைந்தபதி மானா வூரே!

16. வான் ஆடும் பரியாயும் அரிண மாயும்
        வனக்கேழற் களிறாயும் எண்காற் புள்மான்
    தானாயும் பணை எருமை ஒருத்த லாயும்
        தடக்கை இளங் களிறாயும்  சடங்க மாயும்
    மீனாயும் முயலாயும் அன்ன மாயும்
        மயிலாயும் பிறவாயும் வெல்லுஞ் சிங்க
    மானாயும் கொலைகளவு கள்பொய் காமம்
        வரைந்தவர்தாம் உறைந்தபதி மானா வூரே!
                 (சடங்கம் - ஊர்க்குருவி)

17. பைங்கண்வாள் எயிற்றினைப் பகட்டெருத்தின் வள்உகிர்ப்
        பரூஉத்திரட் குரூஉக்கொடாட் பாலுடைச் சேனாவுடைச்
    சிங்கஏறு நான்குதாங்க மீதுயர்ந்த சேயொளிச்
        சித்திரங் குயிற்றிநூறு செம்பொனாசனத்தின்மேல்
    கொங்குநாறு போதுசிந்தி வானுளோர் இறைஞ்சிடக்
        கோதிலா அறம்பகர்ந் தமர்ந்தகோன் குளிர்நிழற்
    பொங்குதாது கொப்புளித்து வண்டுபாடு தேமலர்ப்
        போதிஎம் பிரான் அடிக்கண் போற்றின்வீட தாகுமே!

18. வீடுகொண்ட நல்அறம் பகர்ந்துமன் பதைக்கெலாம்
        விளங்குதிங்கள் நீர்மையால் விரிந்திலங்கும் அன்பினோன்
    மோடுகொண்ட வெண்நுரைக் கருங்கடற் செழுஞ்சுடர்
        முளைத்தெழுந்த தென்னலாய் முகிழ்ந்திலங்கு போதியின்
    ஆடுகின்ற மூவகைப் பவங்கடந்து குற்றமான
        ஐந்தொடங்கோர் மூன்றறுத்த நாதனாள் மலர்த்துணர்ப்
    பீடுகொண்ட வார்தளிப் பிறங்கு போதி யானைஎம்
        பிரானை நாளும் ஏத்துவார் பிறப்பிறப் பிலார்களே!


வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா
(தரவு)

19. திருமேவு பதுமஞ்சேர் திசைமுகனே முதலாக
    உருமேவி அவதரித்த உயிர் அனைத்தும் உயக்கொள்வான்
    இவ்வுலகும் கீழுலகும் மிசையுலகும் இருள்நீங்க
    எவ்வுலகும் தொழுதேத்த எழுந்தசெழுஞ் சுடர்என்ன
    விலங்குகதிர் ஓர் இரண்டு விளங்கிவலங் கொண்டுலவ
    அலங்குசினைப் போதிநிழல் அறம்அமர்ந்த பெரியோய் நீ!


(தாழிசை)
    மேருகிரி இரண்டாகும் எனப்பணைத்த இருபுயங்கள்
    மாரவனி தையர்வேட்டும் மன்னுபுரம் மறுத்தனையே!
    ‘வேண்டினர்க்கு வேண்டினவே அளிப்பனெ’ன மேலைநாள்
    பூண்டஅரு ளாள! நின் புகழ்புதிதாய்க் காட்டாதோ!
    உலகமிக மனந்தளர்வுற் றுயர்நெறியோர் நெறி அழுங்கப்
    புலவுநசைப் பெருஞ்சினத்துப் புலிக்குடம்பு கொடுத்தனையே!
    பூதலத்துள் எவ்வுயிர்க்கும் பொதுவாய் திருமேனி
    மாதவன் நீ என்பதற்கோர் மறுதலையாய்க் காட்டாதோ

    கழல் அடைந்த உலகனைத்தும் ஆயிரம்வாய்க் கடும்பாந்தள்
    அழல் அடைந்த பணத்திடை இட்டன்றுதலை ஏறினையே!
    மருள் பாரா வதம் ஒன்றே வாழ்விக்கக் கருதியநின்
    அருள்பாரா வதஉயிர்கள் அனைத்திற்கும் ஒன்றாமோ!


(அராகம்)

    அருவினை சிலகெட ஒருபெரு நரகிடை
    எரிசுடர் மறைமலர் எனவிடும் அடியினை!
    அகலிடம் முழுவதும் அழல்கெட அமிழ் துமிழ்
    முகில்புரி இமிழ்இசை நிகர் தரும் மொழியினை!


(ஈரடி அம்போதரங்கம்)
    அன்பென்கோ! ஒப்புரவென்கோ! ஒருவன் அயில்கொண்டு
    முந்திவிழித் தெரியப்பால் பொழிந்தமுழுக் கருணையை!
    நாணென்கோ! நாகமென்கோ! நன்றில்லான் பூணுந்
    தீயினைப் பாய்படுத்த சிறுதுயில்கொண் டருளினை!


(ஓரடி அம்போதரங்கம்)
    கைந்நாகத் தார்க்காழி கைக்கொண் டளித்தனையே!
    பைந்நாகர் குலம் உய்ய வாய்அமிழ்தம் பகர்ந்தனையே!
    இரந்தேற்ற படைஅரக்கர்க் கிழிகுருதி பொழிந்தனையே!
    பரந்தேற்ற மற்றவர்க்குப் படருநெறி மொழிந்தனையே!


(தணிச்சொல்)


எனவாங்கு.


(சுரிதகம்)
    அருள்வீற் றிருந்த திருநிழற் போதி
    முழுதுணர் முனிவ! நிற் பரவுதும் தொழுதக
    ஒருமனம் எய்தி இருவினைப் பிணிவிட்டு
    முப்பகை கடந்து நால்வகைப் பொருளுணர்ந்
    தோங்குநீர் உலகிடை யாவரும்
    நீங்கா இன்பமொடு நீடுவாழ் கெனவே!


அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா


(தரவு)

    மண்வாழும் பல்லுயிரும் வானவரும் இமைவரும்
    கண்வாழும் மாநகர் கிளை அனைத்தும் களிகூர
    அந்தரதுந் துபிஇயங்க அமரர்கள் நடம்ஆட
    இந்திரர்பூ மழைபொழிய இமைவர்சா மரையிரட்ட
    முத்தநெடுங் குடைநிழற்கீழ் மூரியர சரியணைமேல்
    மெய்த்தவர்கள் போற்றிசைப்ப வீற்றிருந்த ஒரு பெரியோய்!


(தாழிசை)

    எறும்புகடை அயன்முதலா எண்ணிறந்த என்றுரைக்கப்
    பிறந்திறந்த யோனிதொறும் பிரியாது சூழ்போகி
    எவ்வுடம்பில் எவ்வுயிர்க்கும் யாதொன்றால் இடரெய்தின்
    அவ்வுடம்பின் உயிர்க்குயிராய் அருள்பொழியும்  திருவுள்ளம்
    அறங்கூறும் உலகனைத்தும் குளிர்வளர்க்கும் மழை முழக்கின்
    திறங்கூற வரைகதிரும் செழுங்ககலம் நனிநாண
    ஒருமைக்கண் ஈர்ஒன்பான் உரைவிரிப்ப உணர்பொருளால்
    அருமைக்கண் மலைவின்றி அடைந்ததுநின் திருவார்த்தை!
    இருட்பார வினைநீக்கி எவ்வுயிர்க்கும் காவலென
    அருட்பாரம் தனிசுமந்த அன்றுமுதல் இன்றளவும்
    மதுஒன்று மலரடிக்கீழ் வந்தடைந்தோர் யாவர்க்கும்
    பொதுஅன்றி நினக்குரித்தோ புண்ணிய! நின் திருமேனி!


(பேரெண்)

    ஆருயிர்கள் அனைத்தினையும் காப்பதற்கே அருள் பூண்டாய்!
    ஓருயிர்க்கே உடம்பளித்தால் ஒப்புரவிங் கென்னாகும்!
    தாமநறுங் குழல்மழைக்கண் தளிரியலார் தம்முன்னர்க்
    காமனையே முனந்தொலைத்தால் கண்ணோட்டம் யாதாங்கொல்!


(சிற்றெண்)

    போர் அரக்கர் ஓர்ஐவர்க் கறவமிழ்தம் பொழிந்தனையே!
    ஆர் அமிழ்தம் மணிநாகர் குலம் உய்ய அருளினையே!
    வார்சிறைப்புள் அரையர்க்கும் வாய்மைநெறி பகர்ந்தனையே!
    பார்மிசை ஈரைந்தும் பாவின்றிப் பயிற்றினையே!


(இடையெண்)

    அருளாழி நயந்தோய் நீஇ!
    அறவாழி பயந்தோய் நீஇ!
    மருளாழி துறந்தோய் நீஇ!
    மறையாழி புரந்தோய் நீஇ!
    மாதவரில் மாதவன் நீஇ!
    வானவருள் வானவன் நீஇ!
    போதனரிற் போதனன் நீஇ!
    புண்ணியருட் புண்ணியன் நீஇ!


(அலவெண்)

    ஆதி நீஇ! அமலன் நீஇ!
    அயனும் நீ! அரியும் நீஇ!
    சோதி நீஇ! நாதன் நீஇ!
    துறைவன் நீஇ! இறைவன் நீஇ!
    அருளும் நீஇ! பொருளும் நீஇ!
    அறிவன் நீஇ!அநகன் நீஇ!
    தெருளும் நீஇ! திருவும் நீஇ!
    செறிவும் நீஇ! செம்மல் நீஇ!


(தனிச்சொல்)

எனவாங்கு.

(சுரிதகம்)

    பவளச் செழுஞ்சுடர் மரகதப் பாசடைப்
    பசும்பொன் மாச்சினை விசும்பகம் புதைக்கும்
    போதியந் திருநிழற் புனித! நிற் பரவுதும்
    மேதகு நந்தி புரிமன்னர் சுந்தரச்
    சோழர் வண்மையும் வனப்புந்
    திண்மையும் உலகில் சிறந்துவாழ் கெனவே!


வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)


    பூமகனே முதலாகப் புரந்தோர் எண்திசையும்
    தூமலரால் அடிமலரைத் தொழுதிரந்து வினவியநாள்
    காமமுங் கடுஞ்சினமுங் கழிப்பரிய மயக்கமுமாய்த்
    தீமைசால் கட்டுரைக்குத் திறற்கருவி யாய்க்கிடந்த
    நாமஞ்சார் நமர்களுக்கு நயப்படுமா றினிதுரைத்துச்
    சேமஞ்சார் நன்னெறிக்குச் செல்லுமா றருளினையே!


(தாழிசை)

    தானமே முதலாகத் தசபாரம் நிறைந்தருளி
    ஊனமொன் றில்லாமை ஒழிவின்றி இயற்றினையே!
    எண்பத்தொன் பதுசித்தி இயல்பினால் உளஎன்று
    பண்பொத்த நுண்பொருளைப் பார்அறியப் பகர்ந்தனையே!
    துப்பியன்ற குணத்தோடு தொழில்களால் வேறுபட
    முப்பதன்மேல் இரண்டுகளை முறைமையால் மொழிந்தனையே!


(அராகம்)

    ஆதியும் இடையினோ டிறுதியும்அறிகுவ
    தமரரும் முனிவரும் அரிதுநின் நிலைமையை!
    மீதியல் கருடனை விடஅர வொடுபகை
    விதிமுறை கெடஅறம் வெளியுற அருளினை!
    தீதியல் புலியது பசிகெடு வகைநின
    திருஉரு அருளிய திறமலி பெருமையை!
    போதியின் நலமலி திருநிழ லதுநனி
    பொலிவுற அடியவர் இடர்கெட அருளினை!


(பேரெண்)

    திசைமுகன் மருவிய கமலநல் நிறமென
    வசைஅறு முனிவொடு மலியும் நின்அடி!
    உயர்வுறு பெருமையோ டயரறு மயர்வொடு
    புரைஅறு நலனொடு பொலியும் நின்புகழ்!


(சிற்றெண்)

    கற்புடை மாரனைக் காய்சினந் தவிர்த்தனை!
    பொற்புடை நாகர்தந் துயரம் போக்கினை!
    மீனுரு ஆகி மெய்ம்மையிற் படிந்தனை!
    மானுரு ஆகி வான்குணம் இயற்றினை!


(இடையெண்)
    எண்ணிறந்த குணத்தோய் நீஇ!
    யாவர்க்கும் அரியோய் நீஇ!
    உண்ணிறைந்த அருளோய் நீஇ!
    உயர்பார நிறைந்தோய் நீஇ!
    மெய்ப்பொருளை அறிந்தோய் நீஇ!
    மெய்யறம்இங் களித்தோய் நீஇ!
    செப்பரிய தவத்தோய் நீஇ!
    சேர்வார்க்குச் சார்வு நீஇ!


(அளவெண்)

    நன்மை நீஇ! தின்மை நீஇ!
    நனவும் நீஇ! கனவும் நீஇ!
    வன்மை நீஇ! மென்மை நீஇ!
    மதியும் நீஇ! விதியும் நீஇ!
    இம்மை நீஇ! மறுமை நீஇ!
    இரவும் நீஇ! பகலும் நீஇ!
    செம்மை நீஇ! கருமை நீஇ!
    சேர்வும் நீஇ! சார்வும் நீஇ!


(தனிச்சொல்)

எனவாங்கு.

(சுரிதகம்)


    அலகிலா நின்றன் அடிஇணை பரவுதும்
    வெல்படைத் தொண்டைமான் விறற்சேனாபதி
    சிங்களத் தரையன் வெண்குடை யதனொடு
    பொங்குபுகழ் வில்லவன்றன் புறக்கொடை கண்டு
    பொலிதரு சேந்தன் பொன்பற்றி காவலன்
    மலிதரு பார்மிசை மன்னுவோன் எனவே.


2. சாத்தனார் - ஐயனார்

    ‘சாத்தன்’,
அல்லது ‘சாத்தனார்’ என்னும் பெயர் ‘சாஸ்தா’ என்னும் வடமொழிப் பெயரின்
திரிபு. ‘சாஸ்தா’ என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று என்பது 
‘அமரகோசம்’, ‘நாமலிங்கானுசாசனம்’ முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும்.
எனவே, ‘சாஸ்தா’ என்னும் சொல்லின் திரிபாகிய ‘சாத்தன்’ என்னும் பெயர்
புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது.
இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச்
சூட்டினர். பண்டைக் காலத்தில், அஃதாவது கடைச்சங்க காலத்தில்,
தமிழ்நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘சாத்தன்’  என்னும் பெயரைப் பெரும்பாலும்
மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரிகின்றது. பௌத்த
நூலாகிய ‘மணிமேகலை’ யை இயற்றியவர் பௌத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர்
‘சாத்தனார்’ என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. மற்றும், ‘பெருந்தலைச்
சாத்தனார்’, ‘மோசி சாத்தனார்’ , ‘வடவண்ணக்கன் பெருஞ் சாத்தனார்’, ‘ஒக்கூர்மாசாத்தனார்,
‘கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார்’ முதலான சங்ககாலத்துப் புலவர்களும்
பௌத்தர்களாக இருந்திருக்கக் கூடும் என்று, அவர்கள் கொண்டிருந்த ‘சாத்தன்’
என்னும் பெயரைக் கொண்டு கருதலாம்.

    கொங்கண நாடாகிய
துளுவதேசத்தில் உள்ள சில கோவில்களுக்குச் ‘சாஸ்தாவு குடி’ என்றும்,
‘சாஸ்தா வேஸுவரம்’  என்றும், ‘சாஸ்த்தாவுகள’ என்றும் பெயர்கள்
வழங்கப்படுகின்றன என்றும், இவை யாவும் பண்டைக் காலத்தில் பௌத்தக்
கோயில்களாக இருந்தன என்றும், பௌத்தமதம் அழிவுண்ட பின்னர் இந்தக் கோயில்கள்
இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டன என்றும் கூறப்படுவது இதனை
உறுதிப்படுத்துகின்றது. இப்பொழுதும் மலையாள நாட்டில் சாஸ்தா கோயில்கள்
உண்டு. இவற்றிற்குச் ‘சாத்தன் காவுகள்’ என்று பெயர். (காவு-கா- தோட்டம்,
அல்லது பூஞ்சோலை என்பது பொருள்.) பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த
பௌத்தக் கோயில்கள் பூஞ்சோலைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருந்ததாகப் பண்டை
நூல்களினால் தெரிகின்றது. இவற்றிற்கு ‘ஆராமம்’ (பூந்தோட்டம்) என்று  பெயர்
வழங்கிவந்தன. மலையாள நாட்டிலுள்ள  சாத்தன் காவுகளும் பண்டைக் காலத்தில்
பௌத்தக் கோயில்களாக இருந்தவை, இப்போது இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டவை
என்பது ஆராய்சிவல்லோர் கருத்து. சாத்தனாருக்கு ‘ஐயப்பன்’ என்னும் பெயரும்
மாலையாள தேசத்தில் வழங்கிவருகின்றது. காவிரிப்பூம் பட்டினத்திலும் சாத்தன்
கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தினால் தெரிகின்றது. ‘சாஸ்தா’ அல்லது
;சாத்தன்’ என்னும் வடசொல்லிற்கு நேரான தமிழ்சொல் ‘ஐயன்’ அல்லது ‘ஐயனார்’
என்பது. ‘ஐயன்’ என்பதற்கு உயர்ந்தோன், குரு, ஆசான் என்பன பொருள். பௌத்தமதம்
அழிந்த பின்னர், அம் மதக்கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்துமதம்
ஏற்றுக்கொண்டபோது, வெவ்வேறு கதைகள் கற்பிக்கப்பட்டன. வைணவர் புத்தரைத்
திருமாலின் ஓர் அவதாரமாகவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். சைவ சமயத்தோர்,
புத்தராகிய சாத்தனராரைத் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த
பிள்ளையாகக் கற்பித்து, சாத்தனாரைத் தமது தெய்வக்குழாங்களில் ஒருவராகக்
சேர்த்துக்கொண்டனர். அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் சாத்தனாரைச்
சிவபெருமானின் பிள்ளை என்றே கூறியிருக்கின்றார்.

    ‘பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்
    சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
    கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதய நல்ல
    தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்ரனாரே.’

என வரும் தேவாரத்தினாலே இதனை அறியலாம்.

    பிற்காலத்தில்,
‘சாத்தனார்’,'ஐயனார்’,'அரிஹரபுத்திரர்’ என்னும் இத்தெய்வத்தைக் கிராம
தெய்வமாய்ச் செய்து, பண்டைப் பெருமையைக் குலைத்துவிட்டனர்.

    ‘சாத்தன்’
அல்லது ‘சாஸ்தா’ என்று புத்தருக்குப் பெயர் கொடுக்கப்பட்டதன் காரணம்
என்னவென்றால், அவர் எல்லாச் சாஸ்திரங்களையும் கற்றவர் என்னும்
கருத்துப்பற்றியதாகும். சிலப்பதிகாரம், கனாத்திறமுரைத்த காதையில்,
‘பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு’ என வரும் அடியில், ‘பாசண்டச்
சாத்தன்’ என்னும் சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் எழுதும் உரை வருமாறு:
“பாசண்டம் தொண்ணூற் றறுவகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை; இவற்றிற்கு
முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்றவனாதலின், ‘மகாசாத்திர’ னென்பது
அவனுக்குப் பெயராயிற்று.” இவர் கூறும் உரைக் கேற்பவே பௌத்தர்களும், புத்தர்
பல நூல்களைக் கற்றவர் என்று கூறுவர். இதனை வற்புறுத்தியே, ‘சூடாமணி
நிகண்டும்,’

    ‘அண்ணலே மாயா தேவி சுதன்அக ளங்க மூர்த்தி
    தண்ணிய கலைகட் கெல்லாம் நாதன்முக் குற்ற மில்லோன்’

என்று
கூறுகின்றது. ‘அருங்கலை நாயகன்’ என்று திவாகரம் கூறுகின்றது.
நாகைப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலையொன்றன் பீடத்தில்,
‘ஸ்வஸ்தீ ஸ்ரீஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர்’, என்று எழுதியிருப்பது
காண்க. புத்தர் சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவர் என்பதும், அதுபற்றியே
அவருக்குச் ‘சாஸ்தா’ அல்லது ‘மகா சாஸ்தா’ என்னும் பெயருண்டென்பதும்
அறியப்படும். ‘லலிதாவிஸ்தார’ என்னும் பௌத்த நூலிலும் புத்தர் பல கலைகளைக்
கற்றவர் என்று கூறப்பட்டுள்ளதென்று கூறுவர். இன்னுமொரு கண்கூடான சான்று
யாதெனில், காஞ்சிபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலின் உட்பிரகாரத்தில்
இருந்த புத்தர் உருவச்சிலைக்குச் ‘சாஸ்தா’ என்னும் பெயர் உள்ளதுதான்.
இச்சாஸ்தாவைப்பற்றிக் ‘காமாட்சி லீலாப்பிரபாவம்’ என்னும் காமாக்ஷி
விலாசத்தில், ‘காமக் கோட்டப்பிரபாவத்தில்,’ ‘தேவியின் (காமாட்சி தேவியின்)
தன்யபானஞ் செய்து(முலைப்பால் அருந்தி) சுப்பிரமணியரைப் போலான சாஸ்தா ஆலயம்,
காமாட்சியம்மன் கோயிலில் இருக்கிறதாகக் கூறப்பட்டுள்ளது. ‘சாஸ்தா’
என்பவரும் ‘புத்தர்’ என்பவரும் ஒருவரே என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம்.

    காஞ்சி
காமாட்சியம்மன் கோயிலில்  இருந்த சாத்தன் (புத்தன்) உருவத்தைப் பல
ஆண்டுகளுக்கு முன்பு கோபி நாதராயர் அவர்கள் கண்டுபிடித்து அதைப்
படம்பிடித்து வெளியிட்டார்கள். (Indian Antiquary Vol. XLIV) அந்த
உருவத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பு கச்சிக்காம கோட்டத்தில் நேரில் சென்று
பார்த்திருக்கிறேன். அது சுமார் ஐந்தடி உயரமுள்ள கருங்கற் சிலையுருவம்.
புத்தர் பெருமான் நின்ற வண்ணம் உபதேசம் செய்வதுபோல அமைந்துள்ளது. இந்தச்
சாஸ்தாவின் (புத்தரின்) கையிலிருந்து பெற்ற செண்டு என்னும் ஆயுதத்தினால்
கரிகாலன் என்னும் சோழ அரசன் மேருமலையை அடித்தான் என்று ஒரு கதையுண்டு.  

    “கச்சி வளைக்கைச்சி காமகோட் டங்காவல்
    மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் - கைச்செண்டு
    கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்
    செம்பொற் கிரிதிரித்த செண்டு”

என்னும்
பழைய செய்யுள் இதனைக் கூறுகிறது. இச்செய்யுள் அடியார்க்கு நல்லாரால்
சிலப்பதிகார உரையில் மேற்கோள் காட்டப்பட்டது. இவ்வளவு புகழ்வாய்ந்த
காமகோட்டத்துப் புத்தர் உருவச்சிலையை, இப்போது சென்னை அரசாங்க
பொருட்காட்சிச் சாலையில் கொண்டுபோய்  வைத்துவிட்டு, அஃது இருந்த இடத்தில்
ஐயப்பன் உருவத்தைப் புத்தம்புதிதாகச் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த
உருவம், இரண்டு கைகளையும் கால் முட்டியின் மேல் தாங்கி உட்கார்ந்திருப்பது
போல இருக்கிறது. மலையாளத்திலுள்ள சாத்தன் காவுகளிலிருந்து புத்த
விக்கிரங்களும் எடுக்கப்பட்டு இது போன்ற ஐயனார் உருவங்களை வைத்தார்கள்
போலும்.

    ‘சாஸ்தா’ என்னும் புத்தருடைய கோயில்களை
‘ஐயனார் கோயில்கள்’ என்றும், ‘சாதவாகனன் கோயில்கள்’ என்றும் சொல்லி,
பிற்காலத்து இந்துக்கள் நாளடைவில் அவற்றைக் கிராமதேவதையின் கோயில்களாக்கிப்
பெருமை குன்றச்செய்துவிட்டது போலவே ஏனைய சில புத்தப் பெயர்களுக்கும் வேறு
பொருளும் கதையும் கற்பித்து அவற்றையும் மதிப்பிழக்கச் செய்துவிட்டதாக
தெரிகிறது, சில இடங்களில் புத்தரை முனீஸ்வரன் ஆக்கிவிட்டனர். தென்னாட்டில்,
‘தலைவெட்டிய முனீஸ்வரன்’ கோயில் என ஒன்று உண்டென்றும், அக் கோயிலில் உள்ள
உருவம் புத்தரின் உருவம் போன்றுள்ளதென்றும் சொல்லப்படுகின்றது. இப்போது
காணப்படும் ‘தருமராஜா கோயில்கள்’ என்பனவும் பண்டொரு காலத்தில் பௌத்தக்
கோயில்களாயிருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. ‘தருமன்’ அல்லது
‘தருமராசன்’ என்பதும் புத்தருக்குரிய பெயர்களில் ஒன்று. பிங்கல நிகண்டில்
‘தருமன்’ என்றும் திவாகரத்திலும் நாமலிங்கானு சாசனத்திலும் ‘தர்மராஜன்’
என்றும் புத்தருக்கு வேறு பெயர் கூறப்பட்டுள்ளது. இது தமிழ்
நிகண்டுகளினாலும் அறியப்படும். இந்தத் தருமராஜா கோயில்களான பௌத்த
கோயில்கள், இந்துமதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பஞ்சபாண்டவரில்
ஒருவரான தருமராஜா கோயிலாகக் கற்பிக்கப்பட்டுப் பலராலும் நம்பப்பட்டன.
தருமராஜா கோயில்களில் பௌத்தர் போற்றும் ‘போதி’ என்னும் அரசமரங்கள்
இன்றைக்கும் காணப்படுவது தருமராஜா கோயில்கள் பண்டைக்காலத்தில் பௌத்தக்
கோயில்கள் என்பதை விளக்கும். சமீபகாலம் வரையில் பௌத்தமதம் நிலைபெற்றிருந்த
வங்காளத்திலே, இப்பொழுதும் சில பௌத்தக் கோயில்களுண்டென்றும்,
அக்கோயில்களில் உள்ள புத்தவிக்கிரகங்களுக்குத் ‘தரும ராஜா’, அல்லது
‘தருமதாகூர்’ என்று பெயர் வழங்கப்படுகின்றதென்றும் அறிகின்றோம். எனவே.
தமிழ்நாட்டிலுள்ள இப்போதைய தருமராஜா கோயில்கள் பண்டைக் காலத்தில் பௌத்தக்
கோயில்களாயிருந்திருக்க வேண்டும் என்று கருதப்படும்.

    இவ்வாறே,
தாராதேவி, மங்கலதேவி, சிந்தாதேவி முதலான பௌத்த தெய்வங்களின் கோயில்களும்,
பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான
அம்மன் கோயில்களாகவும் மாற்றப்பட்டனவாகத் தெரிகின்றன. தாராதேவி கோயில்
திரௌபதையம்மன் கோயிலென இப்பொழுது வழங்கப்படுகின்றது, ‘தருமராஜா’ என்னும் 
பெயருள்ள புத்தர் கோயில், பிற்காலத்தில், பாண்டவரைச் சேர்ந்த தருமராஜா
கோயிலாக்கப்பட்டது போல, ‘தாராதேவி’ என்னும் பௌத்த அம்மன் கொயில்,
தருமராஜாவின் மனைவியாகிய திரௌபதியின் கோயிலாக்கப்பட்டது,

    சுருக்கமாகச்
சொல்லுவதென்றால், இப்போது திருமால் கோயில்கள் அவ்வவ்விடங்களில் ‘வரதராசர்
கோயில்;. ‘திருவரங்கர் கோயில்’,'வேங்கடேசர் கோயில்’ முதலிய வெவ்வேறு
பெயர்களுடனும், சிவபெருமான் கோயில்கள் ‘கபாலீஸ்வரர் கோயில்’, ‘தியாகராசர்
கோயில்’,'சொக்கலிங்கர் கோயில்’  முதலான வெவ்வேறு பெயர்களுடனும்
வழங்கப்படுவது போலவே, பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களும் புத்தருடைய பல
பெயர்களில் ஒவ்வொன்றன் பெயரால் ‘தருமராஜா கோயில்’, ‘சாத்தனார்
கோயில்’,'முனீஸ்வரர் கோயில்’ என்பன போன்ற பெயர்களுடன் வழங்கப்பட்டு வந்தன
என்றும், பிற்காலத்தில், இந்துமதம் செல்வாக்குப் பெற்றபோது அதை இந்துமதக்
கோயிலாகச் செய்யப்பட்டு, இந்துமதத் தொடர்பான கதைகளுடன் இணைக்கப்பட்டு,
பின்னும் நாளடைவில் அவை கிராமதேவதை கோயில்கள் என்னும் நிலையில் தாழ்ந்த
நிலைக்குக் கொண்டுவரப்பட்டனவென்றும் தோன்றுகிறது.


ht
tps://sites.google.com/site/budhhasangham/Home/mylaiseeni/mylaiap3


3. பௌத்தமதத் தெய்வங்கள்

1. கடற்காவல் தெய்வம் மணிமேகலை

    பௌத்தமதத்தின்
உயர்ந்த தெய்வம் புத்தர் பெருமான். புத்தர் பரிநிர்வாணம் அடைந்தபிறகு
அவருடைய உடம்பைக் கொளுத்தி அதில் எஞ்சிய எலும்பு சாம்பல் ஆகிய இவற்றை
எட்டுப் பங்காகப் பங்கிட்டு ஒவ்வொரு பங்கையும் ஒவ்வோர் ஊரில் கொண்டுபோய்ப்
புதைத்து அதன்மேல் சேதியங்களைக் கட்டினார்கள். புத்தருடைய தலைமயிர், நகம்,
பல் முதலிய தாதுக்களையும் சேமித்து அவற்றின்மேல் சேதியங்களைக்
கட்டினார்கள். இவற்றிற்குச் சாரீரிக சைத்தியம் என்பது பெயர். சேதியம்
எனினும் சைத்தியம் எனினும் ஒன்றே.

    புத்தர்
பெருமான் உபயோகித்துவந்த கைத்தடி, ஆடை, பாத்திரம், மிதியடி முதலிய
பொருள்களையும் சேமித்து வைத்து, அவரின் நினைவுக்குறியாக அவற்றை
வணங்கினார்கள். இவற்றிற்குப் பாரிபோக சைத்தியம் என்பது பெயர். புத்தகயாவில்
புத்தர் போதிஞானம் பெற்ற அரசமரம் இன்றும் வணங்கப்படுகிறது. இந்த அரசமரமும்
பாரிபோக சைத்தியமாகும்.

    பகவன் புத்தர் காலமான
பிறகு சில நூற்றாண்டு வரையில் அவருக்கு உருவம் அமைக்கப்படவில்லை. ஆனால்,
தரும பீடிகை, பாதபீடிகை ஆகிய உருவங்கள் மட்டும் பௌத்தர்களால் வணங்கப்பட்டன.
தருமபீடிகை என்பது சக்கரம் போன்ற உருவமாக அமைக்கப்பட்டது. பாதபீடிகை
என்பது புத்தரின் பாதங்கள் போன்று உருவம் அமைத்து வணங்கப்பட்டது.

    சில
நூற்றாண்டுகளுக்குப் பிறகு புத்தரின் உருவங்கள் கல், கதை, செம்பு முதலிய 
பொருள்களால் அமைக்கப்பட்டு வணங்கப்பட்டன. இவ்வுருவங்களுக்கு உத்தேசிக
சைத்தியம் என்பது பெயர்.

    பௌத்தர்கள் புத்தரின்
உருவங்களை வணங்கி வந்ததோடு, வேறுசில சிறு தெய்வங்களையும் வணங்கி
வந்தார்கள். அந்தத் தெய்வங்களைப்பற்றி கூறுவோம்.

    சிலப்பதிகாரக்
கதைத்தலைவனாகிய கோவலன் என்னும் வணிகன் மகளுக்கு மணிமேகலை என்பது பெயர்.
இந்த மணிமேகலையைப் பற்றித் ‘தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்’ என்னும்
அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம்.

    இந்த
மணிமேகலையைக் கதைத் தலைவியாகக் கொண்டு, அவளது வரலாற்றினைக் கூறும்
சீத்தலைச் சாத்தனாரியற்றிய காப்பியத்துக்கும் ‘மணிமேகலை’ என்பது பெயர்.
இந்த நூலினைப் பற்றித் ‘ தமிழ்ப் பௌத்த நூல்கள்’ என்னும் அதிகாரத்தில்
கூறியிருக்கின்றோம்.

    இங்கு ‘மணிமேகலை’ என்னும்
கடல் தெய்வத்தைப் பற்றி ஆராய்வோம். இந்தத் தெய்வம் ‘சமுத்திர மணிமேகலை’
என்றும் கூறப்படும். ‘முது மணிமேகலை’ என்றும் கூறுவர். இது
பௌத்தர்களுக்குரிய சிறு தெய்வங்களில் ஒன்று. இதன் வரலாறு வருமாறு:

    பௌத்தர்களுக்குரிய
ஆறு தெய்வலோகங்களுள் ‘மகாராஜிக லோகம்’ என்பது ஒன்று. இந்த உலகத்தின்
குணதிசையைத் ‘திருதராட்டிரர்’ என்பவரும், குடதிசையை ‘விருபாக்ஷர்’
என்பவரும்,  வடதிசையைத் ‘வைசிரவணர்’ என்பவரும் ஆட்சி செய்து
வருகின்றார்கள். இவர்களுக்குச் ‘சாதுர் மகராஜிகர்’ என்பது பெயர். 
துடிதலோகத்தில் வீற்றிருக்கும் போதிசத்துவர் மாயாதேவியின் திருவயிற்றில்
கருத்தரித்து மண்ணுலகிற் பிறந்து வாழ்ந்து இறுதியில் பரிநிர்வாணம்
அடைகின்றவரையில், அவருக்கு யாதோர் இடையூறும் நேரிடாவண்ணம் காப்பதாக
மேற்சொன்ன நான்கு தெய்வ அரசர்களும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அன்றியும்,
பௌத்த தர்மத்தைப் பின்பற்றி யொழுகும் நல்லோர்க்கும், பெற்றோர், ஆசிரியர்
முதலியவரை வழிபட்டொழுகும் சீரியோர்க்கும் யாதேனும் இடையூறு நேரிடுமாயின்,
அவற்றினின்று அன்னவரைக் காப்பாற்றவும் இவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
இவ்வாறு கடமை ஏற்றுக்கொண்ட இவர்கள் மண்ணுலகில் ஆங்காங்க்கே சிறு
தெய்வங்களை இருக்கச் செய்து, நல்லோருக்கு நேரிடும் துன்பத்தைத்
தீர்க்கும்படி அச் சிறு தெய்வங்களுக்குக் கட்டளையிட்டார்கள். இவ்வாறு
இருத்தப்பட்ட தெய்வங்களில் மணிமேகலையும் ஒன்று. கடலில் கப்பல் யாத்திரை
செய்யும் நல்லோருக்கு இடுக்கண் நேரிடுமாயின், அன்னவரின் துயர்தீர்த்து
உதவிசெய்வது மணிமேகலைத் தெய்வத்தின் பொறுப்புவாய்ந்த கடமையாகும்.

    இவ்வாறு
பொறுப்பேற்றுக்கொண்ட மணிமேகலை, தனது கடமையைச் செய்துவருவதாகப் பௌத்தர்கள்
கருதுகின்றார்கள். நடுக்கடலில் கப்பல் உடைந்து நீரில் மூழ்கி இறக்குந் 
தறுவாயிலிருந்த நல்லோரை இந்தத் தெய்வம் காப்பாற்றிய செய்திகள் பௌத்த
நூல்களில் கூறப்பட்டுள்ளன. மிகப் பழைமையானதென்று கருதப்படுகின்ற
புத்தஜாதகக் கதைகளில் இரண்டு இடங்களில் இத்தெய்வத்தைப் பற்றிய வரலாறு
கூறப்படுகின்றது. அவற்றின் சுருக்கமான வரலாற்றினைக் கீழே தருகின்றோம்.

    சங்கஜாதகம்:
‘மோலினி’ என்னும் பெயருடைய காசிமா நகரத்தில் சங்கன் என்னும் அந்தணன்
செல்வத்திற் சிறந்தவன். இவன் காசிநகரத்தின் நான்கு கோட்டை வாயிலிலும்,
நகரத்தின் நடுவிலும் தனது இல்லத்திலும் ஆக ஆறு அறச்சாலைகள் அமைத்து
நாள்தோறும் அறவினையை முட்டின்றிச் செய்துவந்தான். ஒருநாள் இவன் ‘குன்றத்தனை
செல்வமும் ஒரு காலத்தில் குன்றும். அக்காலத்து அறம் செய்யப் பொருள்
முட்டுப்படுவதற்கு முன்னரே யான் மேன்மேலும் பொருள் ஈட்டுவேன்’ என்று
சிந்தித்துத் தேர்ந்து மனைவியை அழைத்து அவளுக்குத் தன் கருத்தைத்
தெரிவித்து, ‘யான் திரும்பிவருமளவும் நான் செய்துவரும் இவ்வறச்சாலைகளைச்
செவ்வனே நடத்திக் கொண்டிரு’  என்று கட்டளையிட்டு, சொர்ணபூமி என்னும் பர்மா
தேசத்திற்குச் செல்லப் புறப்பட்டான். ஏவலாளர் தன் பின்னர் வர, இவன் காலில்
செருப்பணிந்து, குடைபிடித்துச் செல்லும்போது, நண்பகல் ஆயிற்று. அப்போது
கந்தமாதன மலையில் வீற்றிருந்த  பாச்சகபுத்தர் என்னும் போதிசத்வர் இந்தச்
சங்கன் என்னும் அந்தணன் போவதையறிந்து,
ஒரு மனிதனாக உருக்கொண்டு, அனல்வீசும் மணல்வழியே செருப்பும் குடையுமின்றி
இவன் எதிரில் தோன்றினார். ஓர் ஆள் வெயிலில் வாட்டமுற்று வருந்தி வருவதைக்
கண்ட சங்கன்,அந்த வழிப்போக்கனை அருகில் அழைத்து, ஒரு மரநிழலில்
அமரச்செய்து, காலை நீர்கொண்டு கழுவி, தான் அணிந்திருந்த செருப்பைத்
துடைத்து எண்ணெயிட்டு அவருக்குக் கொடுத்ததுமின்றி, தன் குடையினையும்
கொடுத்துதவினான். இவற்றைப் பெற்றுக்கொண்ட அந்த ஆள் தமது உண்மை உருவத்தோடு
வானத்தில் பறந்து தம் இருப்பிடம் சேர்ந்தார்.

    பிறகு
சங்கன் துறைமுகம் அடைந்து, கப்பலேறிக் கடல்யாத்திரை புறப்பட்டான். கப்பல்
கடலில் ஏழு நாள்கள் சென்றன. ஏழுநாள்களுக்குப் பின்னர், புயலடித்துக் கப்பல்
பாறைமேல்  மோதி உடைந்துவிட, பிரயாணிகள் மூழ்கி இறந்தனர். சங்கனும் அவன்
வேலையாள் ஒருவனும் உயிருடன் கடலைக் கையினால் நீந்திக் கொண்டிருந்தனர்.
ஏழுநாள் வரையில் இவர்கள் நீந்திக் கொண்டிருந்தனர். அப்போது கடற்தெய்வமாகிய
மணிமேகலை அங்குவந்து சங்கன் கண்களுக்கு மட்டும் தோன்றி, தங்கத்தட்டில்
அமிர்தம் போன்ற அறுசுவை உணவை அவனுக்குக் கொடுத்தது. அதனைச் சங்கன் மறுத்து
‘இன்று உபவாசநாள்; ஆகையால், இன்று நான் உணவு உட்கொள்ளேன்.’ என்றான். சங்கன்
தனக்குள் ஏதோ உளறுகிறான் என்று அவனுடன் நீந்திக் கொண்டிருந்த வேலையாள்
கருதி, ‘ஐயா, என்ன பிதற்றுகின்றீர்?’ என்றான். சங்கன், ‘நான் பிதற்றவில்லை;
என் கண்முன் நிற்கும் பெண்முன் பேசுகிறேன்’ என்றான். ஏவலாளன்,
‘அங்ஙனமாயின் அவள் மண்ணுலக மங்கையா, தெய்வலோகத் தெய்வமா என்பதைக் கேளும்
அன்றியும் இப்போது இந்தத் துன்பத்தினின்றும் காப்பாற்ற உதவி செய்ய முடியுமா
என்றும் கேளும்’ என்றான். சங்கன் மணிமேகலையை இக்கேள்விகளைக் கேட்க, அவள்,
‘நான் இக்கடலில் வாழ்கின்ற தெய்வம். நீ செய்த நற்செயலுக்காக உன்னைக்
காப்பாற்ற வேண்டுவது எனது கடமையாதலால் நான் இவ்விடம் வந்தேன். நீ இப்பொது
எங்குச் செல்ல விரும்புகின்றாய்?’ என்று கேட்க, அவன் ‘எனது காசிமாநகரம்
செல்லவேண்டும்’ என்று சொன்னான். உடனே மணிமேகலை தனது தெய்வ ஆற்றலினால் பெரிய
கப்பல் ஒன்றினைச் செய்தது. அது நிறைய விலையுயர்ந்த பண்டங்களை அமைத்துச்
சங்கனையும் அவனது ஏவலாளையும் அதில் ஏற்றி, தானே கப்பலைச் செலுத்திக்
காசிமாநகரம் கொண்டு போய்விட்டது.

    ‘மகாஜனக ஜாதகம்’ என்னும் கதையிலும் இந்தத் தெய்வம் உதவி செய்த வரலாறு கூறப்பட்டிருக்கின்றது. அதன் சுருக்கம் பின்வருவது:

    மிதிலை
தேசத்து அரசன் ஜனகன் என்பவனுக்கு அரிட்டஜனகன், பொலஜனகன் என்னும் இரண்டு
பிள்ளைகள் இருந்தார்கள். தகப்பன் இறந்த பின்னர், மூத்தவனான அரிட்டஜனகன்
அரசனானான். இப்போது இளையவனான பொலஜனகன் தமையன் மேல் பகைகொண்டு, படை திரட்டி
வந்து சண்டை செய்தான். சண்டையில் அரிட்டஜனகன் இறக்க, அவன் தம்பி அரசனானான்.
இறந்த அரிட்டஜனகனின் மனைவி, அப்போது வயிறு வாய்த்திருந்தவள், பெருஞ்
செல்வத்தை எடுத்துக்கொண்டு, ஒருவருமறியாமல் சண்பை நகரம் சென்று, அங்கு ஓர்
ஆண்மகவைப் பெற்றாள். அக்குழந்தைக்கு மகாஜனகன் என்று பெயர் இடப்பட்டது.
குழந்தையாகிய மகாஜனகன் பெரியவனாக வளர்ந்தபிறகு, தன் சிற்றப்பன் தனது
நாட்டைக் கவர்ந்து ஆள்கிறான் என்பதறிந்து, தன் நாட்டை மீட்கக் கருதி, அதன்
பொருட்டுச் செல்வம் தேட உறுதி கொண்டான். இக்கருத்தைத் தன் தாய்க்குத்
தெரிவித்து, அவள் உத்தரவு பெற்றுக் கப்பல் ஏறிச் சுவர்ண பூமிக்குப்
புறப்பட்டான். இடைவழியில் நடுக்கடலில் புயலடித்துக் கப்பல் உடைந்துவிட,
மற்றவர் மூழ்கி இறந்தனர். மகாஜனகன் முயற்சியை விடாமல் கையினால் கடலை
நீந்திக் கொண்டிருந்தான். ஏழாம் நாள், மணிமேகலை அவன் முன்தோன்றி ‘இப்பெரிய
கடலைக் கையினால் நீந்திக் கடக்க முடியுமா?’ என்று கேட்க, ‘கரை சேர்வது
கூடுமா கூடாதா என்பது பற்றி கவலையில்லை; ஆனால் முயற்சி செய்ய வேண்டுவது என்
கடமையல்லவா?’ என்று விடையிறுத்தான்.  இவனது ஊக்கத்தை மெச்சிய மணிமேகலை,
இவன் செய்துள்ள நற்கருமங்களுக்காக இவனது இடுக்கணைத் தீர்க்கக் கருதி, தான்
யார் என்பதை அவனுக்குத் தெரிவித்து, அவன் போக நினைத்த இடம் யாது எனக்
கேட்டது. மகாஜனகன்  தான் மிதிலை நகரஞ் செல்ல விரும்புவதாகச் சொல்ல,
மணிமேகலை, தாய் குழந்தையைத் தூக்குவது போல, அவனை இரு கையாலும் தூக்கிக்
கொண்டு வானத்தில் எழுந்து பறந்து சென்று, மிதிலை நகரத்து மாஞ்சோலையில்
விட்டுவிட்டுச் சென்றது.

    இதற்குள் மிதிலை நகரத்தை
ஆண்ட பொலஜனகன் இறந்துவிட, அவனின் ஒரே மகளாகிய ‘சீவாலி தேவி’ என்பவளை
மகாஜனகன் மணந்துகொண்டு அரசனானான். அவளை மணப்பதற்குமுன், ஆயிரம் வீரராலும்
வளைக்க முடியாத வில்லை வளைத்தல் முதலியவற்றைச் செய்தான். பிறகு இவன் தன்
பிள்ளைக்கு முடிசூட்டிவிட்டுக் காட்டிற்குத் தவம் செய்யச் சென்றான்.

    பௌத்தக்
கதைகள் அடங்கிய இரசவாகிளி என்னும் நூலிலும் ‘பலக கண்டதின்னஸ்ஸ வத்து’
என்னும் துண்டுப் பலகை கொடுத்தவன் கதையில், மணிமேகலை கடலில் ஒருவனைக்
காப்பாற்றிய செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. அதன் சுருக்கம் இது:

    வறட்சிமிக்க
வேனிற் காலத்தில், தென்னாட்டினின்றும் வடநாட்டிற்கு யாத்திரை சென்ற
ஒருவன், நீர் வேட்கை கொண்டு எங்கும் நீர் கிடைக்காமல் வருந்தி, ஒரு
மரநிழலில் அமர்ந்து, தன்னிடமிருந்த இரண்டு வெற்றிலைகளையாவது மென்று
சாற்றினை விழுங்கி, வேட்கை தீர்க்கலாம் என்று எண்ணினான். அவ்வமயம் அவனைப்
போலவே வடநாட்டினின்று தென்னாட்டிற்கு யாத்திரை வரும் ஒருவன், நீர் வேட்கை
மிக்கவனாய், பருக நீர் கிடைக்காமல் வருந்தி, அதே மரத்தடியில் வந்து
அமர்ந்தான். வந்தவன் முன்னவனைப்பார்த்து, ‘ஐயா, எனது நீர் வேட்கை தீர ஒரு
வெற்றிலையாவது கொடும்,’ என்று இரந்து வேண்டினான். அதற்கு அவன், ‘எனக்கும்
நீர் வேட்கை மிகுதியாயிருக்கின்றது. என்னிடமுள்ளது இரண்டு வெற்றிலைகளே;
ஒன்றை உமக்குக் கொடுத்துவிட்டு யான் என்ன செய்வது?’ என்று சொல்லி
மறுத்தான். பின்னவன், ‘என்னிடம் காசு இருக்கிறது; தருகிறேன்; ஒரு வெற்றிலை
தாரும்’ என்று கேட்க, அதற்கும் அவன் மறுத்தான். பின்னர், பெருந்தொகை
கொடுப்பதாகச் சொன்னபோது, அவன் அப்பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு ஒரு
வெற்றிலையைக் கொடுத்தான். இருவரும் ஒவ்வொரு வெற்றிலையை மென்று ஒருவாறு
நீர்வேட்கையைத் தீர்த்துக் கொண்டனர்.

    பின்னர்,
இருவரும் புறப்பட்டு வெவ்வேறு வழியே சென்று, கடைசியாக ஒரு துறைமுகத்தை
அடைந்து, மரக்கலம் ஏறிக் கப்பல் யாத்திரை புறப்பட்டனர். ஆனால், அக்கப்பலில்
இருவரும் ஒருங்கே யாத்திரை செய்வது அவர்களுக்குத் தெரியாது. சில நாள்
சென்றபின், நடுக்கடலில் புயல் அடிக்க, மரக்கலம் உடைந்துவிட்டது. கப்பல்
யாத்திரிகரில் சிலர் மூழ்கி இறந்தனர். சிலர் தம் உயிரைக் காக்கக் கடலில்
நீந்திக் கொண்டிருந்தனர். அவ்வாறு நீந்தியவர்களில் வெற்றிலையைப் பெரும்
பொருள் கொடுத்து வாங்கியவன் ஒரு மரப்பலகையைப் பற்றிக்கொண்டு அதன்
உதவியினால் நீந்திக் கொண்டிருந்தான். வெற்றிலையை விற்றவனோ யாதொரு
பற்றுக்கோடுமின்றி அப்பெருங்கடலினைத் தன் வெறுங்கைகளால் நீந்தித் தவித்துக்
கொண்டிருந்தான். அப்போது பலகையுள்ளவன் அவனைக் கண்டு, பெருந்தொகை
பெற்றுக்கொண்ட போதிலும், தக்க நேரத்தில் ஒரு வெற்றிலையையாவது கொடுத்து உதவி
செய்த அவனது நன்றியை நினைவுகூர்ந்து, தன்னிடமிருந்த ஒரே மரப்பலகையை
அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தான் வெறுங்கைகளால் நீந்தத் தொடங்கினான்.

    அப்போது
மணிமேகலை இவனது இரக்கமுள்ள மனப்பான்மையினையும் தன்னலமற்ற உதவியையுங் கண்டு
மெச்சி, இத்தகைய நன்மகனைக் காப்பாற்ற வேண்டுவது தனது நீங்காக்கடமை
எனக்கண்டு, அவன் மீது அருள் கூர்ந்து, அவன் கண்களுக்குத் தோன்றாமலே அவனை
ஒரு கரையிற் கொண்டு போய்விட்டது. பின்னர், நெடுநேரஞ் சென்று, தனக்குக்
கிடைத்த மரப்பலகையின் உதவியினால் மற்றவன் கடலை நீந்தி அதே கரையையடைந்தான்.
அடைந்தவன், தனக்கு முன்பே தன் நண்பன் வந்திருப்பதைக் கண்டு வியப்புற்று,
‘ஐயா, வெறுங்கையினால் இப்பெருங்கடலை நீந்தி எனக்கு முன்னரே எவ்வாறு
வந்தீர்? பலகையுள்ள எனக்குக் கரைசேர இவ்வளவு நேரம் சென்றதே! கையினால் கடலை
நீந்தியதோடு, களைப்பின்றியும் காணப்படுகின்றீரே!’ என்று வினவினான். அதற்கு
மற்றவன், ‘நான் இங்கு வந்த விதம் எனக்குத் தெரியாது,’ என்று சொன்னான்.
அப்போது, அதுவரையில் அவர் கண்களுக்குப் புலப்படாதிருந்த மணிமேகலா தெய்வம்
அவர் கண்முன்னர்த் தோன்றி, ‘நானே உன்னை இங்குக் கொண்டு வந்தேன். பெற்றோரைப்
பேணி ஒழுகுகின்றவர்களையும், புத்த தர்ம சங்கம் என்னும் மும்மணிகளைச்
சரணடைந்து ஒழுகுகின்றவர்களையும், பஞ்சசீலம், அஷ்டாங்க சீலம், பிரதிமோக்ஷ
சம்வரசீலம் என்னும் சீலங்களை மேற்கொண்டு ஒழுகுகின்றவர்களையும், மெய் மொழி
மனங்களால் பிறருக்கு நன்மை செய்கின்றவர்களையும், செய்ந்நன்றி அறிந்து உதவி
செய்கின்றவர்களையும் துன்பத்திலிருந்து தேவர்கள் காப்பாற்றுவார்கள்’ என்று
சொல்லிற்று.

    இதைக் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில்
பலகை கொடுத்துதவியவன், ‘தாங்கள் சொல்லிய தர்மங்களில் ஒன்றையேனும் நான்
செய்தவனல்லவே! அப்படியிருக்க, என்னைக் கடலினின்றுங் காப்பாற்றிய வகை என்ன?’
என்று வியப்புடன் வினாவினான். அதற்கு அத்தெய்வம், ‘உனக்கு ஒரு வெற்றிலை
கொடுத்து உதவிய நன்றியை  நினைத்து, நடுக்கடலில் உன் உயிரையும் பாராமல்
மற்றவனுக்கு உன் பலகையைக் கொடுத்து உதவினாய். இந்த நன்றியறிதல் என்னும்
உனது நற்குணத்துக்காக உன்னை நான் காப்பாற்றினேன்’ என்று சொல்லி,
அக்கடற்றெய்வம் மறைந்து விட்டது.

    கம்போடியா
தேசத்திலும் சீயாம் தேசத்திலும் மணிமேகலையைப் பற்றிய கதைகள்
வழங்குகின்றனவென்று திரு. ‘சில்வன் லீவி’ (Silvain Levi) என்னும் ஆசிரியர்
எழுதியிருக்கின்றார். அதன் சுருக்கம் இதுவாகும்:

    கம்போடியா
தேசத்து இராமாயணத்தில் கீழ்கண்ட பகுதி காணப்படுகின்றது. தேவர்களும்
தெய்வமகளிரும் ஓர் அரங்கத்தில் கூட நடனம் செய்கிற வழக்கப்படி, அரங்கத்தில்
ஒருநாள் தேவர்கள் கூடியிருந்தார்கள். அக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள
மணிமேகலா தெய்வம் தனது ஒளிவீசும் அணிகளை அணிந்து, கையில் மாணிக்கக் கல்
ஒன்றனை எடுத்துக் கொண்டு சென்றது. செல்லும் வழியில் ‘ராமசூரன்’, அல்லது
‘ராம பரசு’ என்னும் பெயருள்ள அசுரன் அவள் கையில் உள்ள ஒளிவீசும் மாணிக்கக்
கல்லைப் பிடுங்கிக்கொள்ள விரும்பி அவளைத் தொடர்ந்தான். அதனை அறிந்த
மணிமேகலை மேகத்தில் மறைந்தொளிந்தாள். அசுரன் அங்கும் அவளைத் தொடர அவள் தன்
கையிலிருந்த மாணிக்க நகையை அவன் கண்முன் காட்ட அதன் ஒளியினால் கண்கூசி,
அவ்வரக்கன் திகைத்து நின்றான். அப்போது மணிமேகலை அவனிடமிருந்து தப்பி
ஓடினாள். அவ்வமயம் தெய்வங்களின் அரங்கத்திற்குச் செல்லுவதற்காகப்
போய்க்கொண்டிருந்த வீரமிக்க ‘வர்ஜூன்’ என்னும் தேவன், ராமபரசு என்னும்
அசுரன் மணிமேகலையைத் துரத்துவது கண்டு, அவ்விடம் வர, அவனுக்கும்
ராமசூரனுக்கும் பெரும் போர் நடந்து, கடைசியில் வர்ஜூன் என்பனை ராமசூரன் தன்
பரசு என்னும் ஆயுத்திதினால் கொன்று வென்றான். இந்தக் கதை கம்போடியா
தேசத்து அரண்மனையில் நாடகமாக நடிக்கப்பட்டு வருகின்றது.

    சயாம்
தேசத்து இராமாயணத்திலும் இதே கதை கூறப்பட்டிருக்கின்றது. கி.பி 1783 முதல்
1809 வரையில் அரசாண்ட சயாம் தேசத்து அரசன், ‘முதலாவது ராமன்’ என்பவன்
காலத்தில், இந்த இராமாயணம் எழுதப்பட்டது. இதுவும் கம்போடியா தேசத்து
இராமாயணம் போன்றதே. இதில் காணப்படும் சிறு  மாறுபாடு என்னவென்றால்,
‘வர்ஜூன்’ என்னும் தேவன் பெயர் ‘அர்ஜூனன்’ என்று காணப்படுவதுதான்.
கம்போடியா, சயாம் தேசத்துக் கதைகளும் மணிமேகலை சமுத்திரத்தில் வாழ்வதாகவும்
அது கடற்தெய்வம் என்பதாகவும் கூறுகின்றன.

    ‘ச-கேச-தாது
வம்சம்’ என்னும் (Cha-Kesa-Dhatuvamsa) பிற்காலத்துப் பாலிமொழிப் பௌத்த
நூலில், புத்தர் தமது ஆறு சீடர்களுக்கு ஆறு உரோம தாது கொடுத்ததாகவும்,
அவர்கள் அவற்றைக் கொண்டு தென்னாட்டிற்கு வந்தபோது, கடலால் சூழப்பட்ட ஓர்
அசோக வனத்துக்கு வந்ததாகவும், அப்போது அந்தத் தாதுவை வைக்கத் தூபி
கட்டுவோரைக் காணாமல் அச்சீடர்கள் வருந்த, புத்தர் கட்டளையினால் மணிமேகலா
தெய்வம் அவர்களுக்குத் தோன்றி, ஒரு தூபியைக் கட்டியதாகவும் காணலாம்.
(மணிமேகலை ‘பாசாத’ என்னும் பெயருள்ள பௌத்தப் பள்ளி ஒன்று இலங்கையில் இருந்த
தென்பதும், அதனை ‘இரண்டாவது சேனன்’ என்னும் அரசன் பிற்காலத்தில்
பழுதுபார்த்துப் புதுப்பித்தான் என்பதும் தெரிகின்றன. இந்தப் பள்ளி
மணிமேகலை கட்டியதாகக் கூறபடும் தூபி அன்றென்பது உறுதி.)

    இலங்கையில்
சிங்களவர் வழங்கும் கதை சிலவற்றிலும் மணிமேகலையைப் பற்றிய குறிப்புகள்
காணபடுகின்றன. அவற்றையெல்லாம் இங்கு எழுதவேண்டுவதில்லை. ஆனால், அக்கதைகள்
ஒன்றில் தமிழருக்கு வியப்பைத் தருவன எவையென்றால், ‘பாலங்கா’ என்பவன் தன்
மனைவி ‘பத்தினி’ என்பளுடன் மதுரைக்குச் செல்லும் வழியில் ‘வைத’ என்னும் ஆறு
குறுக்கிட்டதால், பத்தினி தன் விரலில் அணிந்திருந்த ஆழியைக் கழற்றி
ஆற்றில் எறிய, அந்த ஆற்றுநீர் விலகி இவர்களுக்கு வழிவிட்டது என்பதும்,
அக்கரையையடைந்த பின்னர், மணிமேகலா தெய்வம் வந்து ஆற்றில் எறியப்பட்ட
மோதிரத்தை எடுத்து பத்தினியிடம் கொடுத்தது என்பதுவுமே. இங்கே பாலங்கா
என்பவன் கோவலன்; பத்தினி என்பவள் கண்னகி: வைத என்பது வைகை ஆறு.

    சிலப்பதிகாரம்,
மணிமேகலை என்னும் இரண்டு தமிழ்க் காவியங்களிலும் மணிமேகலா தெய்வத்தைப்
பற்றிக் கூறப்பட்டுள்ளது. கடலில் கப்பலோட்டி வாணிகம் செய்த கோவலனுடைய
குலதெய்வமாக இருந்தது மணிமேகலா தெய்வம் என்றும், கோவலனுடைய மூதாதையார்
ஒருவர் வாணிகத்தின் பொருட்டுக் கடலில் கப்பலேறிச்சென்றபோது, நள்ளிருளில்
கப்பல் கவிழ்ந்து துன்புற்றபோது, அத்தெய்வம் அவரைக் காப்பாற்றியதென்றும்,
அந்நன்றியை மறவாமல் கோவலன் தன் மகளுக்கு அத்தெய்வத்தின் பெயரையே சூட்டினான்
என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது; (சிலம்பு, அடைக்கலக் காதை 21-39) கோவலன்
மகள் மணிமேகலைக்கு, உதயகுமரனால் நேர இருந்த இடையூறுகளை மணிமேகலா தெய்வம்
நீக்கிய செய்தி மணிமேகலை நூலினால் அறியப்படும். காவிரிப்பூம்பட்டினத்தில்
ஆண்டுதோறும் நடைபெற்று வந்த இந்திரவிழாவை, ஓர் ஆண்டு, சோழமன்னன் நடைபெறாமல்
நிறுத்திய காரணத்திற்காக மணிமேகலா தெய்வம் கோபங்கொண்டு சபிக்க, அவ்வூர்
வெள்ளத்தினால் அழிந்தது என்று நூலினால் அறியப்படுகிறது. இத்தெய்வத்தைக்
கடல் காவலுக்காக இந்திரன் நிறுவினான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

    (மணிமேகலைத் தெய்வத்தின் படம் சயாம் தேசத்து அரசரின் அரண்மனையில் இருக்கிறது.)

2. தரைக்காவல் தெய்வம் சம்பாபதி

    சாதுர்
மாகராஜிக லோகம் என்னும் தெய்வலோகத்தில் உள்ள நான்கு தேவர்கள்,
நிலவுலகத்திலே நல்லவர்களுக்கு நேரிடுகிற துன்பங்கங்களைப் போக்கச் சில
தெய்வங்களை நிறுவினார்கள் என்பது பௌத்தர்கள் நம்பிக்கை. அவ்வாறு
நிறுவப்பட்ட தெய்வங்களுள் மணிமேகலை என்பது ஒன்றென்றும், இத்தெய்வம் கடலில்
மரக்கலத்தில் செல்வோருக்கு ஏற்படும் துன்பங்களைப் போக்கி அவர்களைக்
காப்பாற்றியது என்று மேலே விளக்கினோம். தரையில், நல்லவர்களுக்கு ஏற்படும்
துன்பங்களைப் போக்க, அத்தேவர்கள் சம்பாபதி என்னும் தெய்வத்தை நிறுவினார்கள்
என்று கருத வேண்டியிருக்கிறது. ஏனென்றால், சம்பாபதி என்னும் தெய்வத்தைக்
கோதமை என்பவள் இவ்வாறு போற்றியதாக மணிமேகலை நூல் கூறுகிறது.

    “துறையும் மன்றமும் தொல்வலி மரனும்
    உறையுளும் கோட்டமும் காப்பாய், காவாய்!”
                                            (மணி 9-ஆம் காதை)

    “நாவலோங்கிய
மாபெருந் தீவினுள், காவல் தெய்வம்” என்று சம்பாபதி கூறப்படுகிறபடியினாலே,
இத்தெய்வம் நாவலந் தீவு (இந்தியா தேசம்) முழுமைக்கும் காவல் தெய்வமாக
அமைந்திருந்தது. இமயமலையினின்று இத்தெய்வம் தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும்,
நாவல் மரத்தின் கீழ்த் தங்கி அரக்கரால் மக்களுக்கு நேரும் துன்பங்களைப்
போக்க இத்தெய்வம் தவம் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

    “இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
    விளங்கொளி மேனி விரிசடை யாட்டி
    பொன் திகழ் நெடுவரை யுச்சித் தோன்றித்
    தென்றிசைப் பெயர்ந்த இத்தீவத் தெய்வதம்
    சாகைச் சம்பு தன்கீழ் நின்று
    மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு
    வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற
    சம்பு என்பாள் சம்பா பதியினள்.”
                                         (மணி பதிகம் 1-8)

    சம்பாபதி
தெய்வம், முந்தை முதல்வி, முதுமூதாட்டி, தொன்மூதாட்டி, முதியாள்,
அருந்தவமிதியோள் என்றும்; சம்பு, கன்னி, குமரி என்றும் மணிமேகலை நூலில்
கூறப்படுகிறது. இத்தெய்வத்தின் கோயில் குச்சரக்குடிகை எனப் பெயர்
கொண்டிருந்ததென்றும், இக்கோயில் காவிரிப் பூம்பட்டினத்தில் இடுகாட்டிற்கு
அருகில்  இருந்ததென்றும் அந்நூல் கூறுகிறது.

    இத்தெய்வத்தைப்
பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. சார்ங்கலன் என்னும் பார்ப்பனச் சிறுவன்,
தன்னந் தனியனாய்ச் சுடுகாட்டிற்குச் செல்ல, அங்கு ஒரு பேய்மகள் பிணத்தின்
தலையொன்றினைக் கையிலேந்திக் கூத்தாடியதைக் கண்டு அஞ்சி நடுங்கினான்.
அவ்வச்சம் நீங்காமல் அவன், வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைக் கூறி
அச்சத்தினாலே உயிர்விட்டான். அவனுடைய தாய் கோதமை என்பவள், ஆறாத்
துயரத்துடன், அவனது உடலைத் தோளில் தூக்கிக் கொண்டு சம்பாபதி கோயிலுக்கு
வந்து, அவனை உயிர்பித்துக் கொடுக்கும்படி வரம் வேண்டினாள். சம்பாபதி
தெய்வம் அவள்முன் தோன்றி, “அவன் விதிவசத்தினால் இறந்தானேயன்றி அவனைப் பேய்
கொல்லவில்லை. அவன் ஆயுள் அவ்வளவுதான். இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றல்
எனக்குக் கிடையாது” என்று கூறியது. இதனைக் கேட்ட கோதமை மனம் வருந்தி,
“தெய்வங்கள் கேட்ட வரத்தைக் கொடுக்கும் என்று உலகோர் கூறுகிறார்கள். உனக்கு
இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றல் இல்லை என்று கூறுவது என்னை?” என்று
வினவினாள். அப்போது சம்பாபதி தெய்வம், அவள் முன்பாக, சக்கரவாளங்களிலுள்ள
எல்லாத் தெய்வங்களையும் தனது தெய்வ ஆற்றலினால் வரவழைத்து, “இவர்களில்
யாரேனும் இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றல் உடையவராயிருந்தால், நானும் உன்
மகனை உயிர்ப்பித்துக் கொடுப்பேன்” என்று கோதமைக்குக் கூறியது. வந்த
தெய்வங்கள் எல்லாம், ‘தமக்கு அத்தகைய ஆற்றல் இல்லை’ என்று கூறின. அதனால்
மனம் தெளிந்த கோதமை, தன் இறந்த மகனது உடலைச் சுடலையில் அடக்கம் செய்து
சென்றாள். இக்கதை மணிமேகலை (6-ஆம் காதை) யில் கூறப்பட்டுள்ளது.

    சாயாவனம்
என்னும் ஊரில் உள்ள சிவன் கோயிலின் தென்பக்கத்தில் சம்பாபதி கோயில் ஒன்று
இப்போதும்  இருக்கிறதென்றும், இக்கோயில் சம்பாபதியம்மன்  தெய்வம்  என்றும்,
பிடாரி கோயில் என்றும் வழங்கப்படுகிறதென்றும் கூறுவர் டாக்டர் சுவாமிநாத
ஐயர் அவர்கள். (மணி. அரும்பத அகராதி)

    பிடாரி
என்பது பீடையை (துன்பத்தை) அரிப்பவள் (போக்குபவள்) என்று பொருள்படும்.
சம்பாபதி அம்மன், உலகில் உள்ள நல்லவர்களுக்கு வரும் துன்பங்களைப்
போக்குகிறவள் ஆதலின், பிடாரி என்று கூறப்படுகிறாள் போலும்.

    சீர்காழி
இரயில் நிலையத்திற்குத் தென்கிழக்கே 14 மைல் தூரத்தில் உள்ள
காவிரிப்பூம்பட்டினம் (இப்போது சிறுகிராமமாக) இருக்கிறதென்றும், இங்குள்ள
மருவத்தூர் கிராமம் என்னும் இடத்தில், சம்பாபதி கோயில் இருக்கிறதென்றும்,
இங்குள்ள பல்லவனேச்சரம் என்னும் சிவன் கோயிலுக்கருகில் இரண்டு
மண்மேடுகளும், சம்பாபதி கோயிலுக்கருகில் இரண்டு மண்மேடுகளும்
காணப்படுகின்றன என்றும் ஆர்க்கியாலஜி இலாகா அறிக்கை கூறுகிறது.

    இவ்வறிக்கையில்
கூறப்படுகிற மருவத்தூர் கிராமம் என்பது சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிற 
காவிரிப்பூம்பட்டினத்தின் மருவூர்ப்பாக்கமாக இருக்கக்கூடுமோ?
இவ்வறிக்கையில் கூறப்படுகிற மேடுகளை அகழ்ந்து பார்த்தால், தமிழ்நாட்டுச்
சரித்திர சம்பந்தமான பழைய பொருள்கள் ஏதேனும் கிடைக்கக்கூடும்.

3. கந்திற் பாவை

    காவிரிப்பூம்பட்டினத்தில்
இருந்த குச்சரக்குடிகை என்னும் பெயருள்ள சம்பாபதி கோயிலிலே ஒரு தூணில்
கந்திற்பாவை என்னும் தெய்வ உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. (கந்து - தூண்,
பாவை - பதுமை) இவை இரட்டைத் தெய்வங்களின் உருவங்கள். துவதிகன், ஓவியச்சேனன்
(சித்திரச்சேனன்) என்னும் பெயருடையவை. இவையும் பௌத்தர்களால் போற்றப்பட்ட
சிறு தெய்வங்களாம்.  இத்தெய்வங்கள் முக்கால நிகழ்ச்சிகளை அவ்வப்போது, தம்மை
வழிபடுவோருக்குக் கூறிவந்தன என்று மணிமேகலை நூலினால் அறிகிறோம்.

4. சாதுர் மகாராஜிகர்

    உலகத்தின்
நான்கு திசைகளிலும் நான்கு தெய்வங்கள் காவலாக நிறுத்தப்பட்டனர்.
அவர்களுக்குச் சதுர் மகாராஜிகர் என்பது பொதுப் பெயர். உலகத்திலே மனிதர்
செய்கிற நன்மை தீமைகளை அறிந்து அவற்றை அவ்வப்போது இந்திரனுக்குத்
தெரிவிக்கவேண்டியது இவர்கள் கடமை. இவர்களைத் திசைக் காவலராக நியமித்தவன்
இந்திரனே. இவர்களின் பெயர் வருமாறு;

    திருதராட்டிரன்: இவன் கிழக்குத் திசைக்குத் தெய்வம். இவன் கந்தவர்களுக்கு அரசன்.
    விருதாட்சன்: இவன் தெற்குத் திசைக்குத் தெய்வம். இவன் கும்பாண்டர்களுக்கு அரசன்.
    விருளாட்சன்: இவன் மேற்குத் திசைக்குத் தெய்வம். இவன் இயக்கருக்கு அரசன்.
    வைசிரவணன்: இவன் வடக்குத் திசைக்குத் தெய்வம். இவன் நாகர்களுக்கு அரசன்.

    இந்த
நான்கு தெய்வங்களும் சக்கனுக்கு (இந்திரனுக்கு) அடக்கமானவர்கள் என்பதும்,
உலகத்திலே நான்கு திசைகளிலும் நிகழ்கிற எல்லாச் செய்திகளையும் இவர்கள்
அவ்வப்போது இந்திரனுக்குத் தெரிவிக்கிறார்கள் என்பதும் பௌத்தர்களின்
நம்பிக்கை.

5. சக்கன்

    சக்கன்
என்னும் சக்கரன் விண்ணுலகத்துக்கு அரசன். இவனை இந்திரன் என்றும் கூறலாம்.
இவன் பௌத்தச் சிறு தெய்வங்களுக்கெல்லாம் தலைவன். இவன் பௌத்த தர்மப்படி
நடக்கிற நல்லவர்களுக்கு உதவி செய்கிறான் என்பது பௌத்தர்களின் நம்பிக்கை.
இவன், விண்ணுலகத்திலே சிம்மாசனத்தின் மேல் விரிக்கப்பட்ட பாண்டு
கம்பளத்தின்மேல் அமர்ந்திருக்கிறான் என்றும், ஏதேனும் சிறப்பான
நிகழ்ச்சிகள் உலகத்தில் நிகழுமானால் இவனுடைய பாண்டு கம்பளம் சூடுகொள்ளும்
என்றும், அப்போது இவன் அந்நிகழ்ச்சிகளை அறிந்துகொள்கிறான் என்றும்
பௌத்தர்கள் நம்புகிறார்கள்.  இந்திரனைப் பற்றிய பல கதைகள் பௌத்த நூல்களிலே
கூறப்படுகின்றன. இந்தச் சக்கனாகிய இந்திரன் வேறு; வைதீக மதத்தில்
கூறப்படுகிற இந்திரன் வேறு.

6. அவலோகிதர்

    பௌத்தரால்
வணங்கப்படும் தெய்வங்களில் அவலோகிதரும் ஒருவர். இவர் மேலே கூறப்பட்ட
தெய்வங்களுக்கு மேற்பட்டவர். ஆனால், புத்தருக்குக் கீழ்ப்பட்டவர். இவருக்கு
உலகநாதர் என்றும் போதிசத்துவர் என்றும் பெயர் உண்டு. துஷிதலோகத்திலே இவர்
இருக்கிறார். அறநெறியைப் பூவுலகத்தில் போதிப்பதற்காகப் புத்தராகப்
பிறக்கிறவர் இவரே.

        “அறிவு வறிதா யுயிர்நிறை காலத்து
        முடி தயங் கமரர்  முறைமுறை யிரப்பத்
        துடித லோக மொழியத் தோன்றித்
        போதி மூலம் பொருந்தி யிருந்து
        மாரனை வென்று வீர னாகிக்
        குற்றம் மூன்றும் முற்ற வறுக்கும்
        வாமன் வாய்மை யேமக் கட்டுரை
        யிறந்த காலத் தெண்ணில் புத்தர்களும்”

என்று மணிமேகலை கூறுவது காண்க.

    இந்த
அவலோகிதர் இடத்திலே அகத்திய முனிவர் தமிழ்மொழியைக் கற்றார் என்பது
தமிழ்நாட்டுப் பௌத்தர்களின் நம்பிக்கை. வீரசோழிய நூலாசிரியராகிய
புத்தமித்திரர் இதனைக் கூறுகிறார்.

ஆயுங்
குணத்தவ லோகிதன்
பக்கல்
அகத்தியன்கேட்

        
டேயும் புவனிக்
கியம்பிய
தண்டமிழ்

…”

என்று அவர் கூறுகிறார்.

    அவலோகிதரைப்
பௌத்தர்கள் வணங்குகிறார்கள். தமிழ்நாட்டிலும் பௌத்தமதம் பரவியிருந்த
காலத்தில் அவலோகிதர் உருவ வழிபாடு நடந்து வந்தது.  நாகைப்பட்டினத்தில்
இருந்து கிடைத்த அவலோகிதரின் செம்பு உருவங்களைச் சென்னைக் காட்சிச்
சாலையில் இன்றும் காணலாம்.



https://sites.google.com/site/budhhasangham/Home/mylaiseeni/mylaiap4

4. ஆசிவக மதம்

    அழிந்தொழிந்துபோன இந்த மதம் இப்போது முழுதும் மறக்கப்பட்டிருப்பதால், இதைப் பற்றிக் கூறுவது அமைவுடையது.

    பௌத்த,
ஜைன, வைதீக மதங்களைப் போலவே, இந்த ஆசீவக மதமும் வடஇந்தியாவில் தோன்றியது.
இந்த  மதத்தை உண்டாக்கினவர் மஸ்கரி புத்திரர் என்பவர். பாலி மொழியில்
இப்பெயர் மக்கலி புத்த என்று வழங்கப்படுகின்றது. மாட்டுத் தொழுவம் என்று
பொருள்படும் ‘கோசால’ என்னும் அடைமொழி கொடுத்துக் கோசால மக்கலி புத்த
என்றும் இவர் வழங்கப்படுவர். ஏனென்றால், இவர் மாட்டுத் தொழுவத்தில்
பிறந்தார் என்று சொல்லப்படுகின்றது. தமிழ் நூல்கள் இவரை மற்கலி என்று
கூறும்.

    ‘மக்கலி’ என்பது வடநாட்டில்
பண்டைக்காலத்தில் இருந்த இரந்துண்டு வாழும் ஒருவகைக் கூட்டத்தார்க்குப்
பெயர் என்றும், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர் ஆகையால் இவருக்கு ‘மக்கலி
புத்திரர்’ என்னும் பெயர் வந்ததென்றும் சிலர் கூறுவர். ‘மக்கலி’ என்பது
இவருடைய தந்தையின் பெயர். ஆகையால் இவருக்கு ‘மக்கலி புத்திரர்’ என்னும்
பெயர் வழங்கியதென்று வேறு சிலர் உரைப்பர்.

    மக்கலி
அல்லது மற்கலி என்பவர், ஆருகத மதத்தையுண்டாக்கிய மகாவீரரும், பௌத்த
மதத்தையுண்டாக்கிய கௌதமபுத்தரும் உயிர்வாழ்ந்திருந்த அதே காலத்தில்
இருந்தவர். மகாவீரர் ஆருகத மதக்கொள்கையை உலகத்தாருக்குப் போதித்து வந்த
காலத்தில் அவரது புகழையும் செல்வாக்கையும் கேள்வியுற்ற மற்கலி அவரிடம்
சென்று அவரைச் சார்ந்திருக்க விரும்பினார். ஆனால், மற்கலியின் மாறுபட்ட
ஒழுக்கங்களையும் குணங்களையும் அறிந்த மகாவீரர், அவர் தம்மைச் சார்ந்திருக்க
உடன்படவில்லை. ஆயினும், மற்கலி எவ்வாறோ மகாவீரரின் உடன்பாடு பெற்று,
அவருடன் சில ஆண்டு தங்கியிருந்தார். பின்னர், அவருடன் மாறுபட்டுத் தனியே
பிரிந்துபோய், ஒரு புதிய மதத்தை உண்டாக்கினார். அதுதான் ‘ஆசிவக மதம்’
அல்லது ‘ஆஜீவகமதம்’ என்பது. ஆருகத மதக்கொள்கைகள் சிலவற்றையும், தாம் உண்மை
என்று கண்ட கொள்கைகளையும் திரட்டி, மற்கலி இந்த மதத்தை உண்டாக்கினாரென்று
சொல்லப்படுகின்றது.
 
    சற்றேறத்தாழ, கி.மு. 500 இல்
மற்கலி காலமானார் என்று கருதப்படுகின்றது. இவர் காலஞ்சென்ற பதினாறு
ஆண்டுகளுக்குப் பின்னர், மகாவீரர் வீடுபெற்றார் என்பர். மாகாவீரர்
வீடுபெற்ற சில ஆண்டுகளுக்குப் பின்னர், கௌதமபுத்தர் நிர்வாணம் அடைந்தார்.

    ஆசீவகர், பௌத்தர், ஜைனர், வைதீகர் ஆகிய மதத்தவர்களுக்குள் எப்போதும் சமயப்பகை இருந்து கொண்டிருந்தது.

    ஆசீவக
மதக்கொள்கைகளைக் கூறும் நூலுக்கு ‘நவகதிர்’  என்பது பெயர். இந்த நூலில்
நில அணு, நீர் அணு, தீ அணு, வளி அணு, உயிர் அணு என்னும் ஐம்பொருளைப்
பற்றிக் கூறியுள்ளதென்பர். கருமை, நீலம், செம்மை, பொன்மை, வெண்மை,
தூயவெண்மை என்னும் ஆறுவகைப் பிறப்பு உண்டென்பதும், தூய வெண்மைப்
பிறப்புத்தான் மிக உயர்நிலைப் பிறப்பென்பதும், இப்பிறப்பினை அடைந்தவர் தாம்
வீட்டுலகம் சேர்வர் என்பதும் இந்த மதக்கொள்கை. எண்பத்து நான்கு இலட்சம்
மகா கல்ப காலம் வரையில் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்திறந்து
உழலுமென்றும், அந்தக் காலம் கடந்ததும் அவை வீடுபேறடையுமென்றும், இந்த
நியதிமாறி உயிர்கள் வீடு பேறடையாவென்றும் கொண்டது இந்த மதம் என்பர். இந்த
நியதிக்கு நூலுருண்டை உதாரணமாகக் கூறப்படும். ஒரு நூலுருண்டையைப்
பிரித்தால், நூல் எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு வரையில்தான் அது நீளுமே
தவிர, அதற்குக் குறைவாகவோ அதிகமாகவோ நீளாதது போல, உயிர்கள் யாவும்
மேற்சொன்ன நியதிக்குக் கட்டுப்பட்டே நடக்கும். நல்லறிவு பெற்று நல்ல
செயல்களைச் செய்பவன் விரைவில் வீடு பெறான்.  அவனுக்கு நியமிக்கப்பட்ட காலம்
வரையில் அவன் பிறந்து இறந்து உழன்றே ஆகவேண்டும். மோட்சமடையும்
நிலையிலிருந்து ஒருவன் காலநியதியைக் கடந்து, தீயகருமங்கள் செய்து மீண்டும்
பிறந்திறந்து உழல முயன்றாலும், அவன் அவ்வாறு செய்ய இயலாது என்பதும்
அவனுக்கு ஏற்பட்ட நியதிப்படி அவன் வீடுபேறடைந்தாக வேண்டும் என்பது இம்மதக்
கொள்கைகளில் சிலவாம்.

    நவகதிரையன்றி, ‘ஆதித்தியம்’
என்னும் நூலும் இந்த மதத்தாருக்குண்டென்று தெரிகின்றது. இது, “ஆசீவக சங்க
சமயத்தவருக்கு ஆதித்தியமென்பதொரு நூலுண்டு. மற்றது ஆதித்தனைப்
பற்றியிருக்கும்; அது சோதிசாத்திரமென உணர்க. அன்றியேயும், ஆதித்தனைப் போல
மீண்டும் அவர் வானமண்டல வரவுடையாரெனப்படுவர்” என்று கூறும் தக்கயாகப்பரணி
(183-ஆம் தாழிசை) உரைப்பகுதியினால் இது அறியப்படும்.

    மற்கலிக்குப்
‘பூரணர்’ என்னும் பெயரும் உண்டு. களங்கமற்ற ஞானமுடையவராகலின், அவருக்கு
இப்பெயர் உண்டாயிற்றென்பர். இந்தப் பூரணருடைய இயல்பு கீழ்க்கண்டவாறு
‘நீலகேசி’  என்னும் நூலில் கூறப்பட்டிருக்கின்றது.

        ‘உரையா னிறைவ னுணலு மிலனாய்த்
        திரையா னரையான் றெரிவில் லுருவம்
        வரையா வகைவா னிடுவில் லனையன்
        புரையா வறிவிற் புகழ்பூ ரணனே.’
                                        (ஆஜீவக வாதச் சருக்கம் 15 - ஆம் செய்யுள்)

    (உரை)
‘வாக்கியப் பிரவிருத்தியும், புத்தியும், நரை திரை
முதலாயினவுமுடையனல்லனாகி ஆகாசதலத்து இந்திர தனுசுபோலத் தோன்றும்
தோற்றத்தையுடையனாகிக் குற்றப்படாத அறிவையுடையவன் பூரணனென்னும் எம்முடைய
ஆப்தன் என்றவாறு.’

    ஆசீவக மதத்துறவிகள் முதுமக்கட் சாடியில் அமர்ந்து தவம் செய்தனர் என்பது தக்கயாகப்பரணியுரையினால் அறியப்படுகின்றது. இதனை,

        ‘தாழியிற் பிணங்களுந் தலைப்படா வெறுந்தவப்
        பாழியிற் பிணங்களுந் துளப்பெழப் படுத்தியே’

என்னும்
376-ஆம் தாழிசைக்கு உரையாசிரியர் ‘தாழி-முதுமக்கட் சாடி .. தாழியிற்
பிணமென்றது, ஆருகதரிலே ஆசீவகர் பெருமிடாக்களிற் புக்குத் தவம்செய்வராதலின்,
அவரைச் சுட்டிநின்றது’ என்று எழுதியிருப்பதினின்றும் துணியலாம்.

    மேலே
காட்டிய உரைப்பகுதியில், ஆருகதரிலே ஆசீவகர் என்று காணப்படுகிறது. அஃதாவது,
ஆசீவகமதம் ஆருகதமதமாகிய ஜைனமதத்தின் ஒரு பிரிவு என்று
கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், ‘மணிமேகலை’,'நீலகேசி’ என்னும் நூல்களில்,
ஆருகதமதம் (ஜைனம்) வேறு, ஆசீவக மதம் வேறு என்று தெளிவாகக்
கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், பிற்காலத்தில் இந்த மதம் ஜைன மதத்தின் ஒரு
பிரிவு எனத் தவறாகக் கருதப்பட்டது. இத்தவற்றினைத்தான் மேலே காட்டியபடி
தக்கயாகப்பரணி உரையாசிரியர் எழுதியிருக்கிறார். நிகண்டுகளும் ஆசீவக மதம்,
ஆருகத மதத்தின் பிரிவு என்றே கூறுகின்றன.

    ‘சாவகர் அருகர் சமணர் ஆகும்;
    ஆசீ வகரும் அத்தவத் தோரே’             (சேந்தன் திவாகரம்)

    ‘சாவகர் அருகர் சமணர் அமணர்
    ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே’      (பிங்கலநிகண்டு)

    ‘சிவஞான
சித்தியார்’ என்னும் சைவ சமய நூலிலே, இந்த மதம் ஜைன மதத்தின் பிரிவுகளில்
ஒன்றாகக் கூறியிருக்கின்றது. இந்தத் தவற்றினை ஞானப்பிரகாசர் என்னும்
உரையாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கின்றார். ‘திகம்பரமொப்பினும்
அநேகாந்தவாதிகளாகிய நிர்க்கந்த ஆசீவகனென்க’ என்று எழுதியிருக்கிறார்.
அஃதாவது, ஆசீவகர் ஜைனரில் திகம்பரரை (நிர்க்கந்தரை)ப் போன்ற
கொள்கையுடையவரெனினும், அவரின் வேறானவர் என்று விளக்கியுள்ளார். ‘மணிமேகலை’,
‘நீலகேசி’ என்னும் இரண்டு நூல்களைத் தவிரப் பிற்காலத்து நூல்களாகிய 
‘சிவஞான சித்தியார்’ , ‘தக்கயாகப்பரணி’, ‘திவாகரம்’,  ‘பிங்கலநிகண்டு’
முதலானவை ஆசீவகமதத்தை (திகம்பர) ஜைன மதம்  என்றே கூறுகின்றன. இவ்வாறு
கருதப்பட்டதற்குக் காரணம் ஆசீவகமதத்தவரும் திகம்பர ஜைன மதத்தவரும்
மேற்கொண்டு வந்த பொதுவான சில கொள்கைகளாகும். உடையின்றி யிருத்தலும்,
குளியாமல் அழுக்குடம்புடன் இருத்தலும் இவை போன்ற சில வெளிப்பார்வைக்குப் 
பொதுவாகத் தோன்றிய கொள்கைகளைக் கண்டு, இவ்விரு சமயத்தவரும் ஒரே
சமயத்தவரென்று தவறாகக் கருதப்பட்டிருக்கலாம். வெளியொழுக்கத்தில் ஒன்றாகத்
தோன்றினாலும் இவ்விருவருடைய தத்துவக் கொள்கைகள் வெவ்வேறானவை. இவ்வாறு
ஆசீவகமதத்தினர் திகம்பர ஜைன மதத்தினராகப் பிறகாலத்தில் தவறாகக்
கருதப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமன்று வடநாட்டிலும் அவர் இவ்வாறே
கருதப்பட்டு வந்தனர்.

    இந்த மதத்தைப் பற்றிய உண்மை
வரலாறுகளும் கொள்கைகளும் இப்போது முழுவதும் கிடைக்கவில்லை. இப்போது
கிடைப்பன எல்லாம் இந்த மதத்தின் பகைவர்களால் எழுதப்பட்டவை. ஆகவே, நடுநின்று
கூறாமல் சார்பு பற்றிக் கூறியுள்ளன என்று கருதப்படுகின்றது. ‘மணிமேகலை’
என்னும் பௌத்த நூலிலும்  (சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதை),  ‘நீலகேசி’
என்னும் ஜைன நூலிலும் (ஆசீவகவாதச் சருக்கம்),  ‘சிவஞான சித்தியார்’ 
என்னும் சைவ நூலிலும் (பரபக்கம் ஆசீவக மதம்) இந்த மதக்கொள்கைகள் எடுத்துக்
கூறி மறுக்கப்பட்டுள்ளன. இந்த மதத்தைப் பற்றி அறிய விரும்புவோர்க்கு
மேற்சொன்ன தமிழ் நூல்களும் (Encyclopaedia of Religion and Ethics by James
Hashings)  என்னும் நூலும் உதவி புரியும்.

    இந்த
மதம் தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் பரவியிருந்தது. தமிழ்நாட்டிலே சமதண்டம்
என்னும் ஊரிலே இந்த மதத் தலைவர்கள் இருந்ததாக ‘நீலகெசி’ என்னும் நூல்
கூறுகின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கோவலனுடைய
மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட
வணிகன், கோவலனும், கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை
வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவக
மதத்திற் சேர்ந்து துறவுபூண்டதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.

        ‘கண்ணகி தாதை கடவுளர் கோலத்
        தண்ணலம் பெருந்தவத் தாசீ வகர்முன்
        புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும்’
                                                  (நீர்ப்படைக்காதை)

என வரும் அடிகளால் அறியலாம்.

    இராசராச
சோழன் காலத்தில் பொறிக்கப்பட்ட சிலாசாசனங்களில் ‘ஆசுவ கடமை’ என்னும் ஆயம்
(வரி) குறிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு, ஆசீவகமதத்தாருக்கு அக்காலத்தில்
ஆயம் விதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுவர் சிலர். இதை மறுத்து, சாசனங்களில்
கூறப்பட்டுள்ள ‘ஆசுவ கடமை’ என்பது செம்பு அல்லது பித்தளைப் பாத்திரங்களைச்
செய்யும் கன்னாருக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறிக்குமே தவிர, ஆசீவக
மதத்தாருக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறிக்காது என்றும், அவ்வாறு கூறுவது
தவறு என்றும் பேராசிரியர் திரு. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் தாம்
பதிப்பித்துள்ள ‘நீலகேசி’ யின் ஆங்கில முன்னுரையில் விளக்கமாக
எழுதியிருக்கின்றார்கள். ஆகவே,  ஆசீவக மதத்தாருக்கு இறை
விதிக்கப்பட்டிருந்ததாகக் கருதுவது தவறாகும்.

https://sites.google.com/site/budhhasangham/Home/mylaiseeni/mylaiap5


5. மணிமேகலை நூலின் காலம்

    மணிமேகலையின்
காலத்தை ஆதாரத்துடன் ஆராய்ந்து எழுதுவதென்றால், அது பெரியதொரு தனி நூலாக
முடியும். ஆதலின், மிகச் சுருக்கமாக எழுதுவோம். மணிமேகலையும் 
சிலப்பதிகாரமும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டவை என்பதே பலரின்
கொள்கை. ஆயினும் சிலர் மட்டும் ஐயப்பாட்டிற்கிடமான சில ஆதாரங்களைக்
காட்டி, இதனைப் பிற்காலத்து நூல் என்று கூறுவர். ஈண்டு,  கி.பி. இரண்டாம்
நூற்றாண்டின் இறுதியில் மணிமேகலை எழுதப்பட்டதென்பதற்கான ஆதாரங்களை முதலில்
எடுத்துக்காட்டிப் பின்னர், இதனைப் பிற்காலத்து நூல் என்று கூறுவோரின்
கூற்று ஆதாரமற்றதென்பதை விளக்குவோம்.

    ‘மணிமேகலை’யை
இயற்றிய ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரும், ‘சிலப்பதிகாரத்தை’  இயற்றிய
இளங்கோ அடிகளும் நண்பர்களென்பதும், சிலப்பதிகாரக் காவியத்தின் தொடர்ச்சியே
மணிமேகலைக் காவியம் என்பதும் யாவரும் ஒப்புக்கொண்ட உண்மை. அன்றியும் இளங்கோ
அடிகளின் தமையனான சேரன் செங்குட்டுவனுக்கும் சீத்தலைச் சாத்தனார் உற்ற
நண்பர். கன்ணகியின் வரலாற்றினைச் சீத்தலைச்சாத்தனார் சொல்லக் கேட்டுக்
கண்ணகியின் கற்பினைப் பாராட்டி அவளுக்குக் கோயில் அமைத்த செங்குட்டுவ
மன்னன், இலங்கைத் தீவை அரசாண்டிருந்த கஜபாகு (கயவாகு) என்னும் அரசனைப்
பத்தினிக் கடவுளான கண்ணகியின் விழாவுக்கு அழைத்திருந்தான். கஜபாகு மன்னனும்
இவ்விழாவுக்கு வந்திருந்ததோடு, இலங்கைக்குச் சென்று அங்கும் கண்ணகி
வணக்கத்தை ஏற்படுத்தினான். இன்றைக்கும் சிங்களவர் ‘பத்தினித் தெய்யோ’
(பத்தினி தெய்வம்) என்று கண்ணகியைக் கொண்டாடி வருகின்றனர். பத்தினி தெய்வ
வணக்கத்தை இலங்கையில் ஏற்படுத்திய கஜபாகு வேந்தன் கி.பி. 171 முதல் 193
வரையில் இலங்கையை அரசாண்டான். இவனுக்கு ‘கஜபாகு காமினி’ என்னும் பெயரும்
உண்டு. எனவே, கஜபாகு நண்பனான சேரன் செங்குட்டுவனும், இளங்கோவடிகளும்,
சீத்தலைச் சாத்தனாரும் ஒரே காலத்தவர் என்பது பெறப்பட்டது. ஆகவே,
மணிமேகலையைச் சீத்தலைச் சாத்தனார்  கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில்
இயற்றியிருக்க வேண்டும்.

    மணிமேகலை நூலில் இருபத்தேழாவது காதையில்

        “வேத வியாகனுங் கிருத கோடியும்
        ஏதமில்  சைமினி யெனுமிவ் வாசிரியர்
        பத்து மெட்டு  மாறும் பண்புறத்
        தத்தம் வகையாற் றாம்பகர்ந் திட்டனர் “

என
வரும் அடிகளிற், ‘கிருதகோடி’ என்னும் ஆசிரியரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
“கிருத கோடி என்பது மீமாம்சை சாத்திரமாகிய வேதாந்த சூத்திரத்திற்குப்
‘போதாயனர்’ என்பவர் இயற்றிய உரை. ‘பிரபஞ்ச ஹ்ருதயம்’ என்னும் சமஸ்கிருத
நூலில், மீமாம்சை சாஸ்திரம் முழுவதுக்கும் போதாயனர் என்பவர் ஒரு பாஷ்யம்
(விரிவுரை) எழுதினார் என்றும், அந்த உரைக்கு ‘கிருதகோடி’ என்பது பெயர்
என்றும், இந்த உரை மிக விரிவாக இருந்தது பற்றி ‘உபவர்ஷர்’ என்பவர், அதனைச்
சுருக்கி அமைத்தனர் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. வேதாந்த
சுத்திரத்திற்கு இராமாநுசர் எழுதிய ‘ஸ்ரீபாஷ்யம்’ என்னும் உரையிலும்,
போதாயனர் வேதாந்த சூத்திரத்திற்குப் ‘பிரம்மசூத்திரம்’ என்னும்
விருத்தியுரை எழுதினார் என்றும், அந்த விரிவுரையைப் ‘பூர்வாசாரியர்
சுருக்கமாக அமைத்தார்’ என்றும் கூறியிருக்கின்றார். இங்கு இவர்
‘பூர்வாசாரியார்’ என்று கூறுவது உபவர்ஷரை. இந்த உபவர்ஷர் என்பவர்,  கி.பி.
மூன்றாம்  நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் அல்லர் என்பது ஆராய்ச்சி வல்லோர்
முடிவு. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்த உபவர்ஷருக்கு, முன் மீமாம்சை
சாத்திரத்துக்கு ஒரே ஓர் உரை இருந்ததென்றும், அது போதாயனர் எழுதிய
‘கிருதகோடி’ என்னும் உரை என்றும், இந்தக் ‘கிருதகோடி’ உரை எழுதிய போதாயனர்
கி.பி. முதல் நூற்றாண்டுக்கும்  இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட
காலத்தில் வாழ்ந்திருந்தவர் என்றும் ஆராய்ச்சிவல்ல அறிஞர் முடிவு
கட்டியுள்ளனர். எனவே, கிருதகோடி ஆசிரியரைக் குறிப்பிடுகின்ற ‘மணிமேகலை’
அவ்வுரை பெரிதும் வழக்காற்றிலிருந்த   கி.பி. முதலாவது அல்லது  இரண்டாவது 
நூற்றாண்டுகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதனைப் பற்றி முற்றும் விளக்கி
எழுதினால் இடங்கொள்ளும் என்றஞ்சிச் சுருக்கமாகக் குறிக்கப்பட்டது. இதனை
நன்குணர வேண்டுவோர் கீழ்க்கண்ட ஆங்கில நூல்களினால் ஐயமறத் தெளியலாம்.
(Vedanta Commentators before Sankaracharya by P.V. Kane, Proceedings,
Fifth Indian Oriental Conference, Vol II Manimekhalai in its Historical
Setting by Dr. S. Krishnaswami Aiyengar.)

    மணிமேகலையில்
கூறப்பட்டுள்ளது ஈனயான பௌத்த மதம்; மகாயான பௌத்த மதத்தைப் பற்றி அதில்
கூறப்படவில்லை. எனவே, மணிமேகலை மகாயான பௌத்தக் கொள்கைகள் பரவுதற்கு முன்பு
எழுதப்பட்ட நூல் என்று விளங்குகின்றது.

    மகாயான
பௌத்த மதத்தை உண்டாக்கியவர் நாகார்ஜூனர். இவரும் இவர் மாணவராகிய
ஆரியதேவரும் மகாயான மத நூல்களை இயற்றி அந்த மதத்தைப் பரவச் செய்தனர்.
நாகர்ஜூனர், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர். எப்படி
எனில், கூறுவோம்: ‘குமாரஜீவர்’ என்னும் ஆசிரியர் கி.பி 399 முதல் 417
வரையில் பௌத்த நூல்களை எழுதினார் என்று சீன தேசத்து நூல்களினின்றும்
தெரிகின்றது. இந்தக் குமாரஜீவர் கி.பி. 400 இல் நாகர்ஜூனர் சரிதத்தையும்,
அவர் மாணவராகிய ஆரியதேவரது சரிதத்தையும் எழுதியிருக்கின்றார்.  எனவே இவரது
காலத்துக்கு ஒன்றிரண்டு நூற்றாண்டுக்கு முன்பு நாகர்ஜூனர்
வாழ்ந்திருந்தவராதல் வேண்டும். நாகர்ஜூனர் ‘சாதவாகன’ அரசர்களின் காலத்தில்
இருந்தவர் என்று தெரிகின்றபடியாலும், சாதவாகன அரசாட்சி கி.பி. மூன்றாம்
நூற்றாண்டின் முற்பகுதியின் மங்கிவிட்ட படியாலும், நாகர்ஜூனர் அந்த
நூற்றாண்டின் முற்பகுதியில், அஃதாவது கி.பி.  250 இல் வாழ்ந்திருந்தவராதல்
வேண்டும். ஆசிரியர் கீத் (Prof Keith) என்பவர்,  நாகர்ஜூனர் ஏறக்குறையக்
கி.பி 200-இல் வாழ்ந்திருந்தவர் என்று கூறுவதும் இதனை ஆதரிக்கின்றது. எனவே
நாகர்ஜூனர்  கி.பி 200-250 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்
வாழ்ந்திருந்தவர் என்பது தெளிவாகின்றது. மணிமேகலையில் ‘சமயக்கணக்கர்
தந்திறங்கேட்ட காதை’ யில் தமிழ் நாட்டிலிருந்த பல்வகைச் சமயங்களைப் பற்றிக்
கூறுகின்ற சீத்தலைச் சாத்தனார், ஈனயான மதத்துக்கு மாறுபட்ட கொள்கைகளையும்
தத்துவங்களையும் உடைய மகாயான மதத்தைப் பற்றிக் கூறாதிருப்பது, நாகர்ஜூனரது
கொள்கைகள் பரவுவதற்கு முன்னே மணிமேகலை இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்பதைக்
காட்டுகிறது. எனவே, மணிமேகலை நாகர்ஜூனருக்கு முன், அஃதாவது கி.பி இரண்டாம்
நூற்றாண்டின் இறுதியில், இயற்றப்பட்டதாதல் வேண்டும். இதனைக் கீழ்க்கண்ட
ஆங்கில நூல்களில் விளக்கமாக காணலாம். (The Buddhism of Manimekalai by Dr.
S. Krishnaswami Aiyengar in Buddhist Studies, Edited by B.C. Law;
Manimekhalai in its Historical Setting by Dr. S. Krishnaswami Aiyengar.)

    சங்கச் செய்யுள்களில் பல்லவர்களைப் பற்றிக்
கூறப்படவில்லை. அதிலும் சிறப்பாகத் தமிழ்நாட்டு வேந்தர்களை ஆங்காங்குக்
குறிப்பிட்டுச் செல்கின்ற சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பல்லவ அரசர்களைக்
கூறவில்லை. பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு தமிழ்நாட்டின்
வடபகுதியை அரசாண்ட பேர் பெற்ற மன்னர். இவர்களைப் பற்றி கூறப்படாதது பற்றி,
பல்லவர் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னர் ‘மணிமேகலை’ இயற்றப்பட்டிருக்க
வேண்டும். காஞ்சிபுரத்தை அரசாண்டவன் சோழமன்னன் என்றும், அவன் ‘நலங்கிள்ளி’
என்பவன் தம்பி ‘இளங்கிள்ளி’ என்பவன் என்றும் மணிமேகலை கூறுகின்றது. பல்லவர்
முதல் முதல் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியது கி.பி நாலாம்
நூற்றாண்டிலென்றும், கி.பி மூன்றாம் நூற்றாண்டு  வரையிலும் சோழர்கள்
சோழநாட்டிலும் தொண்டை நாட்டிலும் வலிமை பெற்றிருந்தார்களென்றும்
‘குமாரவிஷ்ணு’ அல்லது ‘ஸ்கந்தவர்மன்’ என்னும் பெயருள்ள பல்லவ அரசன்
தமிழ்நாட்டின் வடக்கிலிருந்து வந்து காஞ்சிபுரத்தை முதல் முதல்
கைப்பற்றினானென்றும் அவன் காஞ்சியைக் கைப்பற்றியது ஏறத்தாழக் கி.பி. 325
ஆம் ஆண்டென்றும் கூறுவர் ஹீராஸ் பாதிரியார் (Studies in Pallava History by
Rev. H. Hearas.)

    பல்லவர் காஞ்சியைச்
சோழரிடமிருந்து முதல் முதல் கைப்பற்றியது கி.பி. 325 ஆம் ஆண்டில்
ஆகையாலும், மணிமேகலையில் கூறப்பட்டுள்ள காஞ்சியை அரசாண்ட மன்னன் சோழர்
குடும்பத்தைச் சேர்ந்தவனாகையாலும், மணிமேகலை இந்த ஆண்டுக்கு முன்
இயற்றப்பட்டதாதல் வேண்டும். ஆனால், மேலே கூறப்பட்ட கஜபாகுவின் காலத்தையும்
செங்குட்டுவன் காலத்தையும், நாகர்ஜூனர் காலத்தையும், கிருதகோடி உரை இயற்றிய
‘போதாயனர்’ காலத்தையும் ஒப்பிட்டு நோக்கும்போது மணிமேகலை கி.பி. இரண்டாம்
நூற்றாண்டின் கடைசியில் இயற்றப்பட்டதாதல் வேண்டும் என்பது ஐயமற
விளங்குகின்றது.

    மணிமேகலை கி.பி. இரண்டாம்
நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை விளக்க இன்னும்
வேறு சான்றுகள் வேண்டுவதில்லை. இனி, இந்த நூல் இரண்டாம் நூற்றாண்டுக்குப்
பின் இயற்றப்பட்டதென்று கூறுவோர் காட்டும் சான்றுகளை எடுத்துக்காட்டி, அவை
தக்க சான்றுகளல்ல என்பதை விளக்குவோம்.

    1.
மணிமேகலையில் ‘குச்சரக்குடிகை’ என வரும் சொற்றொடருக்கு உரையெழுதிய டாக்டர்
உ. வே. சாமிநாத அய்யர் அவர்கள், ‘’கூர்ச்சர தேசத்துப் பணி அமைந்த சிறிய
கோயில்’   என்று எழுதியிருக்கிறார்கள். இதனை உடும்புப் பிடியாகப்
பிடித்துக் கொண்டு ஒரு சிலர், ஏனைய ஆதாரங்களையெல்லாம் மறந்துவிட்டு,
மணிமேகலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் இயற்றப்பட்ட தென்பர்.
கூர்ச்சரர்  கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் இந்தியாவுக்கு வரவில்லை
என்றும், கூர்ச்சரரைக் குறிப்பிடுகிறபடியால், மணிமேகலை கி.பி. ஐந்தாம்
நூற்றாண்டுக்குப் பிறகு  இயற்றப்பட்ட தென்றும் கூறுவர். இந்த ஆராய்ச்சி
முடிவை எதிர்த்தும், ஆதரித்தும் ‘குச்சரக்குடிகை’க்கு வேறு பொருள்
கற்பித்தும் அறிஞர் பலர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல கட்டுரைகள்
எழுதியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் ஈண்டுக் காட்டப்புகின் விரியும்.
ஆனால், இந்த ஆராய்ச்சி ஐயப்பாட்டுக்கு இடமான முடிவை அடிப்படையாகக்
கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்ட விரும்புகின்றோம். ‘குச்சரக்குடிகை
தன்னகம் புக்கு’ என வரும்   மணிமேகலை அடிகளுக்குக் ‘குஞ்சக்குண்டிகை
தன்னகம் புக்கு’ என்னும் பாடபேதமும் காட்டப்பட்டுள்ளது; (18 ஆம் காதை, 145)
இந்தப் பாடபேதம் முதற் பதிப்பில் காட்டப்படவில்லை. எதிர்வாதங்கள் எழுந்த
பின்னர், பிற்பதிப்புக்களில் இந்தப் பாடபேதம் காட்டப்பட்டுள்ளது. இந்தப்
பாடபேதம் முதற் பதிப்பிலேயே காட்டப்பட்டிருக்குமானால், பல ஆராய்ச்சியாளரின்
காலமும் உழைப்பும் வீணாக்கப்பட்டிரா. ஆனால், முதல் பதிப்பின் பாடத்தை
மட்டும் வைத்துக்கொண்டு, அதன் உரையையும் தெய்வவாக்காக கொண்டு,
ஆராய்ச்சியாளரிற் சிலர் மணிமேகலை  கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப்
பிற்பட்டது என வாதித்தனர். இந்த வாதத்தை V.A. Smith  போன்ற சில மேல்நாட்டு
அறிஞரும் நம்பி இடர்ப்பட்டனர். நேர்மையான பாடம் ‘குச்சரக் குடிகை’யா அல்லது
‘குஞ்சக் குண்டிகை’ யா என்பதை முடிவுகட்டிய பின்னரே இந்த ஆராய்ச்சியில்
இறங்கவேண்டும். இந்த ஐயப்பாட்டைத் தீர்க்காமல், ‘கூர்ச்சர தேசத்துப்
பணியமைந்த சிறிய கோயில்’  என்னும் உரையை ஒப்புக்கொண்டு முடிவுகட்டுவது,
வழுக்கு நிலத்தில் ஊன்று கோலின்றி நடப்பது போலாகும்.

    இனி
‘குச்சரக்குடிகை’ என்னும் பாடந்தான் சரியானதென்று
ஒப்புக்கொள்வதாயிருந்தாலும், இச்சொற்றொடர்க்கு உரையாசிரியர் காட்டிய பொருள்
தவறு என்றும், இதற்கு வேறு பொருள் இருக்கவேண்டும் என்றும் தோன்றுகின்றது.
கூர்ச்சரர் கட்டடத்தொழிலில் பேர்பெற்றவர் அல்லர் என்பதை நிலைநாட்டி, இந்த
உரையை மறுத்து, டாக்டர் கு. கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் தாம் எழுதிய
Manimekhalai in its Historical Setting  என்னும் நூலில் விரிவாக
எழுதியிருக்கிறார்கள். விரிவஞ்சி அதனை ஈண்டுக் குறிக்காமல் விடுகின்றோம்.

    ‘குடிகை’
எனபதற்குச் ‘சிறிய கோயில்’ என்று எழுதப்பட்டுள்ள உரையும் சரியானதாகத்
தோன்றவில்லை. ‘குடிகை’ என்பதற்கு ஓலையால் வேய்ந்த  குடிசை என்பதே பொருள்
எனத்தோன்றுகின்றது. இந்தப் பொருளிலேயே இந்தக் ‘குடிகை’ என்னும் சொல்
மணிமேகலையில் வேறு இடத்திலும் வந்துள்ளது.

        “தண்டு  மண்டையும் பிடித்துக் காவலர்
        உண்டுகண் படிக்கும் உறையுட் குடிகையும்.”

    நகரத்தை
இரவு முழுதும் காவல் காத்த காவலாளர் காலையில் ஊண் உண்டு படுத்து உறங்கும்
குடிசையை (ஓலையால் வேய்ந்த  குடிசை) இது குறிப்பிடுகின்றது. இதற்குக்
குறிப்புரை எழுதியவர், “குடிகை -பர்ணசாலை. ‘குடிகா’ என்னும் வடமொழிச்
சிதைவென்பர். இஃது இக்காலத்து ‘குடிசை’ என்று வழங்குகின்றது” என்று
எழுதியிருக்கின்றார். இந்த உரை மிகவும் பொருத்தமானதே. ஆனால்,   ‘குச்சரக்
குடிகை’ என்பதற்குப் பொருள் எழுதியபோது, சிறிய கோயில், அஃதாவது,
கட்டடத்தால் அமைந்த சிறிய கோயில் என்னும் பொருள்பட எழுதியுள்ளார்.
ஓரிடத்தில் ‘குடிசை; என்றும், இன்னோரிடத்தில் ‘கட்டடம்’ என்றும்
எழுதியிருக்கின்றார். இஃது எவ்வாறு பொருந்தும்?
        “உறையுட் குடிகை யுள்வரிக் கொண்ட
        மறுவில் செய்கை மணிமே கலைதான்”
        
        “உலக வறவியும் முதியாள் குடிகையும்”

என
வரும் அடிகளில், ‘குடிகை’ என்பதற்குக் குடிசை, ஓலையால் வேய்ந்த பர்ணசாலை
என்றே பொருள் கொள்ளத் தக்கதாயிருக்கின்றது. சம்பாபதி கோயில் சுடுகாட்டை
அடுத்திருந்த ஒரு கோயில். ‘உலகவறவி’ என்னும் மன்றத்தில் ஒரு புறத்தில் அஃது
அமைந்திருந்தது. இந்தக் கோயிலின் கூரை ஓலையால் வேயப்பட்டிருந்தது.
இப்பொழுதும் சில கிராமதேவதை கோயில்கள் ஓலைக்கொட்டகையால் அமைந்திருப்பதைக்
காணலாம். ஓலையால் கொட்டகை அமைக்கக் கூர்ச்சர தேசத்திலிருந்து தொழிலாளர்
வரவேண்டுவதில்லை. எனவே, ‘குச்சரக் குடிகை’ என்பதே சரியான
பாடமாயிருந்தாலுங்கூட, அதற்கு வேறு பொருள் இருக்கவேண்டுமே தவிர ‘கூர்ச்சர
தேசத்துப் பணியமைந்த சிறிய கோயில்’  என்னும் பொருள் சிறிதும் பொருந்தாது.
ஆகவே, இதை ஆதாரமாகக் கொண்டு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர்
மணிமேகலை எழுதப்பட்டதென்பது அறிவுக்குச் சிறிதும் பொருத்தமானதன்று. இதனை
மேலும் விளக்கப்புகின் விரியும் என்றஞ்சி இதோடு நிறுத்துகின்றோம்.

    சாவகத்தீவில்
பௌத்த மதம் பெரிதும் பரவியிருந்ததென்பது மணிமேகலையினால் அறியப்படுகின்றது.
‘சாவகம்’ என்பது இப்போதுள்ள் கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றான சுமத்திரா
தீவு என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றார்கள். இந்தச் சுமத்திரா தீவுக்குக்
கி.பி.  400 இல் சென்ற ‘பாஹியன்’ (Fa-Hien)  என்னும் சீனர், அங்குப் பிராமண
மதம் செல்வாக்குப் பெற்றிருக்கிறதென்றும், பௌத்த மதம் தாழ்மையான நிலையில்
இருக்கிறதென்றும் எழுதியிருக்கிறார். ஆனால், கி.பி 600 இல் இந்தத்
தீவுக்குச் சென்ற ‘இத்-ஸிங்’ (It Sing) என்னும் சீனர் இங்குப் பௌத்த மதம்
செழித்தோங்கியிருக்கிறதென்று எழுதியிருக்கின்றார். இதனை ஆதாரமாகச்
சுட்டிக்காட்டி மணிமேகலையில் சாவகத் தீவில் பௌத்தம் செல்வாக்குப்
பெற்றிருந்ததாகக் கூறியிருப்பதனாலும்,  இத்ஸிங்  என்பவரும்  அவ்வாறே
கூறியிருப்பதனாலும், பாஹியன் காலத்தில் அஃது இங்குச் செல்வாக்குப்
பெறாதிருந்தபடியாலும், கி.பி. 400-600 இடைப்பட்ட காலத்தில் சுமத்திரா
தீவில் பௌத்தம் செல்வாக்குற்றிருக்க வேண்டும் என்றும், ஆகவே அதனைக்
குறிப்பிடுகின்ற மணிமேகலை இந்தக் காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும்
என்றும் சில ஆராய்ச்சியாளர் கூறுவர்.

    இஃது
ஐயப்பாட்டுக்கிடமான போலிக் காரணம் என்று திரு. V.R.  இராமச்சந்திர
தீக்ஷிதர் அவர்கள் எழுதியுள்ளதைக் காட்டி விளக்குவோம். இந்தக் கூற்றை இவர்
கீழ்வருமாறு மறுக்கிறார்:

    முதலாவது, பாஹியான் இந்த
விஷயத்தைப் பற்றிச் சரியான செய்தியைத் தரவில்லை. ஒருவேளை, சுமத்திரா
தீவில் இவர் சென்ற பகுதியில் பிராமண மதம் செல்வாக்குப்
பெற்றிருந்திருக்கலாம்.

    இரண்டாவது, ஆபுத்திரன்
சுமத்திரா தீவை அரசாண்டபோது, அஃதாவது கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில்,
செல்வாக்குற்றிருந்த பௌத்த மதம் கி.பி. 400 இல் சீன யாத்திரிகர் சென்றபோது,
செல்வாக்குக் குன்றியிருக்கக் கூடும். பின்னர், மீண்டும் அதன் செல்வாக்கு
நிலைபெற்று, கி.பி 620 இல் சென்ற சீன யாத்திரிகர் காலத்தில்
சிறப்படைந்திருக்கக் கூடும்.

    மூன்றாவது,
மணிமேகலையின் காலத்தைக் கி.பி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில்
அமைக்கவேண்டும். மூன்றாவது சொல்லிய முடிபு எமக்குப் பொருத்தமாகத்
தோன்றவில்லை. மற்ற ஆதாரங்களுக்கும் சான்றுகளுக்கும் இது பொருத்தமாக
இருக்கவில்லை. ஆகவே முதலாவது அல்லது இரண்டாவது சொன்ன முடிவுகளில் ஒன்றையே
நாம் மேற்கொள்ள வேண்டும்.

    இவர் கருத்து
என்னவென்றால், கி.பி. 400-க்கும், 600-க்கும்  இடைப்பட்ட காலத்தில்
மணிமேகலை இயற்றப்பட்டதென்பது ஒப்புக்கொள்ளத் தக்கதல்ல; அது கிறிஸ்து
சகாப்தத்தின் (Buddhism in Tamil Literature. Chapter XXVII, Buddhistic
Studies: Edited by B.C. Law) தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்
என்பது.

    பாஹியன் என்னும் சீன யாத்திரிகர்,
இந்தியாவிலிருந்து சீனாவுக்குப் கப்பல் வழியாகக் கி.பி. 413 இல் சென்றபோது,
இடையிலே யவதீவத்தில் தங்கினார் என்றும், அப்போது அந்தத் தீவில் பௌத்த மதம்
நன்கு பரவியிருக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இவர் கூறுகிற யவதீவம்
என்பது ஜாவா தீவு என்பர் சிலர். சிலர் சுமாத்ரா தீவு என்பர். யவதீவம்
என்பது சுமாத்ரா தீவும் அன்று ஜாவா தீவும் அன்று; மற்றொரு தீவாகிய போர்னியோ
தீவு என்பர் ஆராய்ச்சி வல்லார். ஆகவே சாவகத் தீவில் கி.பி 2 ஆம்
நூற்றாண்டில் பௌத்த மதம் இருந்ததில்லை என்று இவர்கள் கூறுகிற வாதம்
சிறிதும் பொருத்தமற்றது.

    மணிமேகலை சற்று எளிய
நடையில் அமைந்திருப்பதும், அதில் வரும்
‘மாதவி’,'சுதமதி’,'மணிமேகலை’,’சித்திராபதி’,'சங்கதருமன்’ முதலான பெயர்கள்
சங்க நூல்களில் காணப்படாத வடநாட்டுப் பெயர்களாகவிருப்பதும் பற்றி இந்த நூல்
பிற்காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுவர் சிலர்.

    மணிமேகலையை
இயற்றிய சாத்தனார் இந்நூலைப் பண்டிதர்களுக்கு மட்டும் இயற்றினாரில்லை;
புலமை நிரம்பாத மற்றவர்களுக்கும் விளங்கவேண்டும் என்பதே அவரது கருத்து.
ஏனென்றால், பௌத்த மதத்தையும் அதன் கொள்கைகளையும் பல்லோருக்கும்
அறிவிக்கவேண்டும் என்னும் நோக்கத்தோடு இஃது இயறப்பட்டதாகத் தெரிகின்றது.
பௌத்தரும் ஜைனரும் தங்கள் மதக் கொள்கைகளைப் பல்லோருக்கும் விளங்கும்படி
எழுதவும் பேசவும் வேண்டும் என்பது அம்மதங்களின் கொள்கை. ‘பௌத்தரும்
தமிழும்’ அதிகாரம் காண்க.

    மணிமேகலையில்
குறிப்பிட்டுள்ள மக்கட் பெயர்கள் பெரும்பான்மையும் வடமொழிப் பெயர்களாக
இருக்கின்றன வென்பது உண்மையே. வடமொழிப் பெயராக இருப்பது கொண்டு பிற்காலத்து
நூலென்று சொல்வதற்கில்லை. பௌத்தம், ஜைனம் முதலான மதங்கள் வடநாட்டினின்று
வந்த மதங்கள். ஆகையால், அம்மதங்களை மேற்கொண்ட தமிழர்களுக்கு அம்மதச்
சார்பான வடமொழிப் பெயர்கள் அமைப்பது இயல்பு. இப்பொழுதும் தமிழன்
கிறித்தவனாகவோ முகம்மதியனாகவோ மதம் மாறினால் ‘அந்தோனி’, ‘ஜான்’,'ஜோசப்’
முதலிய பெயர்களையாவது, ‘அப்துல்லா’,'ரஹ்மான்’,'யூசூப்’ முதலிய
பெயர்களையாவது அம்மதச் சார்பு பற்றிச் சூட்டிக்கொள்கிறான். அதுபோல, பௌத்த
வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப் பௌத்தர் சூட்டிக்கொண்டதில் வியப்பு இல்லை.
இனி, சங்க நூல்களில் வடமொழிப் பெயர்கள் காணப்படவில்லை என்பதும் தவறு.
சங்கச் செய்யுள்களை இயற்றியவர்களில் இருபது பேருக்கு மேற்பட்டவர்
‘சாத்தனார்’ என்னும் பெயர் கொண்டிருக்கிறார். இப்பெயர் ‘சாஸ்தா’ என்னும்
வடமொழிப் பெயரின் தமிழ்த்திரிபு. ‘(இளம்) போதியார்’ என்னும் பெயர் வடமொழி.
‘நிகண்டனார் (கலைக்கோட்டுத் தண்டனார்)’ என்பது வடமொழிச் சிதைவு. ‘கோவலன்’
என்பது ‘கோபாலன்’ என்பதன் திரிபு. ‘கோதமனார்
பிரமனார்’,'தாமோதரனார்’,'(சோழன்) நல்லுருத்திரன்’,'(ஆவூர்க் காவிதிகள்)
சாதேவனார்’, ‘பிரமசாரி’, ‘பெருங் கௌசிகனார்’, ‘பெரும்பதுமனார்’ முதலிய
பெயர்கள் வடமொழிப் பெயர்களே. இப்பெயருள்ளவர்கள் இயற்றிய செய்யுள்கள்
நற்றிணை, புறநானூறு முதலிய நூல்களில் தொகுக்கப்பட்டுள்ளன. எனவே,
சங்ககாலத்தில் வடமொழிப் பெயர்கள் இருந்ததில்லை என்று கூறுவது தவறு. கி.மு.
மூன்றாம் நூற்றாண்டிலேயே, வடநாட்டவரான ஜைன மதத்தவரும், பௌத்த மதத்தவரும்,
வைதீக மதத்தவரும் தென்னாட்டிற்கு வந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள.
அங்ஙனமிருக்க, கடைச்சங்க நூல்களில் சில வடமொழிப் பெயர்களும் காணப்படுவதில்
வியப்பில்லை. ஆகவே, வடமொழிப் பெயர்கள் காணப்படுவது கொண்டு ‘மணிமேகலை;
காலத்தால் பிற்பட்ட நூலென்று கருதுவது தவறு.

    மணிமேகலை
சிலப்பதிகார வரலாற்று நிகழ்ச்சிகள் சேர சோழ பாண்டியர் ஆட்சிக்காலத்தில்
(கடைச்சங்க காலத்தில்) நிகழ்ந்தவை. அந்நிகழ்ச்சிகள் நடந்த அண்மைக்
காலத்திலேயே இந்நூல்கள் இயற்றப்பட்டவை. ஆகவே இந்நூல்கள் கி.பி 200-க்குள்
எழுதப்பட்டவை. கி.பி. 200-க்குப் பிறகு தமிழ்நாட்டைக் களபரர் பிடித்துக்
கொண்டு ஏறத்தாழக் கி.பி 575 வரையில் அரசாண்டார்கள். ஆகவே கி.பி 200-க்குப்
பின்னர் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் எழுதப்பட்டிருக்க முடியாது. கி.பி
200-க்குள்ளேயே எழுதப்பட்டிருக்க வேண்டும்.


https://www.youtube.com/watch?v=82KPO83rEQc
இஸ்லாம் பற்றி தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் கருத்துக்கள்
Please SUBSCRIBE our Youtube Channel & Like our Facebook Page to keep Update on latest uploads https://www.facebook.com/tntjfazrin123/
||******** PLEASE CHECK DESCRIPTION BELOW FOR MORE USEFUL PLAYLISTS ******** ||

முஸ்லிமல்லாத மக்களுக்கான இஸ்லாம் பற்றிய கேள்வி பதில்கள்
https://www.youtube.com/playlist?list

முஸ்லிமல்லாத மக்களின் பல கேள்விக்கான பதில்கள்
http://www.youtube.com/view_play_list

Question & Answer for Non Muslims
http://www.youtube.com/view_play_list

பீஜேவின் ரமழான் தொடர் உரைகளின் தொகுப்புக்கள் அனைத்தும்
ALL RAMAZAN SPEECHES by PJ watch in one Playlist

https://www.youtube.com/playlist?list

பீஜேவின் முழுமையான உரைகளின் தொகுப்பு

http://www.youtube.com/view_play_list

முக்கிய கருத்துக்களின் தொகுப்பு
http://www.youtube.com/playlist?list=

அனைத்து விவாதங்களின் தொகுப்பு

https://www.youtube.com/playlist?list

தீய குணங்களும் தீர்க்கும் வழிகளும் 2016

https://www.youtube.com/playlist?list

இஸ்லாம் மனித குலத்துக்கு வழங்கிய நன்மைகள்

http://www.youtube.com/playlist?list=

தனித்து விளங்கும் இஸ்லாம்

http://www.youtube.com/playlist?list=

இறைவனின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு
http://www.youtube.com/playlist?list=

Economy in Islam இஸ்லாம் கூறும் பொருளியல்
http://www.youtube.com/playlist?list=

இஸ்லாம் கூறும் குடும்பவியல் 2010
http://www.youtube.com/playlist?list=

நபிமார்கள் வரலாறு Part1
http://www.youtube.com/playlist?list=

நபிமார்கள் வரலாறு Part 2
http://www.youtube.com/playlist?list=

அந்த 72 கூட்டம் யார்?
http://www.youtube.com/playlist?list=

நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள்
http://www.youtube.com/playlist?list=

இஸ்லாத்தின் பெயரால் கட்டுக்கதைகள்
http://www.youtube.com/playlist?list=

மாறும் உலகில் மாறாத இஸ்லாம் ரமழான் தொடர் உரை
http://www.youtube.com/playlist?featu

ஏகத்துவமும் எதிர்வாதமும்
http://www.youtube.com/playlist?list=

நபிகள் நாயகம் கூறிய முன்னறிவிப்புகள்
http://www.youtube.com/view_play_list

முக்கியமான முன்னறிவிப்புகள்
http://www.youtube.com/view_play_list

தினம் ஒரு தகவல்
https://www.youtube.com/playlist?list

ஏனைய தௌஹீத் உலமாக்களின் உரைகள்
http://www.youtube.com/view_play_list

நாத்திகர்களுடன் நடந்த விவாதம்
http://www.youtube.com/view_play_list

Interesting Question & Answers & Important Pionts of Ahmed Deedat
https://www.youtube.com/playlist?list

Ahmed Deedat’s Full Speeches
http://www.youtube.com/view_play_list

Zakir Naik’s Lectures
http://www.youtube.com/view_play_list

MOST POPULAR ENGLISH ISLAMIC SPEECHES

Is Jesus God? Ahmed Deedat VS Erik Bock (Impossible Moment of Opponent Accepting Defeat_ MUST_WATCH)
https://www.youtube.com/watch?v=c59B3

Did Prophet Mohamed(PBUH) didn’t know the Difference between Mary and Miriam? by Ahmed Deedat
https://www.youtube.com/watch?v=yElG4

Did Name of Muhammed Mentioned in the Bible? Response to Sweggart
https://www.youtube.com/watch?v=xLjpl

Is Non Vegetarian Food Permitted? or Prohibited? for a Human Being Dr.Zakir Naik vs Mr.Rashmibhai
https://www.youtube.com/watch?v=7K4ex

Is Jesus God? by Ahmed Deedat Lecture in South Africa
https://www.youtube.com/watch?v=pXHUo

Was Christ Crucified? Deedat vs Wakefeild (Wonderful Debate in Canada)
https://www.youtube.com/watch?v=Tq2mO

Quran or the Bible Preview of UK Debate in South Africa
https://www.youtube.com/watch?v=1AmLs

Muhammed(PBUH) the Prophet of Islam in the Bible
https://www.youtube.com/watch?v=9LLLE

Missionary Inroads by Ahmed Deedat
https://www.youtube.com/watch?v=Yv_Tu



https://www.youtube.com/watch?v=eX88uN9p9p4
புத்தமதமும் சிலை வணக்கமும்
சிலை வணக்கம் உருவ வழிபாடு பல சமூகங்களில் . நிலவி வருகிறது . புத்தர்
சிலை நிறுவுவதில் அதன் பின்னால் சீனா உள்ளது. பற்றிய நந்திவர்மனின் உரை


சிலை
வணக்கம் உருவ வழிபாடு பல சமூகங்களில் . நிலவி வருகிறது . புத்தர் சிலை
நிறுவுவதில் அதன் பின்னால் சீனா உள்ளது. பற்றிய நந்திவர்மனின் உரை



Leave a Reply